“பாலாவுக்கு வணக்கம்! சுரேஷ் காமாட்சிக்கு நன்றி!”: நெகிழ்ந்த ‘வணங்கான்’ அருண் விஜய்!

“பாலாவுக்கு வணக்கம்! சுரேஷ் காமாட்சிக்கு நன்றி!”: நெகிழ்ந்த ‘வணங்கான்’ அருண் விஜய்!

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் பாலா இயக்க, அருண் விஜய் நாயகனாக நடிக்கும் வணங்கான் படம் வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது. இந்நிலையில் குடும்பத்துடன் திரைப்படத்தை பிரத்யேகமாகத் திரையிட்டுப் பார்த்திருக்கிறார் அருண் விஜய்.

இதுகுறித்து அருண் விஜய் பதிவிட்டிருக்கும் எக்ஸ் தளப் பதிவில், “மன நெகிழ்வுடனும் கனத்த இதயத்துடனும், என் இயக்குனர் திரு. பாலா சார் அவர்களுக்கு, நான் திரையுலகில் கால் பதித்த காலத்தில் இருந்து, உங்கள் படைப்புகளின் ரசிகனாகவும், உங்களைக் கண்டு வியந்து, நேசித்து, ஒரு நடிகனாக “எனக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காதா” என ஏங்கியவனுக்கு தங்களின் இயக்கத்தில் பணியாற்ற ‘வணங்கான்’ படத்தின் மூலம் வாய்ப்பளித்தமைக்கு மனமார்ந்த நன்றிகள்.

நம் படப்பிடிப்பின் பொழுது கூட இக்கதையின் பாதிப்பை நான் முழுமையாக உணரவில்லை. ஆனால் அதனை இப்பொழுது வெள்ளித்திரையில் காண்கையில், என் உணர்ச்சிகளை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. என் பெற்றோரை பெருமையில் நெகிழ்வடைய செய்தமைக்கு உங்களை வணங்குகிறேன்.

எனது திரையுலகப் பயணத்தில், வணங்கான் ஒரு மிக முக்கியமான பாகமாக அமையும் என்பதில் எனக்குத் துளி அளவும் சந்தேகமில்லை! இப்படைப்பின் மீது முழுமையான நம்பிக்கை வைத்து, பக்க பலமாக இருந்து கொண்டிருக்கும் திரு. சுரேஷ் காமாட்சி அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். மக்கள் அனைவரும் இப்படத்தை விரைவில் திரையில் காணும் நாள் நோக்கி மிகவும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்” என்று பதிவிட்டிருக்கிறார் அருண் விஜய்.

Related Posts