சன் டிவி பல ஆயிரம் கோடி ரூபாய் பாக்கி! தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ் அதிர்ச்சி தகவல்!
“சன் டிவியுடன் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் 25 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஒப்பந்தம் செய்தது. அந்த ஒப்பந்தத்தின்படி தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு சன் டிவி பல ஆயிரம் கோடி ரூபாய் பணம் தர வேண்டும்! திருடப்பட்டு மறைக்கப்பட்டு இருந்த அந்த பத்திரத்தை பெரும் முயற்சி எடுத்து மீட்டெடுத்து உள்ளேன்!” என்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களில் ஒருவரான ஜே.எஸ்.கே. சதீஷ் தெரிவித்துள்ளார்.
இது குறித்த ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கும் அவர், அந்த ஒப்பந்த பத்திரத்தின் நகலையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
அந்த ஆடியோவில், ‘’நமது சங்கத்துல பல வருசமா இருக்குற பிரச்சனை இது. தனியார் தொலைக்காட்சிக்கிட்ட நம் சங்கம், 1995ம் ஆண்டு, கே.ஆர்.ஜி. தலைவராக இருந்தபோது போட்டிருந்த ஒரு ஒப்பந்தம் காணாமல் போய்விட்டது என்றனர். அது களவாடப்பட்டு விட்டது என்றும் சொல்லப்பட்டு வந்தது. இது சம்பந்தமா பல முறை விவாதம் நடந்திருக்குது. முதலில் அப்படி ஒரு அக்ரிமெண்ட் இருக்குதா இல்லையா, என்ன நடந்தது என்பது பற்றி முன்னாள் நிர்வாகிகள் பலருக்குத் தெரியும்.
அந்த ஒப்பந்தத்தில், வாரத்திற்கு 6 பாடல்கள் ஒளிபரப்புவதற்கு தொலைக்காட்சி நம் சங்கத்திற்கு ஒரு லட்சம் தரவேண்டும். அதே பாடல்கள் இரண்டாம் முறை ரிப்பீட் ஆகும்போது ஒரு பாட்டுக்கு 6 ஆயிரம் ரூபாய். அதற்கு அடுத்து எத்தனை முறை டெலிகாஸ்ட் ஆனாலும் அதற்கு தலா 2 ஆயிரம் ரூபாய் அளிக்க வேண்டும்.
எங்க சேனலைத்தவிர வேறு எந்த சேனலுக்கும் பாடல்களை கொடுக்கக் கூடாது. வேண்டுமானால் தூர்தர்ஷனுக்கு கொடுக்கலாம் என்றெல்லாம் அந்த அக்ரிமெண்டில் இருக்குது. அந்த அக்ரிமெண்ட் வருடா வருடம் புதுப்பிக்கப் படவேண்டும். அப்படி செய்யாத பட்சத்தில் சேனல் பாடல்களை பயன்படுத்தக் கூடாது என்பதும் ஒப்பந்தத்தில் இருக்குது.
ஆனா அக்ரிமெண்ட் புதுப்பிக்கப்படலை. அதே நேரம், பாடல்களை தொடர்ந்து ஒளிபரப்பி வர்றாங்க.
அதனால 25 வருசத்துக்கும் சேர்த்து ஒரு பெரிய தொகை வரவேண்டி யிருக்குது.
கே.ஆர்.ஜி.க்கு பிறகு பல நிர்வாகங்கள் வந்தது. ஆனா, அந்த அக்ரிமெண்ட் பற்றிய பேச்சே அப்போதெல்லாம் இல்லை. நம் சங்கத்திற்கு பல கோடிகள் வரவேண்டியது இருக்கும்போது, நட்சத்திர நிகழ்ச்சிகள், நட்சத்திர கிரிக்கெட் என்று நாம் கையேந்திக்கிட்டு இருந்தோம்.
இத்தனை வருடமாக இவ்வளவு கோடி வரவேண்டியிருக்குது என்று சம்பந்தப்பட்ட சேனல்கிட்ட பழைய நிர்வாகிகள் போய் பேசியிருந்தால், அந்த சேனல் பணம் கொடுத்திருக்கும். சங்கத்திற்கு ஒரு வழி பிறந்திருக்கும். 2 ஆயிரம் கோடி.. ஆயிரம் கோடி.. 500 கோடி கூட போகட்டும்.. குறைந்த பட்சம் 100 கோடியாவது வந்திருக்குமே. இது அனைத்து தயாரிப்பாளர்களோட வாழ்வாதரம் சம்பந்தப்பட்டது.
இதை மூத்த நிர்வாகிகள் பலர் செய்யாமல் இருப்பதற்கு காரணம் சுயலாபம். இப்ப அந்த ஒரிஜினினல் அக்ரிமெண்டை, நம்ம திரைத்துறையின் முக்கிய புள்ளிகிட்ட இருந்து போராடி அந்த பத்திரத்தை மீட்டுக்கொண்டு வந்திருக்கேன்.
இந்த குற்றத்தில் நதிமூலம், ரிஷிமூலம் பார்த்து மேலும் மேலும் பிரச்சனையை வளர்க்காம, 1300 தயாரிப்பாளர்களும் ஒட்டுமொத்தமாக ஒருமித்த கருத்தோடு, சேர்ந்து போய் அந்த சேனல்கிட்ட பேசினால், நமக்கான உரிமை உடனே செயல்படுத்தப்படும்.
அப்படி செயல்முறைக்கு வந்தா, 12 ஆயிரம் பென்சனை 20 ஆயிரம் ஆக்கலாம். அனைவருக்கும் வீடு கிடைக்கும்.
ஒரு மணி நேரத்திற்கு 10 பாடல்கள் என்று வைத்துக்கொண்டால், ஒரு நாளைக்கு 240 பாடல்கள், 240 பாடல்களுக்கும் 2 ஆயிரம் வீதம் 4 லட்சத்து 80 ஆயிரம். அதையே 365 நாளுக்கு கணக்கு போட்டு பாருங்க. அதையே 25 வருசத்துக்கு கணக்கு போட்டு பாருங்க.
இதனால் அந்த சேனல் மீது குற்றச்சாட்டு வைக்க முடியாது. நாம்தான் தவறவிட்டோம். அவர்களை குறை சொல்ல முடியாது. அந்த சேனலிடம் முறையாக சொல்லி நம் பணத்தினை மீட்டெடுப்போம்’’என்று தெரிவித்திருக்கிறார், ஜே.எஸ்.கே. சதீஷ்.