“முதல்வர் குடும்ப தயாரிப்பாளருக்காக, ‘மேலிட உத்தரவு’ என மிரட்டுகிறார் ஆர்.கே.செல்வமணி!”: தயாரிப்பாளர் பகிரங்க புகார்!

“முதல்வர் குடும்ப தயாரிப்பாளருக்காக, ‘மேலிட உத்தரவு’ என மிரட்டுகிறார் ஆர்.கே.செல்வமணி!”: தயாரிப்பாளர் பகிரங்க புகார்!

தனுஷ் நடிக்கும் இட்லி கடை படத்துக்காக, மேலிட உத்தரவு என்று சொல்லி ஆர்.கே.செல்வமணி மிரட்டியதா, தயாரிப்பாளர் கலைச்செல்வி பகிரங்க புகார் தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமையில் திரைப்பட சங்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டம் கடந்த வருடம் ஜூலை மாதம் நடந்தது.  இக்கூட்டத்தில் பல்வேறு அதிரடி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதில் ஒன்றாக ‘தயாரிப்பாளர்கள் பலரிடம் முன்பணம் பெற்று கால்ஷீட் தராமல் இருக்கிறார் தனுஷ். ஆகவே இனி அவரை வைத்து படங்களை தயாரிக்க உள்ள தயாரிப்பாளர்கள், முன்னதாகவே ரதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தைக் கலந்தாலோசிக்க வேண்டும்’ என்பதும் ஒன்று.

பிறகு,  கடந்த ஆண்டு அக்டோபரில் தயாரிப்பாளர்கள் சங்க கட்டிடத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமையில் நடப்பு தயாரிப்பாளர் மற்றும் பெப்சி ஆகிய சங்கங்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தனுஷ் இரண்டு படங்களுக்கு முன்பணம் பெற்றுக் கொண்டு கால்ஷீட் தரவில்லை என்ற புகார் குறித்து ஆலோசிக்கப்பட்டது.இதில்  இரண்டு தயாரிப்பாளர்களில் ஒரு தயாரிப்பாளருக்கு கால்ஷீட் தருவதாகவும் மற்றொரு தயாரிப்பாளருக்கு வட்டியுடன் பணத்தை திருப்பி தருவதாகவும் தனுஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  இதையடுத்து அவரது படங்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் ஒத்துழைப்பு கொடுக்க முடிவெடுத்தது.

இந்த நிலையில் தனுஷ் மீது புகார் கொடுத்த தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஃபை ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர் கலைச்செல்வி, பகிரங்க கடிதம் ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில்  ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி மீது சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றும், மேலிடம் என்று சொல்லி மிரட்டுவதாகவும் பகிரங்கமாக தெரிவித்து உள்ளார்.

அந்த கடித அறிக்கை…

“திரு.ஆர்.கே.செல்வமணி அவர்களுக்கு,

6.9.24அன்று திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் Five star creations பங்குதாரர் என்ற முறையில் நான் கலந்து கொண்டு திரு.தனுஷ் அவர்கள் எங்களிடம் ஆறு வருடங்களுக்கு முன்,முன்பணம் பெற்றுக்கொண்டு இன்று வரை கால்ஷீட் தரவில்லை  என்று நாங்கள் அனுபவிக்கும் மனவேதனைகளையும் பதிவுசெய்தேன்.

அதனை புரிந்துகொண்ட எங்கள் தயாரிப்பாளர்கள் சங்கம் திரு.தனுஷ் அவர்கள் எங்கள் நிறுவனத்திற்கு படம் நடித்து தரவேண்டும்(முன்பணம் பெற்ற அடிப்படையில் தயாரிப்பாளர்களுக்கு கால்ஷீட் தரவேண்டும்) என்று பேசிக் கொண்டு இருக்கும்போதே தாங்கள் குறுக்கிட்டு, “DAWN pictures திரு.ஆகாஷ் அவர்களின்  “இட்லிகடை”படப்பிடிப்பு நடக்கவேண்டும்,”மேலிடத்து உத்தரவு” என்று கூறியதை மறந்தீரோ?
மேலும் October 30ம் தேதிக்குள் எங்கள் நிறுவனத்திற்கு நியாயம் வாங்கித் தருவதாக தாங்கள் எங்கள் சங்கத்தில் உறுதியளித்தீர்கள்….
நாங்கள் , ஏற்கனவே திரு.தனுஷ் அவர்கள் நடித்த பொல்லாதவன், ஆடுகளம் படங்களை தயாரித்த நிறுவனம் என்று தங்களுக்கு நினைவு கூறுகிறேன். நீதி வழங்கத்தானே சங்கங்கள் உள்ளன??? தங்களின் அரசியல் குறுக்கீட்டால்  இன்று வரை எங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை!
தொழிலாளர் வலியை உணர்ந்த தாங்கள் வட்டிக்கு பணம் வாங்கி படமெடுக்கும் தயாரிப்பாளர்களின் வலியை எப்போது உணர்வீர்கள்?
தயாரிப்பாளர்களின் நலன் காக்க எங்கள் சங்கம் எடுக்கும் முயற்சிகளில், அரசியல் கலக்காமல் ஒத்துழைப்பு தருமாறு வேண்டிக்கொள்கிறேன்.
அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் என்ன முடிவு எடுத்தோம் என்று வெளியே நின்றிருக்கும் பத்திரிகையாளர்களிடம் கூற வேண்டாம், October 30ம் தேதிக்குள் நியாயம் கிடைக்கும் என்று என்னிடம் கூறிவிட்டு இன்று திரு.கதிரேசன் பிரச்சினை செய்கிறார் என்று சொல்வது தங்களின் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியை காட்டுகிறது.  தயாரிப்பாளரின் நியாயம் அறியாமல் எப்படி உங்களால் இப்படி பொதுத்தளத்தில் மனசாட்சியின்றி பேச முடிகிறது….?

மதிப்பிற்குரிய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகம் கவனத்திற்கு, அன்று எங்கள் நிறுவனம் வைத்த கோரிக்கை தங்களிடமே….நடிகர்களிடம் வட்டி பெறும் நோக்கத்தில் எந்த தயாரிப்பாளரும் முன்பணம் தருவதில்லை…தாங்கள் எடுக்கும் முடிவு அனைத்து தயாரிப்பாளர்களின் நலன் கருதியே….எங்களது வலியை உணர்ந்து விரைவில் நியாயம்  பெற்றுத் தருமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்……” – இவ்வாறு கலைச்செல்வி தெரிவித்து உள்ளார்.

தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை திரைப்படத்தை தயாரிக்கும் டான் பிக்சர்ஸ்  ஆகாஷ், மறைந்த முதலமைச்சர் மு.கருணாநிதியின் மகன் மு.க. முத்துவின் பேத்தி தரணீஸ்வரியைத்தான் திருமணம் செய்து உள்ளார். ஆகவே, “மேலிட உத்தரவு” என ஆர்கே.செல்வமணி கூறியதாக தயாரிப்பாளர் கலைச்செல்வி தெரிவித்துள்ளது இன்னும் சில யூகங்களை ஏற்படுத்துகிறது.

ஆகவே அவரது  கடித அறிக்கை, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.