விஜய் ஆண்டனி செய்த அதிரடி..!
கொரோனா பெருந்தொற்று உலகை அச்சுருத்தி வரும்நிலையில் இது அனைத்து தரப்பையும் பாதிப்படையச் செய்துள்ளது. இதில் சினிமாதுறையும் அடங்கும். தென்னிந்திய திரையுலகத்தையும் பெரிதாக பாதித்திருக்கும் இந்த நேரத்தில், பல வெற்றிப் படங்களை கொடுத்த நடிகர் விஜய் ஆண்டனி, தற்போதைய நெருக்கடியை கருத்தில் கொண்டு ஒத்துக் கொண்ட சம்பளத்தில் இருந்து 25% சதவீதம் குறைத்திருக்கிறார்.
விஜய் ஆண்டனி தற்போது நடித்துவரும் 3 படங்களின் தயாரிப்பாளர்களும் இந்த அறிவிப்பாள் பயன் அடைவார்கள் என்கிறார்.
சென்னை மே 5, 2020: தமிழ் சினிமாவின் பிரபல ஹீரோவாக உள்ள விஜய் ஆண்டனி “கொலைகாரன்” படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது மூன்று படங்களில் நடித்துவருகிறார்.
விஜய் ஆண்டனிக்கு தெலுங்கிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது. அவரின் “பிச்சைக்காரன்” திரைப்படம் தொலைக்காட்சி வெளியீட்டிலும் பெரிய சாதனை படைத்தது.
விஜய் ஆண்டனி தற்போது FEFSI சிவா அவர்களின் தயாரிப்பில் “தமிழரசன்” என்ற படத்தில் நடித்து முடித்தார். தற்போது அம்மா கிரீயேஷன்ஸ் T. சிவா அவர்களின் தயாரிப்பில் “அக்னி சிறகுகள்” என்ற படத்திலும், இயக்குனர் செந்தில் குமாரின் ஓபன் தியேட்டர் மற்றும் இன்பினிட்டி பிலிம் வென்சர்ஸ் நிறுவனம் சார்பில் எடுக்கப்படும் “காக்கி” என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த மூன்று படங்களும் 2020-ல் வெளியாகும் என எதிர்பார்கப்பட்டது.
ஆனால் அதற்குள் கொரோனா தொற்று பரவல் சினிமாத்துறையை மொத்தமாக புரட்டி போட்டிருக்கிறது.
ஊரடங்கள் 50 நாட்களுக்கு மேலாக எந்த பணிகளும் நடக்காமல், திரையரங்குகளும் இயங்காமல், பல படங்கள் அப்படியே கிடப்பில் போடப்பட்டன. புது படங்கள் திரையரங்குகளில் வெளியிட மேலும் மூன்று மாதங்கள் ஆகும் என்ற சூழ்நிலை நிலவுவதால், தன்னை நம்பி திரைப்படங்கள் தயாரித்த தயாரிப்பாளர்கள் பாதிக்கபடக் கூடாது என்பதற்காக மனசாட்சியுடன் விஜய் ஆண்டனி தாமாகவே முன்வந்து தனக்கு ஒப்புக்கொள்ளப்பட்ட சம்பளத்தில் 25 % குறைத்து கொள்ளுமாறு இந்த மூன்று படங்களின் தயாரிப்பாளர்களுக்கும் தகவல் சொல்லியிருக்கிறார்.
தயாரிப்பாளர்களின் நிலமையை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக விஜய் ஆண்டனி தெரிவித்திருக்கிறார்.
விஜய் ஆண்டனியின் இந்த தாராள மனதை “அக்னி சிறகுகள்” தயாரிப்பாளர் T. சிவா மனமுவந்து பாராட்டி, இவ்வாறு கூறினார்: “50 நாட்களுக்கு மேலாக இந்த கொரோனா லாக் டவுன் காரணமாக தவித்து வரும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு இப்படி ஒரு முன்னணி நடிகர் தாமாகவே முன்வந்து தன் சம்பளத்தை குறைந்த கொண்டது அனைவரும் பாராட்ட வேண்டியது.
தமிழ் சினிமாவுக்கு முன்னுதாரணமாக இருக்க போகும், ஒரு நடவடிக்கை. அவரை போலவே அனைத்து நடிகர்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் தங்களின் சம்பளத்தில் ஒரு பகுதியையே தாமாகவே முன்வந்து விட்டுக் கொடுத்து அனைத்து தயாரிப்பாளர்களையும் இந்த இக்கட்டான நேரத்தில் காப்பாற்ற வேண்டும் என்று அன்போடு கேட்டு கொள்கிறேன். அப்படி செய்தால் தான், தற்போது வெளியாக காத்திருக்கும் படங்களும், முடிக்கவிருக்கும் படங்களும் எந்த நிதி சிக்கலும் இல்லாமல் வெளியாகும். இப்படி ஒரு முன்னுதாரணமான செயலை செய்து தயாரிப்பாளர்களுக்கு உதவும் விஜய் ஆண்டனியை மனதார பாராட்டுகிறேன்.
மீதம் இரண்டு பட தயாரிப்பாளர்களும் விஜய் ஆண்டனியின் இந்த ஆதரவை மகிழ்ச்சியுடன் ஏற்று கொண்டனர்.
மனசாட்சியுடன் நடக்கும் ரியல் ஹீரோ.