சீனு ராமசாமியின் அடுத்த கவிதைத் தொகுப்பு: ‘மேகங்களின் பேத்தி…’

சீனு ராமசாமியின் அடுத்த கவிதைத் தொகுப்பு:  ‘மேகங்களின் பேத்தி…’

தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, மாமனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கிய தேசிய விருது இயக்குநர் சீனு ராமாமி, சிறந்த கவிரும்கூட.

‘காற்றால் நடந்தேன்’, ‘புகார் பெட்டியின் மேல் படுத்துறங்கும் பூனை’,  ‘நினைவில் ஒளிரும் ஜிமிக்கி கம்மல்’  உள்ளிட்ட இவரது கவிதைத் தொகுப்புகள் இலக்கிய வாசகர்கள் நெஞ்சினில் நீங்கா இடம் பெற்றவை.

சீனு ராமசாமியின் கவிதைகள் குறித்து கவிஞர் கரிகாலன், “மொழியின் சுருக்கமான மற்றும் துல்லியமான பயன்பாட்டுடன் எழுதப்படுபவை சீனு ராமசாமி கவிதைகள். அனுபவத்தில் உணர்ந்ததை, புதிய முன்னோக்குகளோடும், தனித்துவமான நுண்ணறிவோடும் கவிதைகளாக வழங்குவது சீனு ராமசாயின் சிறப்பம்சம். இவரது கவிதைநடை வழமையிலிருந்து விலகி, புதிய சிந்தனைத் திறப்புகளுக்கான சவால்களை வழங்குபவை.

ஒரு நல்ல கவிதை, தன்னை வாசிப்பவர்களை, அவர்களது வழக்கமான இடத்திலிருந்து நகர்த்திச் செல்கிறது. அவர்கள் இருளில் இருந்தால், ஒளியை நோக்கியும், அவர்கள் சந்தடியிலிருந்தால் விசாலமான – காற்றோட்டமான இடம் நோக்கியும் நகர்த்துபவை. சீனு ராமாசாமியின் கவிதையோடு நகர்பவர்கள் ஒரு நாகரிக சமூகத்துக்கு இடம் பெயர்கிறார்கள். முந்தைய அவரது தொகுப்புகள்போலவே, ‘மேகங்களின் பேத்தி’ தொகுப்பின் கவிதைகளும் செயல்படுகின்றன” என்று தெரிவித்து உள்ளார்.

தீக்கதிர் நாளிதழின் முன்னாள் பொறுப்பாசிரியர் அ. குமரேசன், “தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு வழியை நிலைப்படுத்திக்கொண்டவர் சீனு ராமசாமி. ‘ஆக் ஷன்’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு அகராதிப்படி செயல், நடவடிக்கை, நடிப்பு என்ற பொருள்கள்தான் உண்டு. ஆனால், திரையகராதியில் அடிதடி, அதிரடி என்ற அர்த்தங்கள் எழுதப்பட்டுவிட்டன. அந்த இலக்கணத்துக்கு அடங்க மறுத்து, அமைதியான நீரோட்டத்தின் பேரலைகளை உணரச் செய்யும் படங்கள் சந்தையிலும் வெற்றி காண முடியுமெனச் செய்துகாட்டிய முதன்மை இயக்குநர்களில் ஒருவர் இவர். அந்த நீரோட்டத்துக்கே உரிய சில்லென்ற புத்துணர்ச்சியை, புதிரான ஆழத்தைத் துய்ப்பதற்கு இந்நூலின் ஒவ்வொரு கவிதையும் பாதையமைக்கிறது” என்று தெரிவித்து உள்ளார்.

இந்த நிலையில்,  ‘மேகங்களின் பேத்தி…’  என்ற தலைப்பில் புதிய கவிதை நூலை எழுதி இருக்கிறார் சீனு ராமசாமி.

இது குறித்து நடிகர் விஜய் சேதுபதி, தனது எக்ஸ் பக்கத்தில், “இயக்குனரும் கவிஞருமான சீனு ராமசாமி சாரின் புதிய கவிதை நூல் மேகங்களின் பேத்தி ( 2025) எழுத்து பிரசுரம் வெளியிடுகிறது” என்று குறிப்பிட்டு உள்ளார். அத்துடன்  நூல் முன்பதிவு செய்யவும் லிங்க் இணைத்து உள்ளார்.

முன்பதிவு செய்ய: https://tinyurl.com/Megangalin-Pethi

Related Posts