“பிரபாகரன் – சீமான் படம் கிராபிக்ஸ்! நான்தான் செய்துகொடுத்தேன்!”: இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் அதிர்ச்சி பதிவு!

“பிரபாகரன் – சீமான் படம் கிராபிக்ஸ்! நான்தான் செய்துகொடுத்தேன்!”: இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் அதிர்ச்சி பதிவு!

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுடன் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எடுத்துக்கொண்ட ஒளிப்படம் மிகவும் பிரபலம்.

ஆனால் அந்த படம் வெளியானபோதே, “இது கிராபிக்ஸ்..” என்ற பேச்சு எழுந்தது. அதற்கேற்ற மாதிரி சீமான் நிறைய கதைகள் சொல்ல ஆரம்பித்தார். “பிரபாகரன் எனக்கு ஆமைக்கறி இட்லி சுட்டுக்கொடுத்தார்… துப்பாக்கிச் சுட சொல்லித்தந்தார்” என்றெல்லாம் பேச ஆரம்பித்தார் சீமான். இதை அவரது கட்சியைச் சேர்ந்த அப்பாவிகள் நம்பினர். அதே நேரம் வெகு பலர் சீமான் பேச்சை கிண்டலடிக்கவே செய்தனர்.

இன்று வரை, அந்த ஒளிப்படம் குறித்த சர்ச்சை தொடர்கிறது. இந்த நிலையில் வெங்காயம், பயாஸ்கோப் ஆகிய படங்களை இயக்கிய சங்ககிரி ராஜ் குமார் தனது முகநூல் பக்கத்தில், ” இவர், அவரை சந்திக்கவே இல்லை! எதன் அடிப்படையில் சொல்கிறேன் என்றால்.. அந்த புகைப்படத்தை எடிட் செய்து கொடுத்தவன் என்கிற அடிப்படையில்…” என்று பதிவிட்டார். இது பெரும் பரபரப்பை கிளப்பியது.

பிரபாகரனுடன் சீமான் இருக்கும் படத்துடன், சங்ககிரி ராஜ்குமாரின் பதிவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

இது குறித்து சங்ககிரி ராஜ்குமாரை தொடர்புகொண்டு பேசினேன்.

அவர், “நான் மக்கள் தொலைக்காட்சியில் ‘வெங்காயம்’ என்ற சீரியல் செய்து கொண்டிருந்தேன். அந்த சமயம் அங்கு வேலை செய்த செங்கோட்டையன் என்பவர் DVD ஒன்றை கொண்டு வந்தார். அதில் அண்ணன் சீமான் புகைப்படமும் தலைவர் பிரபாகரன் வேறு சில ஆளுமைகளுடன் இருக்கும் புகைப்படமும் இருந்தது. இதில் ‘தலைவரும் அண்ணன் சீமானும் ஒன்றாக இருப்பது போன்று எடிட் செய்து கொடுக்கணும்’ எனச் செங்கோட்டையன் கேட்டுக்கொண்டார். எதற்காக என நான் கேட்டேன். அதற்கு அவர், ` அண்ணன் சீமானுக்கு நான் சர்ப்ஃரைஸ் கிப்ட் பண்ணப் போறேன்’ என்றார்.

எனக்கும் அண்ணன் சீமானையும், தலைவர் பிரபாகரனையும் பிடிக்கும். அதனால் அந்த வேலையை ஆர்வமாகச் செய்துக்கொடுத்தேன். ஆனால், அந்தப் புகைப்படம், ‘பிரபாகரனை நேரில் சந்தித்த சீமான்’ எனச் சமூக வலைதளங்களிலும், பத்திரிக்கைகளிலும் வந்தது. அப்போதே அது குறித்து நான் செங்கோட்டையனிடம் கேட்டேன். “ஏதோ அவர் தேவைக்கு பயன்படுத்துகிறார்… தமிழக அரசியல் களத்தில் ஒரு அரசியல் தலைவரை உருவாக்க பயன்படுறதா இருக்கட்டுமே’ என்றார்.

எனக்கும் சீமானைப் பிடிக்கும். அவரது சிந்தனைகளை உள்வாங்கியவன். அவருடைய தலைமையில் தமிழர் ஒருங்கிணைப்பு நடந்தால் நல்லது என்று நினைத்தேன். ஆனால், தொடர்ச்சியாக பிரபாகரன் குறித்து அவர் சொல்லி வந்தவையும், தற்போது தந்தை பெரியார் குறித்து பேசி வருவதையும் என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதனால்தான் இப்போது சொல்கிறேன்” எனப் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியிருக்கிறார்” என்றார்.

இதுரை திரைத்துறையில் இருந்து சீமானை கண்டித்தது வேலு பிரபாகரன் மட்டும்தான். அதன் பின் சத்யராஜ், அமீர் ஆகியோர் பொதுப்படையாக இது குறித்து பேசி தங்களது வருத்தத்தைத் தெரிவித்தனர்.

இந்த நிலையில் எளிய இயக்குநரான சங்ககிரி ராஜ்குமார், மிகத் துணிச்சலுடன் உண்மையை வெளிப்படுத்தி உள்ளார்.

மேடைகளில் பெரியார் குறித்தும் திராவிடம் குறித்தும் பேசிய திரைப்புள்ளிகள்… பெரியார் வாழ்க்கையை படம் எடுத்த இயக்குநர் ஞானசேகரன், விடுதலை படத்தில் திராவிடம் குறித்தும் சொன்ன இயக்குநர் வெற்றிமாறன் போன்றோர் இன்னும் மவுனித்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

– டி.வி.சோமு

Related Posts