Zee5ன் ‘வாரண்ட்’ : ரசிகர்கள் அவசியம் ஆஜராக வேண்டும்!
விக்னேஷ் நடராஜன் இயக்கத்தில், Zee5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள ‘வாரண்ட்’ இணையத் தொடர், போலீஸ் க்ரைம் த்ரில்லர் என்பதோடு, சமுதாயத்துக்குத் தேவையான முக்கிய விஷயத்தையும் சொல்கிறது.
மிகவும் சாதுவான, எளிமையான பின்னணி கொண்ட கருப்பு, ஒரு கைதியை அடித்துக் கொல்லும் அளவுக்குக் கொடூரமாக மாறியது ஏன் என்ற கேள்வியுடன், அவரது கடந்த காலத்தை நோக்கிப் பயணிக்கிறது கதை.
தன் தந்தையின் கனவை நிறைவேற்ற அரசு வேலைக்காகப் போராடும் இளைஞன் கோட்டைக்கருப்பு (பிரசாந்த் பாண்டியராஜ்). ஒவ்வொரு தேர்விலும் நூலிழையில் வாய்ப்பை இழக்கும் கருப்புக்கு, அவரது மாமா (காளி வெங்கட்) பரிந்துரையின் பேரில் காவல்துறை வேலை கிடைக்கிறது. திருச்சி பொன்மலைக்கோட்டை காவல் நிலையத்தில் பணிக்குச் சேருகிறார்.
முரட்டுத்தனமான காவல் நிலைய உலகில், அப்பாவியாக வளர்ந்த கருப்பு பம்மி நிற்கிறார். அவரது மென்மையான குணத்தால் சக அதிகாரிகளும் குற்றவாளிகளும் அவரைக் கேலி செய்கிறார்கள்.
ஒருகட்டத்தில், ரௌத்ர நாயகனாக மாறுகிறார் கோட்டைக்கருப்பு. விசாரணை கைதி ஒருவரை அடித்தே கொன்றுவிட்டதாகக் குற்றம் சாட்டப்படுகிறார். இந்த மரணத்தை விசாரிக்க ஜெயபிரகாஷ் தலைமையில் ஒரு சிறப்புக் குழு அமைக்கப்படுகிறது.
‘விலங்கு’ தொடரின் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ், இதில் நாயகனாகத் தன் திரைப்பயணத்தைத் தொடர்கிறார். இளைஞனுக்கேற்ற உடல்மொழி, போலீஸ் உடையில் காட்டும் யதார்த்தமான உணர்ச்சிகள் என கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவரது கதாபாத்திர வடிவமைப்பு பார்வையாளர்களை எளிதில் ஈர்க்கிறது.
இன்ஸ்பெக்டராக வரும் அருள்தாஸ், வழக்கம்போல இயல்பான நடிப்பை அளித்துக் கவர்கிறார். ஏதாவது கோளாறு கொடுத்துக்கொண்டே இருக்கும் புது கான்ஸ்டபிளைப் பார்த்து எரிச்சலைக் கொட்டுவது, அதே கான்ஸ்டபிளுக்கு மனிதாபிமானத்துடன் உதவுவது என சிறப்பான கதாபாத்திரம். இறுதியில் அவர் தன் அனுபவத்தைப் பகிரும்போது நெகிழ வைக்கிறார்.
நாயகனின் அப்பாவாக பாலாஜி சக்திவேல், மாமாவாக காளி வெங்கட், காதலியாக நம்ரிதா மற்றும் சாயாதேவி, கவுசல்யா உள்ளிட்ட அனைவரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரங்களை நேர்த்தியாகச் செய்துள்ளனர். குறிப்பாகக் காவல் நிலையச் சூழலைத் தாங்கிப் பிடிக்கும் துணைக் கதாபாத்திரங்கள் கதைக்கு பலம் சேர்க்கின்றன.
சாம் சி.எஸ். பின்னணி இசை வழக்கம் போல கதையோட்டத்துக்குக் கூடுதல் ஈர்ப்பை அளிக்கிறது. குறிப்பாக விசாரணைக் காட்சிகளிலும், நாயகனின் மனமாற்றத்தை உணர்த்தும் இடங்களிலும் பின்னணி இசை மிகச் சிறப்பு.
அசோக் குமாரின் கேமரா, திருச்சியின் யதார்த்தமான சூழலையும், காவல் நிலையத்தின் இறுக்கமான வாழ்வியலையும் மிக இயல்பாகப் படம் பிடித்துள்ளது.
ராமரின் எடிட்டிங் கச்சிதம்.
இயக்குநர் விக்னேஷ் நடராஜன், தனது முதல் படைப்பிலேயே கவனத்தை ஈர்த்திருக்கிறார். தேவையில்லாத மெலோடிராமாக்கள் இல்லாமல், முதல் சில நிமிடங்களிலேயே கதையின் மையப்புள்ளிக்குள் நுழைந்துவிடுகிறார். காவலர்களின் அன்றாடச் சவால்கள், காவல் நிலையத்திற்குள் நடக்கும் அரசியல், ஆங்காங்கே தூவப்பட்டுள்ள யதார்த்தமான நகைச்சுவை என முதல் எபிசோடை சுவாரஸ்யமாகக் கட்டமைத்து உள்ளார்.
‘வாரண்ட்’ : ஒரு சாதாரண மனிதன் அதிகார வர்க்கத்தின் சூழலால் எப்படி மாறுகிறான் என்பதை அழுத்தமாகப் பேசுகிறது. விறுவிறுப்பான திரைக்கதையும், யதார்த்தமான மேக்கிங்கும் இந்தத் தொடரை அடுத்தடுத்த எபிசோடுகளை நோக்கிப் பார்க்க வைக்கும் ஒரு நல்ல க்ரைம் டிராமா!
தேவையின்றி வரும் ஆபாச வார்த்தைகளை முற்றிலும் நீக்கிவிடலாம். குடும்பத்தினர் அனைவரும் பார்க்க வாய்ப்பாக அமையும்!

