’வல்லமை’: திரைப்பட விமர்சனம்

’வல்லமை’:  திரைப்பட விமர்சனம்

துணையை இழந்த பிரேம்ஜி, தனது மகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என சென்னைக்கு வருகிறார். இங்கு   வேலை, மகளின் பள்ளி படிப்பு என்று அனைத்தும் அவர் நினைத்து போல் அமைகிறது.

இந்த நிலையில், மகளுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட, மருத்துவரை நாடுகிறார்கள்.  அந்த சிறுமி அறியாமலேயே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருப்பது தெரிய வருகிறது.

தனக்கு ஏற்பட்ட கொடுமை இனி எவருக்கும் நடக்க கூடாது, என்று  தீர்மானிக்கும் சிறுமி, தன்னை பலாத்காரம் செய்த குற்றவாளியை கண்டுபிடித்து அவரை கொலை செய்ய வேண்டும் என்று முடிவெடுக்கிறார்.

இதற்கு அவரது தந்தை ( பிரேம்ஜி) என்ன சொன்னார், அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே கதை.

வழக்கமாக, கலாப்பதையே நடிப்பாக நினைப்பவர் பிரேம்ஜி.ஆனால் இந்தப் படத்தில் ஒரு சிறுமியின் தந்தையாக பொறுப்புடன் நடித்து அசத்தி இருக்கிறார். சிலர், “நடிக்க முயற்சித்திருக்கிறார்.. அவ்வளவுதான்” என்று சொல்லலாம். அதுவே பிரேம்ஜிக்கு வெற்றிதான். பாராட்டுகள்.

பிரேம்ஜியின் மகளாக நடித்திருக்கிறார் சிறுமி திவதர்ஷினி. சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.  தனக்கு நேர்ந்த கொடுமைக்கு பழி தீர்க்க முயல்வது, அதற்கான காரணத்தை விளக்குவது என அசத்தி இருக்கிறார்.

காவல்துறை அதிகாரியாக வரும் ’வழக்கு எண்’ முத்துராமன், கான்ஸ்டபிளாக வரும் சூப்பர் குட் சுப்பிரமணியம், தொழிலதிபராக வரும் சி.ஆர்.ரஜித், கார் ஓட்டுநராக வரும் சுப்பிரமணியன் மாதவன், பெட்ரோல் திருடும் இளைஞராக வரும் விது, பள்ளி உதவி பணியாளராக வரும் திலீபன் என அனைவரும் பாத்திரம் அறிந்து நடிப்பை அளித்து இருக்கிறார்கள். சிறப்பு.

ஜி.கே.வி.யின் இசை,  மற்றும் சூரஜ் நல்லுசாமியின் ஒளிப்பதிவு இரண்டும் படத்துக்கு பலம்.  இரண்டுமே திரைக்கதையுடன் தடம் மாறாமல் பயணித்து இருக்கின்றன.

சி.கணேஷ் குமாரின் படத்தொகுப்பு கச்சிதம்.

கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கி, தயாரித்து இருக்கிறார் கருப்பையா முருகன். பெண் குழந்தைகளுக்கு சமூகத்தில் இருக்கும் ஆபத்து குறித்து அழுத்தமாக பதிவு செய்து இருக்கிறார்.

பாதிக்கப்படும் சிறுமிகள்  உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அனுபவிக்கும் வேதனையை வெளிப்படுத்தும் காட்சிகள் அருமை. சமுதாயத்துக்கு அவசியமானவை.

 ரேட்டிங் 3.2/5

Related Posts