ரெட்ரோ: திரைப்பட விமர்சனம்

தூத்துக்குடி பகுதியையே தனது அதிரடி நடவடிக்கைகளால் மிரட்டி வரும் தாதா, ஜோஜு ஜார்ஜ். இவரது மகன் சூர்யா. இவர் எப்போதுமே புன்னகையே இன்றி கடுகடு முகத்துடன் வலம் வருபவர்.
தந்தையின் அராஜகங்கள் அனைத்துக்கும் துணையாக நிற்கிறார் சூர்யா. ஒரு கட்டத்தில் காதலி பூஜா ஹெக்டேவுக்காக, தனது ரவுடித்தனங்களை நிறுத்துகிறார். இதனால் அப்பா ஜோஜு ஜார்ஜுக்கும், மகன் சூர்யாவுக்கும் பிரச்சினை உருவாகிறது.
இதற்கிடையே ஜோஜுவால் கடத்தப்பட்ட தங்க மீன் ஒன்று சூர்யா வசம் சிக்கிவிட.. அதை மீட்க முயற்சிக்கிறார் ஜோஜூ. இதனால் மோதல் அதிகரிக்கிறது.
இதற்கிடையே தன்னைப் பற்றிய ஒரு உண்மையை அறிகிறார் சூர்யா.
அந்த உண்மை என்ன… தங்க மீன் யார் வசமானது, தான் நினைத்தை சாதித்தாரா சூர்யா என்பதுதான் மீதிக்கதை.சிறு வயதில் இருந்தே சிரிக்கவே சிரிக்காத இறுக்கமான முகத்துடன், தாதா சூர்யாவின் நடிப்பு அருமை. குறிப்பாக முதல் பாதியில் வரும் ‘கனிமா’ பாடலுக்கு ஒரே சிங்கிள் ஷாட்டில் பாடல், நடனம், சண்டை என பல்வேறு விதங்களில் அதிரடி நடிப்பை அள்ளித் தந்து இருக்கிறார் சூர்யா.
அதே போல காதலிக்காக திருந்தி வாழும் காட்சிகள், கோபத்தை சிரமமப்பட்டு அடக்கிக் கொள்வது, ஜோஜு ஜார்ஜுடன் மோதல் இருந்தாலும் கிண்டலும் கேலியுமாக பேசுவது என ரசிக்க வைக்கிறார். சண்டைக் காட்சிகளில் எதிரிகளை பந்தாடி தூள்பறத்துகிறார்.
நாயகி பூஜா ஹெக்டே, காதல் காட்சிகளில் ரசிக்கவைக்கிறார். அதே நேரம் சட்டென கோபப்பட்டு விலகிவிடும் காட்சிகளில் எரிச்சலூட்டுகிறார். அவர் என்ன செய்வார்.. அந்த கபாதாத்திரம் உருவாக்கப்பட்டது அப்படி.
மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் வழக்கம் போல சிறப்பான நடிப்பை அளித்து இருக்கிறார். அசத்தி இருக்கிறார். ஆத்திரத்துடன், “மகனே” என அவர் உச்சரிப்பது ஒரு துளி. அவருக்கும் சூர்யாவுக்கும் நடக்கும் மோதல் ரசிக்க வைக்கிறது.அரசியல்வாதியாக வரும் பிரகாஷ்ராஜும் எப்போதும்போல பாத்திரம் அறிந்து நடித்து உள்ளார். டாக்டராக வரும் ஜெயராம் கதாபாத்திரம்தான் எரிச்சலூட்டுகிறது ஒரே ஒரு பாடலுக்கு நடிகை ஸ்ரேயா சரணை சொல்லாமல் இருக்க முடியுமா?
சந்தோஷ் நாராயணனின் இசையில் கனிமா பாடல் துள்ளல். பின்னணி இசையிலும் ரசிக்கவைக்கிறார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு சிறப்பு. காட்டுப் பகுதியை கண் முன் நிறுத்துகிறது.
தாதா, கடத்தல் என்று மட்டும் இல்லாமல், தந்தை மகன் உறவு, காதல் சிக்கல், எளிய மக்களின் போராட்டம் என பலவிதங்களில் கதையை நகர்த்திச் சென்று இருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். அதே நேரம், “குறிப்பிட்ட நாளில் பிறந்த குழந்தையால் ஆபத்து” என (இந்தக் காலத்திலும்) ஒரு ராஜா நம்பி, அன்று பிறக்கும் குழந்தைகளைக் கொல்வது… இதைத் தொடர்ந்த புராணக்(!) காட்சிகள் அலுப்பூட்டுகின்றன. புதிதாக யோசிக்கலாம். அல்லது, இயல்பான மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் காட்சிகளே போதும் மக்கள் ரசிப்பார்கள். இதை கார்த்திக் சுப்புராஜ் உணர வேண்டும்.