இருமுடி கட்டு’: ரவிதேஜாவின் புதிய அவதாரம்!
உணர்வுப்பூர்வமான திரைப்படங்களை இயக்கி தனக்கென தனிமுத்திரை பதித்த இயக்குநர் சிவா நிர்வாணா, மாஸ் மகாராஜா ரவிதேஜாவுடன் முதன்முறையாக இணைந்திருக்கும் திரைப்படம் ‘இருமுடி கட்டு’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் யெர்னேனி, ஒய். ரவி சங்கர் தயாரிக்க, டி-சீரிஸ் பிலிம்ஸ் வழங்கும் இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 21, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
தந்தை மற்றும் மகளுக்கு இடையிலான ஆழமான பாசப்பிணைப்பை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இக்கதை, மனித உணர்வுகள், தவறுகள், மனமாற்றம் மற்றும் நம்பிக்கையின் சக்தியைப் பற்றிப் பேசுகிறது. ஐயப்ப தீட்சை மற்றும் ஆன்மீகப் பயணத்தைப் பின்னணியாகக் கொண்டிருந்தாலும், இது வெறும் பக்திப் படம் மட்டுமல்ல; பக்தி எவ்வாறு ஒரு மனிதனின் வாழ்வோடும் மனமாற்றத்தோடும் பிணைந்துள்ளது என்பதை விளக்கும் அழுத்தமான குடும்பக் கதையாகும்.
படம் குறித்துப் பேசிய இயக்குநர் சிவா நிர்வாணா, “மனித உணர்வுகளை ஆழமாகப் பேசும் கதையைச் சொல்லவே இதை எழுதினேன். எனக்குச் சிறுவயது முதலே பரிச்சயமான ஐயப்ப யாத்திரை பின்னணியைப் பயன்படுத்தி கதைக்கு உணர்வுப்பூர்வமான பரிமாணத்தைச் சேர்த்துள்ளேன். ரவிதேஜா சாரை இதுவரை ரசிகர்கள் பார்த்திராத புதிய களத்தில், அதேநேரம் அவரது வழக்கமான எனர்ஜியுடன் காண்பிக்க விரும்பினேன்.
கதாபாத்திரத்தின் ஒவ்வொரு பரிமாணத்தையும் அவர் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்” என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். மேலும், தயாரிப்பாளர்களின் முழுமையான ஆதரவும், ஜி.வி. பிரகாஷ் குமாரின் பின்னணி இசையும் இப்படத்தின் உலகத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், பார்வையாளர்கள் தங்களையே இந்த உணர்வுகளில் பொருத்திப் பார்க்கும் வகையில் படம் அமையும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
இப்படத்தில் ரவிதேஜாவுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் ‘காவேரி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சாய் குமார், பேபி நக்ஷத்ரா உள்ளிட்டப் பலர் முக்கியப் பாத்திரங்களை ஏற்றுள்ளனர். விஷ்ணு சர்மா ஒளிப்பதிவையும், பிரவீன் புடி படத்தொகுப்பையும் மேற்கொண்டுள்ளனர்.
ரவிதேஜா – சிவா நிர்வாணா கூட்டணியின் இந்த புதிய முயற்சி, ரசிகர்களுக்கு உணர்வுப்பூர்வமான அனுபவத்தோடு சிறந்த திரையரங்கக் கொண்டாட்டத்தையும் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

