த.வா.க. எதிர்ப்பு! சினிமா நிகழ்ச்சி ரத்து!

த.வா.க. எதிர்ப்பு! சினிமா நிகழ்ச்சி ரத்து!
நடிகர் விஷால் தலைமையில் வரும் மே 18ம் தேதி, நாகர்கோயிலில் நடப்பதாக இருந்த நட்சத்திர கலைவிழா,  தமிழக வாழ்வுரிமை கட்சி எதிர்ப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிகழ்ச்சியில், நடிகர்கள் விஷால், தேவயானி, கஸ்தூரி, பாண்டியராஜன், செந்தில், இயக்குநர்கள் எஸ்.ஏ.சி., கே.எஸ்.ரவிக்குமார், பேரரசு, ஆர்.வி.உதயகுமார், இசையமைப்பாளர் தீனா உள்ளிட்டோர் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.  ‘மெகா ஸ்டார் நைட்: கோடையில் ஒரு ஜாலி’ என்று விளம்பரப்படுத்தப்பட்ட ந் நிகழ்ச்சிக்கு, டிக்கெட் கட்டணங்களாக ரூ.500 முதல் ரூ.5000 வரை நிர்ணயிக்கப்படடு இருந்தது.
.
இந்நிலையில், “கடந்த 2009ம் ஆண்டு இதே மே 18ம் தேதிதானே, ஈழத்தில் நடந்த இன அழிப்பு போரில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர்! இந்த நாளை உலகம் முழுதும் உள்ள தமிழர்கள், துக்க நாளாக கடைபிடிக்கின்றனரே! இந்நிலையில், அதே தினத்தில் ஒரு கொண்டாட்ட நிகழ்வு தேவையா?” என்று சமூக வலைதளத்தில் பலரும் ஆதங்கத்துடன் கருத்திட ஆரம்பித்தனர்.
இதற்கிடையே, சோசலிச மையம் என்ற அமைப்பைச் சேர்ந்த இரா.மருதுபாண்டியன்தனது முகநூல் பாக்கத்தில், ” மே 18 என்பது தமிழர்கள் வாழ்வில் துயரம் தோய்ந்த நாள். இலட்சக்கணக்கான தொப்புள்கொடி உறவுகள் அழித்தொழிக்கப்பட்ட நாள்; படுகொலை செய்யப்பட்ட நாள். துயர மிகுந்த இந்த நாளில் கொண்டாட்டத்தை நடத்த நினைக்கிறார்கள் சில கருங்காலி அமைப்புகள். நண்பர்களே! நாம் இதை அனுமதிக்கக் கூடாது” என்று முகநூலில் பதிவிட்டார்.
அவருடன் tamilankural.com இணைய இதழ் சார்பாக பேசினேன். அவர், “கொண்டாட்ட நிகழ்வுகளை மே 18 அல்லாமல் வேறு நாட்களில் வைத்துக்கொள்ளலாம். அன்று நிகழ்ச்சி நடைபெறுவதற்கு தற்போது தமிழக வாழ்வுரிமை கட்சி எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இன்னும் பல கட்சிகள் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக்கும்” என்றார்.
மேலும், இவரது பதிவை, தமிழக வாழ்வுரிமை கட்சியின், எஸ்.பி. உதயகுமார், தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்தார்.அக்கட்சியைச் சேர்ந்த ஜெகதீச பாண்டியனும் இது குறித்து பதிவிட்டார்.
அவர், “குறிப்பிட்ட நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களுடன் பேசினேன். அவர்கள்,  ‘அன்றுதான் நடத்துவோம்,உங்களால் முடிந்ததை பாருங்கள்’ என்று கூறினர். ‘தமிழக வாழ்வுரிமைக்கட்சி ஒரு போதும் இந்த நிகழ்ச்சியை மே 18ல் நடத்த விடாது” என்று பதிவிட்டார்.
குமரி மேற்கு மாவட்ட செயலாளர் செ. ரூபின் ஆன்றணி தனது முகநூல் பக்கத்தில், “மே-18, உலகத் தமிழர்கள் வாழ்வில் துயரம் தோய்ந்த கருப்பு நாள்.அந்நாளில் கூத்தாடிகளின் குத்தாட்டமா ? குலுக்கலாட்டமா ? தமிழர் அமைப்புகள் சார்பில் கருப்புக் கொடிகளுடன் மறியல் போராட்டம் நடத்துவோம்” என்று தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து tamilankural.com இதழின் சார்பாக, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வெளியிட்டு இருந்த மூன்று எண்களை தொடர்புகொண்டோம். நமது அழைப்பு ஏற்கப்படவில்லை.
பிறகு, நடிகர் வி2ஷாலின் உதவியாளராக அறியப்படும் ஹரி என்பரை அழைத்தோம். அவரும் நமது அழைப்பை ஏற்கவில்லை. ஆகவே அவருக்கு வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பினோம். அப்படியும் பதில் இல்லை.
இந்நிலையில் தவாக தலைவர் வேல்முருகன், “உலகத்தமிழர்களின் துக்க நாளான 18ஆம் தேதி அன்று கன்னியாகுமரியில் நடக்கும் நட்சத்திர இசைத் திருவிழாவிற்கு தமிழ்நாடு அரசு தடை விதிக்க வேண்டும்!” என்று அறிக்கை வெளியிட்டார்.
இத்தகவல்களை தொகுத்து செய்தியாக வெளியிட்டு, நடிகர் விசாலின் உதவியாளர் ஹரி என்பவருக்கு, tamilankural.com  இதழ் சார்பாக மீண்டும்  அனுப்பினோம். அவர், “குறிப்பிட்ட நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது” என பதில் அளித்துள்ளார்.

Related Posts