கீனோ: திரைப்பட விமர்சனம்

திரைப்டக் கல்லூரி மாணவர்கள் இணைந்து உருவாக்கி, “இதுவரை நாவல்களிலோ, திரைப்படங்களிலோ சொல்லப்படாத கதைக் கருவும் கொண்ட திரைப்படம்” என்கிற அறிவிப்புடன் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கீனோ திரைப்படம், வரும் வெள்ளி அன்று வெளியாகிறது.
படம் எப்படி இருக்கிறது?அப்பா – அம்மா – மகன் என சிறிய குடும்பம். பள்ளி மாணவன். பொருளாதார நிலை கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும் மகிழ்ச்சியாகவே வாழ்க்கை செல்கிறது.
இந்த நிலையில், ஒரு நாள் இரவு மழை வரும்போல இருக்கிறது.. சிறுவனை அவன் தாயார், “மாடியில் இருந்து துணிகளை எடுத்து வந்துவிடு” என அனுப்புகிறார். சிறுவனும் சென்று கொடியில் இருக்கும் துணிகளை எடுக்க ஆரம்பிக்கிறான்.
அப்போது, திடுமென மனித உடலமைப்பும் வித்தியாசமான தலையும் கொண்ட ஒரு உருவம், “நான்தான் கீனோ.. என்னோடு வா” என கரகரத்த குரலில் அழைக்கிறது.
பயந்துபோன சிறுவன், தன் வீட்டுக்கு ஓடி வருகிறான். இதைப் பார்த்த அவன் தாயார் என்னவென்று விசாரிக்க. இவன், நடந்த விசயத்தைச் சொல்கிறான். அவன் தாயார், “பக்கத்து வீட்டுக்காரங்க யாராவது வந்திருப்பாங்க.. நீ தேவையில்லாம பயந்துட்ட” என்கிறார்.ஆனால் பள்ளி மேல் மாடி, விளையாட்டு மைதானம், சாலை என பல இடங்களில் அந்த கீனோ வந்து, சிறுவனை அழைக்கிறது. வேறு நபர்கள் வந்தால் மறைந்து விடுகிறது.
கீனோவிடமிருந்து அந்த சிறுவன் தப்பினானா, பெற்றோர் என்ன செய்தார்கள் என்பதே மீதிக்கதை.
சிறுவனின் தந்தையாக வரும் மகாதாரா பகவத், சிறப்பாக நடித்து உள்ளார். வாக்கிங் போக காலையில் மகனை எழுப்ப.. அவனோ, “உன் உடம்ப குறைக்க என்னை ஏம்பா தொல்லை படுத்துற” என முணங்க.. அசடு வழியும் காட்சியிலேயே மனதைக் கவர்ந்துவிடுகிறார். கார் வாங்குவதாகச் சொல்லி டெஸ்ட் டிரைவிலேயே நோகடிக்கும் மனிதரைக் கண்டு ஓளிவது, மகனின் நிலை கண்டு குழம்பி, அதற்கான தீர்வைத் தேடி ஓடுவது என இயல்பான பாசத் தந்தையை கண் முன் நிறுத்துகிறார்.
சிறுவனின் தாயாக வரும் ரேணு சதீஷும் கவர்கிறார். கையிலே பணமில்லாமலேயே வீடு வாங்க அலைவது, புரோக்கர்களை டார்ச்சர் செய்வது, அவர்களிடம் சிக்கித் தவிப்பது என சிரிக்க வைக்கிறார். பிறகு, மகனின் நிலை அறிந்து வருத்தப்படும் காட்சியில் பரிதாபப்பட வைக்கிறார்.
முக்கிய கதாபாத்திரத்தில் வரும் சிறுவன் கந்தர்வாவும் அருமையாக நடித்து இருக்கிறார். தனிமையான இடங்களில் கீனோவை கண்டு பயந்து முகத்தைத் திருப்பிக்கொள்வது, ஒரு கட்டத்தில் எதிர்த்து பேசுவது, கீனோவுடன் சண்டை போடுவது என்று ஈர்க்கிறார்.இதர கதாபாத்திரங்களில் வரும் ராஜேஸ் கோபிசெட்டி, சுந்தர் அண்ணாமலை, கண்ணதாசன், சிவம் ஆகியோர் பாத்திரம் அறிந்து நடித்து உள்ளனர்.
ஆலிவர் டெனியின் ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது. லொகேஷன்கள் குறைவு என்றாலும் முடிந்தவரை வெவ்வேறு கோணங்களில் காட்சிகளை பதிவு செய்து, அலுப்பில்லாமல் படத்தைக் கொண்டு செல்ல உதவுகிறது. கீனோ வரும் காட்சிகளில் திகில் கிளப்புகிறது.
கிருத்திகா காந்தியின் எடிட்டிங் கச்சிதம். த்ரில்லர் படம் என்றாலே, காட்சிகள் அதிரடியாக ஓட வேண்டும் என்கிற எழுதப்படதா சட்டத்தை மீறி இயல்பான அளவுக்கு காட்சிகளை செதுக்கி இருக்கிறார்.
இரு சிறு பாடல்கள். பின்னணி இசை படத்துக்கு பலம்.கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருப்பதுடன் பாடல் எழுதி இசையும் அமைத்து இருக்கிறார் ஆர்.கே. திவாகர். கீனோ கதாபாத்திரத்திலும் வருகிறார்.
கீனோ வரும் இடங்கள், அதன் பாடிலேங்குவேஜ் எல்லாம் மிரட்டல்.
பேய்ப்படம், த்ரில்லர் படம் என திகிலூட்டும் ஜர்னர்கள் பல உண்டு. ஆனால் இந்த கீனோ, புதுர ரகம். நமக்குப் அவசியமான பாடத்தை, பாடமாக இல்லாமல் சுவாரஸ்யமான திரைப்படமாக அளிக்கிறது. படக்குழுவினருக்கு பாராட்டுகள்.