உண்மை சம்பவத்தைக் கையிலெடுக்கும் விருமாண்டி; நாயகனாக சசிகுமார் தேர்வு
சென்னை; உண்மைச் சம்பவங்களைப் படமாக்குவது எப்போதுமே அவ்வளவு எளிதான விஷயமல்ல. அந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் பார்க்கும் போது, அவர்களது நினைவுகள் மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும். அப்படியொரு உண்மைச் சம்பவத்தை ‘க/பெ ரணசிங்கம்’ என்ற பெயரில் இயக்கி அதில் மாபெரும் வெற்றி பெற்றவர் விருமாண்டி. அந்தப் படத்தைப் பார்த்த திரையுலக பிரபலங்கள் பலரும் விருமாண்டியை வெகுவாகப் பாராட்டினார்கள்.
அதற்குப் பிறகுத் தனது அடுத்த படத்துக்கான கதையை முடிவு செய்து, திரைக்கதை எழுதி வந்தார் விருமாண்டி. இதுவும் ஒரு உண்மைச் சம்பவம் தான். தற்போது பல்வேறு முன்னணி நாயகர்கள் படங்களின் வசூலைக் கொண்டாடி வருகிறோம். அதற்கு எல்லாம் முன்னோட்டமாக 1975-ம் ஆண்டு ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. அந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தை உருவாக்குகிறார் விருமாண்டி.
இந்தக் கதையைக் கேட்டவுடனே, நடிப்பதற்குச் சம்மதம் தெரிவித்துவிட்டார் சசிகுமார். படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ளது. பரதன் பிலிம்ஸ் நிறுவனத்தின் ஆர்.விஸ்வநாதன் பெரும் பொருட்செலவில் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இதற்கான பூஜை இன்று நடைபெற்றது.
இந்தப் படத்தின் பாடலாசிரியர் வைரமுத்து, ஒளிப்பதிவாளராக என்.கே.ஏகாம்பரம், எடிட்டர் டி.சிவாநாதீஸ்வரன், இசையமைப்பாளர் ஜிப்ரான் ஆகியோர் பணிபுரிகிறார்கள். உண்மைச் சம்பவங்கள் என்றால் தத்ரூபமாகப் படமாக்க வேண்டும். அதற்குத் திறமையான தொழில்நுட்பக் கலைஞர்கள் தேவை. அப்படித்தான் இந்தப் படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் பட்டியலும். ஏப்ரலில் தொடங்கும் படப்பிடிப்பு இந்த ஆண்டு முடிவுக்குள் படத்தை திரையில் பார்க்கலாம் என்கின்றனர். தற்போது சசிகுமாருடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.