சர்வதேச திரைப்பட விழாவில் சூரியின் ’கொட்டுக்காளி’

 சர்வதேச திரைப்பட விழாவில் சூரியின் ’கொட்டுக்காளி’

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி, அன்னா பென் நடித்துள்ள திரைப்படம்  ‘கொட்டுக்காளி’ இந்த படம்  பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட இருப்பதாக நடிகரும் தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து எக்ஸ் சமூக வலைளத்தில் சிவகார்த்திகேயன் கூறியிருப்பதாவது: நமது சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘கொட்டுக்காளி’ திரைப்படம் 74 ஆவது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் உலக திரைப்படங்களுக்கான பிரிவில் தேர்வாகியுள்ளதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறோம்.

இத்திரைப்படத்தை உலக தரத்தில் இயக்கியுள்ள இயக்குநர் பி.எஸ்.வினோத் ராஜ் மற்றும் நடித்துள்ள சூரி, அன்னா பென் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த அன்பும் மகிழ்ச்சியும் பாராட்டுக்களும்.

பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் பிரத்தியேக திரையிடலுக்கு தேர்வாகியுள்ள முதல் தமிழ் திரைப்படம் நமது ‘கொட்டுக்காளி’ என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. இது போன்றதொரு பெருமைக்குரிய படைப்பை தயாரிக்க உத்வேகம் அளித்து அதை சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லவும் ஊக்கம் கொடுத்துக் கொண்டிருக்கும் எனது அன்பிற்குரிய ரசிகர்களாகிய உங்களுக்கே அனைத்து பெருமையும் சேரும்” இவ்வாறு சிவகார்த்திகேயன் தனது  எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.