குரங்கு பெடல் – திரைவிமர்சனம்
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் காளி வெங்கட் நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் ‘குரங்கு பெடல்’… கடந்த 53-வது கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்றது இந்த திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தின் கதை என்ன…சைக்கிள் கூட ஓட்ட தெரியாத தந்தை.. சைக்கிள் ஓட்ட கற்றுக் கொள்ள ஆசைப்படும் மகன்.. இவர்களுக்குள் நடக்கும் ஒரு பாச போராட்டம் தான் இந்த படத்தின் கதை.
குரங்கு பெடல் போட்டு சைக்கிள் கற்றுக்கொள்ள போராடும் சிறுவனும், அவனது நண்பர்களின் பந்தத்தையும் இந்த படம் சொல்கிறது.
1985ல் நடப்பது போல் கதை நகர்கிறது.
தந்தையாக காளி வெங்கட் சைக்கிள் ஓட்ட தெரியாத காரணத்தினால் அவரை ஊர் மக்கள் எல்லோரும் நடராஜா சர்வீஸ் என்று கிண்டல் அடிக்கின்றனர்.. இது அவரது மகன் சந்தோஷ் (மாரி) பிடிக்கவில்லை.
ஒரு கட்டத்தில் வாடகை சைக்கிள் எடுத்து கற்றுக்கொள்ள விரும்புகிறான். தந்தை இடம் தனது ஆசை கூறுகிறான். அதெல்லாம் இப்போது வேண்டாம் என மறுத்து விடுகிறார் காளி வெங்கட். தந்தைக்கு தெரியாமல் வாடகை சைக்கிள் எடுத்துக் கொள்கிறான் மகன்.
ஒருநாள் சைக்கிளை சரியான நேரத்தில் கொடுக்க முடியாமலும்,போதுமான பணம் இல்லாத காரணத்தினால் பயத்தில் தந்தையிடம் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியே சென்று விடுகிறான் மகன் சந்தோஷ்.
அதன் பிறகு என்ன நடந்தது? என்பதுதான் படத்தின் உணர்ச்சிமிக்க மீதி கதை.
காளி வெங்கட், சந்தோஷ் வேல்முருகன், வி.ஆர்.ராகவன், எம்.ஞானசேகர், பிரசன்னா பாலச்சந்திரன் , ஜென்சன் திவாகர் உட்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
எதார்த்தமான ஒரு கிராமத்து மனிதராகவே வாழ்ந்திருக்கிறார் காளி வெங்கட்.. சைக்கிள் ஓட்ட தெரியாத காரணத்தினால் அவர் படும் வேதனைகளும் மகனிடம் அவர் கேட்கும் பேச்சுகளும் ஒரு தந்தையின் மனநிலையை காட்டுகிறது. இதில் சிறுவர்களாக நடித்துள்ள அனைவரும் கிராமத்து மண்வாசனை மாறாத சிறுவர்களாக வாழ்ந்திருக்கிறார்கள்.
தன்னிடம் சைக்கிள் இல்லாத காரணத்தினால் வாடகை சைக்கிள் எடுத்து அதற்கு பணம் கொடுக்க முடியாமல் போக அதே கடையில் வேலை பார்த்து கடனை அடைக்கும் ஒரு பொறுப்பான சிறுவனாக மாரி (சந்தோஷ்) வாழ்ந்து இருக்கிறான்.
இவருடன் நடித்த மற்ற சிறுவர்களும் கதைக்கு கட்சிதமாக பொருந்துகின்றனர். இந்த படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். அதே போன்று மிலிட்டரி சைக்கிள் கடை வைத்திருக்கும் நபர்.. குடிகாரன் மற்றும் காளி வெங்கட் மனைவி, மகள் என அனைவரும் நேர்த்தியான பங்களிப்பை கொடுத்திருக்கின்றனர்.
ஒளிப்பதிவு சுனில் பாஸ்கர் கிராமத்து மண் மனம் மாறாமல் அற்புதமாக காட்சி படுத்தி கண் முன் கொண்டு வந்திருக்கிறார்.ஜிப்ரான் இசை அழகுக்கு அழகு சேர்த்து படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.
எழுத்தாளர் ராசி அழகப்பன் எழுதிய ‘சைக்கிள்’ என்ற சிறுகதையை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.
சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ், மாண்டேஜ் பிக்சர்ஸ் சார்பில் சவிதா சண்முகம், சுமீ பாஸ்கரன் தயாரித்துள்ளனர்.
1980 களில் இருந்த கிராமத்து மனிதர்களையும் அவர்கள் வாழ்வியலையும் ரசிகர்களின் கண் முன் அழகாக படம் பிடித்து நமக்கு ‘குரங்கு பெடல்’ காவியத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் கமலக்கண்ணன்.
ஆக இந்த கோடை விடுமுறையில் குடும்பத்துடன் கொண்டாடும் படமாகவும், அந்த கால வாழ்க்கை சூழ்நிலையை குழந்தைகள் தெரிந்து கொள்ளும் படமாக வந்திருக்கிறது. குரங்கு பெடல் அனைவரின் பாராட்டை பெரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை..
-யாழினி சோமு