கள்வன் விமர்சனம்

கள்வன் விமர்சனம்

பி வி ஷங்கர் இயக்கத்தில் ஜி வி பிரகாஷ்குமார், பாரதிராஜா, இவானா, தீனா உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் கள்வன்.

சத்தியமங்கலம் மலைப்பகுதியில் நடக்கும்படியாக கதை நகர்கிறது. ஜி வி பிரகாஷ் மற்றும் தீனா இருவரும் நண்பர்கள். அந்த கிராமத்தில் சின்ன சின்ன திருட்டு வேலைகளை செய்து வாழ்ந்து வருகின்றனர்.

பக்கத்து கிராமத்து பெண்ணான இவானாவை கண்டதும் காதல் கொள்கிறார் ஜி வி பிரகாஷ். திருடனான ஜி வி பிரகாஷை வெறுக்கிறார் இவானா.

இந்நிலையில், முதியோர் இல்லத்தில் வேலைக்காக செல்லும் ஜி வி பிரகாஷ், அங்கு பாரதிராஜாவை சந்திக்கிறார். யாரும் இல்லா அனாதையாக இருக்கும் பாரதிராஜாவை தத்தெடுத்துக் கொள்கிறார் ஜி வி பிரகாஷ்..

பாரதிராஜாவை தனது வீட்டிற்கு அழைத்துச் செல்லும் ஜி வி பிரகாஷ், மிகப்பெரும் திட்டம் தீட்டுகிறார். அவரது திட்டம் பழித்ததா.? இவானாவை கரம் பிடித்தாரா.? பாரதிராஜா யார்.??? என்பதற்கெல்லாம் விடை இடைவேளைக்குப் பின் கூறியிருக்கிறார் இயக்குனர்.

நாயகன் ஜி வி பிரகாஷ், கதைக்கேற்ற கதாபாத்திரமாக நடித்திருக்கிறார் என்று கூறுவதை விட வாழ்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். மெளனமான ஒரு முகத்தைக் கொண்டு, படம் முழுவதும் கெம்பன் கதாபாத்திரமாக வாழ்ந்துவிட்டுச் சென்றிருக்கிறார்.

குறிப்பாக க்ளைமாக்ஸ் காட்சியில் ஜி வி பிரகாஷின் மெனக்கெடல் நன்றாகவே தெரிகிறது.

இவானாவின் நடிப்பில் பெரிதான ஒரு மாற்றம் இல்லை. இதற்கு முந்தைய படங்களில் நடித்த அதே முக பாவனையை இப்படத்திலும் கொடுத்திருக்கிறார். தனக்கு கொடுக்கப்பட்டதை அளவாக செய்து முடித்திருக்கிறார்.

வழவழவென பேசிக் கொண்டே இருக்கும் கதாபாத்திரம் தான் தீனாவோடது. ஒரு சில இடங்களில் ஓகேவாக கடந்து சென்றாலும், ஒரு சில இடங்களில் எரிச்சலடைய வைத்து விடுகிறார் தீனா.

பாரதிராஜாவின் நடிப்பு மட்டுமே படத்தின் மையக்கருவை தாங்கும் தூணாக நிற்கிறது.

திரைக்கதையில் இன்னும் பெரிதாகவே மெனக்கெடல் செய்திருக்கலாம் என்று படம் பார்ப்பவர்களை எண்ண வைத்து விட்டார் இயக்குனர்.

ரெவாவின் பின்னணி இசை படத்திற்கு பக்க பலமாக நிற்கிறது. இயக்குனரே ஒளிப்பதிவாளராக இருந்ததால், ஒவ்வொரு காட்சிக்கும் நன்றாகவே மெனக்கெடல் செய்திருக்கிறார்.

கதையில் பெரிதான ஒரு வலு இல்லாததால், கள்வன் நமக்கு ஏமாற்றத்தை மட்டுமே கொடுத்திருக்கிறார்.