கேங்கர்ஸ்: திரை விமர்சனம்

அரசு பள்ளி மாணவி ஒருவர் திடீரென்று காணாமல் போகிறார். இந்தபள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கும் சுஜிதா இது குறித்து கவல்துறை அதிகாரிக்கு கடிதம் எழுதுகிறார். இதே பள்ளியில் வைலை பார்க்கிறார் பி டி மாஸ்டர் சிங்காரம் . அங்கு புதிதாக வந்து வேலைக்கு சேர்கிறார் சரவணன்.மாணவியை கண்டுபிடிக்கும் முயற்சி ஒரு பக்கம் நடக்க… பள்ளியை கள்ளச்சாராய விற்பனைக்கு பயன்படுத்தும் அரசியல்வாதிகள் இருவருக்கு எதிரான போரட்டம் தொடர்கிறது. அதன் பிறகு என்ன ஆகிறது என்பதுதான் கதை.
நாயகன் சரவணனாக சுந்தர் சி. வழக்கமான பாணியில் நடிப்பை அளித்து இருக்கிறார். அதே போல நாயகி – பள்ளி ஆசிரியை சுஜிதாவாக – கேதரின் தெரசா. அழகாக நடித்து ரசிக்க வைக்கிறார்.
முதல் பாதியில், அரசியல்வாதிகளை நாயகன் சுந்தர் சி புரட்டி எடுக்க… அந்த இடத்தில் வடிவேலு வந்து சிக்கிக் கொள்வது செம காமெடி. அதோடு பல்வேறு கெட் அப்களில் வந்து ரசிக்க வைக்கிறார்.
அதே நேரம் அவரது பழைய கூட்டாளிகள் இல்லாமல், பாம்பு, ஃபுட்பால், த்ரோபால் என எல்லாவற்றிலும் கிராபிக்ஸ் துணை கொண்டு சிரிக்கவைக்கிறார். வில்லன் அருள்தாஸை பார்த்து, “மூக்கு எப்பவும் தூக்குனமேனிக்கு இருக்கு… ஈ எறும்பு தூக்கிட்டு போயிரப்போவுது” என தனது அக்மார்க் பஞ்ச் கொடுத்திருப்பதும் ரசிக்க வைக்கிறது.
அதே நேரம் பக்ஸ் , சந்தானபாரதி , முனிஷ்காந்த் , காளை ஆகியோர் கொஞ்சம் கொஞ்சம் சிரிக்க வைக்கிறார்கள்.
ஆரம்பத்தில் மைம் கோபி மற்றும் அருள்தாஸ் ஆகியோர் வில்லன்களாக வந்து மிரட்டுகின்றனர். பிறகு ஹரிஷ் பேரடி முக்கிய வில்லனாக வருகிறார். சத்யா இசையில் பாடல்கள் ஈர்க்கின்றன. குறிப்பாக, கேத்ரின் தெரசா நடனம் ஆடும் ஐட்டம் பாடல் கலக்கல். நாயகன், சுந்தர் சி வரும் அறிமுக காட்சிகள் மற்றும் சண்டை காட்சிகளில் பின்னணி இசையிலும் அதிரவைத்து இருக்கிறார்.
ஈ.கிருஷ்ணமூர்த்தியின் ஒளிப்பதிவு படத்துக்கு பலம். குறிப்பாக சண்டைக் காட்சிகளில் பிரமிக்க வைக்கறார்.
பிரவீன் ஆன்டனியின் படத்தொகுப்பு கச்சிதம்.
ஷூ கம்பெனி விளம்பரத்தை பள்ளி சுவரில் எழுத அனுமதித்து, அந்த நிறுவனத்திடமிருந்து மாணவர்களுக்கு ஷூ வாங்கித் தருகிறார் நாயகன். அப்போது, “சும்மா இருக்கிற சுவரே ஷு கொடுக்குது.. நாம எவ்வளவோ செய்ய முடியுமே” என்கிற வசனம் அசத்தல்.
அதே நேரம், வடிவேலு “நான் அடிச்சதில்லை.. அடிச்சதில்லை..” என மூச்சு முட்ட வசனம் பேசி, இறுதியில் ஆபாச வனசனமாக முடித்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம்.
விளையாட்டு மைதானத்தில் நாயகன், பந்தை எகிறி அடிப்பதை, வில்லன்களை தாக்கியதுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் நாயகி… செங்கல் சூளை நடுவே நாயகி போராட, பல்வேறு இடங்களில் இருந்து கற்களால் தாக்கப்படுவது, தனித் திரைப்படமாகவே எடுக்கும் அளவுக்கு சிறப்பான நாயகன் சரவணனின் பிளாஷ்பேக் காட்சிகள் என வழக்கமான சுந்தர் சி முத்திரைகள் நிறைய உண்டு.
அதே நேரம் பள்ளி மாணவன் கார் ஓட்டுவது, அதில் பள்ளிக்கே வருவது, ஆசிரியையும் அதில் ஏறிச் செல்வது, அரசு பள்ளியில் மாணவி பீஸ் கட்ட முடியாமல் தவிப்பது போன்ற காட்சி… இதெல்லாம் லாஜிக் மீறல்கள். தவிர்த்து இருக்கலாம். பள்ளி ஆசிரியர்கள் மது அருந்தும் காட்சிகள், ஆசிரியையின் குத்து டான்ஸ் ஆகியவற்றுக்கும் நோ சொல்லி இருக்கலாம்.
அதே நேரம் அரசுப் பள்ளி மாணவர்கள் சிலரிடம் நிலவும் கஞ்சா, ஆபாச வீடியோ ஆகியவை குறித்த காட்சிகள் அவசியமே. இருந்தாலும் அது போன்ற மாணவன் மீது ஆசிரியரே கொலைவெறி தாக்குதல் நடத்துவது ஓவர்.
ஆனாலும் தனக்கே உரிய கமர்சியல் பாணியில் ரசிக்கும்படியாவே படத்தை கொண்டு சென்று இருக்கிறார் சுந்தர் சி.
ரேட்டிங்: 3.80/5
விமர்சனம்: டிவி.சோமு