மீண்டும் சர்ச்சை: சூர்யா செய்தது சரியா?

மருத்துவமனைகளுக்கு உதவுங்கள் என ஜோதிகா சொன்னது சர்ச்சை ஆன நிலையில், இது குறித்து அவரது கணவரும் நடிகருமான சூர்யா விளக்கம் அளித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு தனியார் விருது வழங்கும் விழாவில் நடிகை  ஜோதிகா  கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர், “கோயிலுக்காக அவ்ளோ செலவு செய்யறீங்க.. உண்டியல்ல காசு போடுறீங்க.. ப்ளீஸ் அதே காஸ் ஸ்கூல்ஸ் கொடுங்க, ஹாஸ்பிடல்ஸ் கொடுங்க..” என்று பேசினார்.

அந்த வீடியோவை சமீபத்தில் சமூகவலைதளங்களில் பதிந்த சிலர், “இந்து கோயில்களை ஜோதிகா இழிவு படுத்திவிட்டார்!” என கண்டனம் தெரிவித்தனர்.

அதே நேரம் மேலும் பலர், “ஜோதிகா தவறாக ஏதும் சொல்லவில்லை. கோயிலுக்கு நிதி அளிப்பதைப் போலவே, அரசு மருத்துவமனை மற்றும் பள்ளிகளுக்கு உதவுங்கள் என்றார். இதில் ஏதும் தவறில்லை.

பல்லாயிரம் ஆலங்கள் கட்டுவதைவிட, ஒரு ஏழையின் கல்விக்கு உதவுவது புண்ணியம் என மகாகவி பாரதியார் சொன்னதையே ஜோதிகா பிரதிபலித்தார். தவிர, “கோயில் கட்டுவதைவிட, கக்கூஸ் அவசியம்” என பிரதமர் மோடி ஏற்கெனவே தெரிவித்துள்ளார்.

ஆகவே ஜோதிகா சொன்னதை தவறென எடுத்துக்கொள்ள முடியாது!” என்றனர்.

ஆனாலும் ஜோதிகாவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் சமூகவலைதளங்களில் விவாதங்கள்  தொடர்ந்தன.

இந்நிலையில், அவரது கணவரும், நடிகருமான சூர்யா, இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

“ ‘மரம்‌ சும்மா இருந்தாலும்‌ காற்று விடுவதாக இல்லை’ என்கிற கருத்து ‘சமூக ஊடக’ விவாதங்களுக்கு அப்படியே பொருந்தும்‌. ஒரு விருது வழங்கும்‌ விழாவில்‌ எப்போதோ ஜோதிகா பேசியது, இப்போது ஊடகங்களில்‌ செய்தியாகவும்‌, சமூக ஊடகங்களில்‌ விவாதமாகவும்‌ மாறி இருக்கிறது.

‘கோயில்களைப்‌ போலவே பள்ளிகளையும்‌, மருத்துவமனைகளையும்‌ உயர்வாகக் கருத வேண்டும்‌’ என்கிற கருத்தை ஜோதிகா வலியுறுத்தியதை, ‘சிலர்‌’ குற்றமாகப் பார்க்கிறார்கள்‌. இதே கருத்தை விவேகானந்தர்‌ போன்ற ஆன்மிகப்‌ பெரியவர்களே சொல்லியிருக்கிறார்கள்‌. ‘மக்களுக்கு உதவினால்‌, அது கடவுளுக்குச்‌ செலுத்தும்‌ காணிக்கை’ என்பது ‘திருமூலர்‌’ காலத்துச் சிந்தனை. நல்லோர்‌ சிந்தனைகளைப்‌ படிக்காத, காது கொடுத்துக் கேட்காதவர்களுக்கு இது தெரிய வாய்ப்பில்லை.

 

பள்ளிகளையும்‌, மருத்துவமனைகளையும்‌ இறைவன்‌ உறையும்‌ இடமாகக் கருத வேண்டும்‌ என்ற கருத்தை, எல்லா மதத்தைச்‌ சேர்ந்தவர்களும்‌ வரவேற்கவே செய்கின்றனர்‌. ‘கரோனா தொற்று’ காரணமாக இயல்பு வாழ்க்கை‌ பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்திலும்‌, எங்களுக்குக் கிடைத்த பேராதரவு நம்பிக்கையையும்‌, மகிழ்ச்சியையும்‌ அளித்தது.

அறிஞர்கள்‌, ஆன்மிகப்‌ பெரியவர்களின்‌ எண்ணங்களைப்‌ பின்பற்றி வெளிப்படுத்திய அந்தக்‌ கருத்தில்‌ நாங்கள்‌ உறுதியாகவே இருக்கிறோம்‌. “மதங்களைக்‌ கடந்து மனிதமே முக்‌கியம்‌’ என்பதையே எங்கள்‌ பிள்ளைகளுக்கும்‌ சொல்லித்தர விரும்புகிறோம்‌. தவறான நோக்கத்தோடு, தரக்குறைவாகச் சிலர்‌ அவதூறு பரப்பும்‌ போதெல்லாம்‌, நல்லோர்கள்‌, நண்பர்கள்‌, ரசிகர்கள்‌ எங்களுக்குத் துணை நிற்கிறார்கள்‌.

முகமறியாத எத்தனையோ பேர்‌ எங்கள்‌ சார்பாக பதில்‌ அளிக்கிறார்கள்‌. ஊடகங்கள்‌ சரியான விதத்தில்‌ இச்சர்ச்சையைக்‌ கையாண்டன. ‘நல்ல எண்ணங்களை விதைத்து நல்ல செயல்களை அறுவடை செய்ய முடியும்‌’ என்கிற நம்பிக்கையை இவர்களே துளிர்க்கச்‌ செய்கிறார்கள்‌. எங்களுக்கு உறுதுணையாக நிற்கும்‌ அனைவருக்கும்‌ எங்களின்‌ நெஞ்சார்ந்த நன்றிகள்‌”.

தற்போது இதைவைத்து சிலர் சர்ச்சைகளை கிளப்புகின்றனர்.

அவர்கள், “சூர்யா, அகரம் பவுண்டேசன் மூலம் எண்ணற்ற ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுகிறார். தவிர பெண்கள் முன்னேற்றம் பற்றி பேசுகிறார். இந்நிலையில், சம்பந்தப்பட்ட ஜோதிகா விளக்கம் அளிக்காமல், அவருக்கு பதிலாக சூர்யா பேசியது, ஆணாதிக்கம்!” என சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

“இந்த கருத்து தவறு!” என்றும் பலர் பதிவிடுகின்றனர்.

அவர்கள், “ஜோதிகாவை இஸ்லாமியர் என்று கூறியே, பலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.  ஆகவேதான், சூர்யா விளக்கம் அளித்துள்ளார். தவிர, ஜோதிகாவுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இதில் தவறில்லை!” என தெரிவிக்கின்றனர்.

ஆர். மகேஷ்

Related Posts