“அமெரிக்க அதிபர் பைடன் என்னிடம் பேசினார்!”: எஸ்.வி.சேகர் அதிர்ச்சி தகவல்

“அமெரிக்க அதிபர் பைடன் என்னிடம் பேசினார்!”: எஸ்.வி.சேகர் அதிர்ச்சி தகவல்

நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகரை பேட்டி காண இன்றுtamilankural.com இதழ் சார்பாக தொடர்புகொண்டோம்.

அப்போது அவர் தனக்கு உடல் நிலை சரியில்லை என்றும் இன்னொரு நாள் பேட்டி வைத்துக்கொள்ளலாம் என்றும் கூறினார்.

அதோடு, தனக்கு உடல் நிலை சரியில்லாததை அறிந்து அமெரிக்க அதிபர் அலைபேசியில் அழைத்து நலம் விசாரித்தார் என்றும் தெரிவித்தார்.

இது எஸ்.வி.சேகர் அவர் கூறியதாவது:

” டெல்லி சென்று திரும்பிய எனக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இது எப்படி அமெரிக்க அதிபர் ஜோபைடனுக்கு தெரிந்ததோ..  இன்று காலை என்னை போன் மூலம் தொடர்பு கொண்டார்.

அப்போது அவர் என் உடல் நிலை குறித்துக் கேட்டார், ‘தொண்டை வலி’ எனத் தெரிவித்தேன். அதற்கு அவர், ‘நீங்கள் அமெரிக்கா  வந்து என் நேரடி பார்வையில், அதிபருக்கான மருத்துவமனையில் சிகிச்சை பெறுங்கள்; உங்கள் உடல் நிலை எனக்கு முக்கியம்’ என்றார்.

நான், ஆயுர்வேத சிகிச்சை பெறுவதாக அவரிடம் தெரிவித்தேன். ‘சரி’ என அவர் போன் வைத்துவிட்டார்.

பிறகு சிறிது நேரம் கழித்து மீண்டும் என்னை போனில் அழைத்த பைடன், ‘ஆயுர்வேத சிகிச்சையை அமெரிக்கா வந்து பெற்றுக்கொள்ளுங்கள்; நான் ஏற்பாடு செய்கிறேன்’ என்றார்.

நான், ‘வேண்டாம்.. இங்கையே பார்த்துக்கொள்ளலாம்’ என்று தெரிவித்து நன்றி தெரிவித்தேன்.

அப்போது அவர், ‘உடல் நிலையில் கவனம் செலுத்த வேண்டும்; அதுமிகவும் முக்கியம்’ என்று தெரிவித்து போனை கட் செய்தார்” என்று எஸ்.வி.சேகர் நம்மிடம் தெரிவித்தார்.

“பிரதமர் மோடி தன்னை உடல்  நலம் விசாரித்தார் என  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கூறியதைப் போலவே இருக்கிறதே” என்றோம்.

அதற்கு எஸ்.வி.சேகர், “அது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. என்னிடம் அமெரிக்க அதிபர் பைடன் பேசினார்; இது பற்றி அவரிடம் வேண்டுமானால் கேட்டுக்கொள்ளுங்கள்..” என்று சொல்லி சிரித்தார்.

விரைவில் எஸ்.வி.சேகரின் சீரியஸ் பேட்டி தமிழன் குரல் இணையம் மற்றும் யு டியுப் சேனலில் வெளியாகும்.