மதுவந்தியின் அடுத்த வீடியோ!
கொரோனா வைரஸ் பீதி ஒட்டுமொத்த உலகையும் ஆட்டிப்படைக்கிறது. இந்நிலையில், இந்திய பிரதமர் மோடி, “கைதட்டுங்கள், விளக்கேற்றுங்கள்..” என மக்களுக்கு கோரிக்கை வைத்தார்.
இதை பலரும் கடுமையாக விமர்சித்தனர். அதே நேரம், பாரதிய ஜனதா கட்சியின் அபிமானிகள், பிரதமரின் வேண்டுகோள்களை பாராட்டினர்.
இந்நிலையில், நடிகர் ஒய்.ஜி. மகேந்திரனின் மகளும் கல்வி ஆர்வலருமான மதுவந்தியும் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அதில், “இரவு ஒன்பது மணிக்கு மின் விளக்குகளை அணைத்து, தீபம் ஏற்றுவதன் பின்னால் அறிவியல் தத்துவம் உள்ளது. இதை ஜோதிடத்தில் டாக்டர் பட்டம் வாங்கிய ஒருவர் கூறியுள்ளார்” என்றார். இது பெரும் சர்ச்சையானது.
இந்நிலையில் இரண்டாவதாக மதுவந்தி வெளியிட்ட வீடியோவில், இந்தியாவில் 8,000 கோடி மக்களுக்கு ரூ.5000 கோடியை அவர்களது வங்கிக் கணக்கில் ‘உஜ்வாலா’ திட்டத்தின் கீழ் மோடி செலுத்தியிருப்பதாகத் தெரிவித்தார். இது குறித்த தகவல் க ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ பத்திரிகையில் வந்திருப்பதாக கூறினார்.
மதுவந்தியின் இந்த பேச்சு குறித்து ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பலரும் கடுமையாக விமர்சிக்கின்றனர்; கேலி செய்கின்றனர்.
அவர்கள் தெரிவிப்பதன் சுருக்கம்:
“இந்தியாவின் மக்கள்தொகை 140 கோடி. உலகின் ஒட்டுமொத்த மக்கள்தொகையின் கூட்டுத்தொகை கூட 8,000 கோடி வராது. அவர் சொல்கிறபடியே பார்த்தாலும், 8,000 கோடி பேருக்கு ரூ. 5,000 கோடியை பிரித்துக் கொடுத்தால் ஒருவருக்கு 1 ரூபாய் கூட தர முடியாது. அதுமட்டுமா, 30,000 கோடியில் 40 சதவீதம் 20,000 கோடி என்கிறார். அனைத்தும் பெண்களின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்பட்டுள்ளதாகச் சொல்கிறார். மொத்த ஜன் தன் வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கையே 36.25 கோடிதான்.
இந்த நிலையில் ஆங்கிலம் தெரியுமா என்கிற மாதிரி கிண்டலாக வீடியோவில் பேசுகிறார் மதுவந்தி.
நாங்கள் ஆங்கிலம், கணக்கு எல்லாம் படித்துத் தேறிவிட்டோம். 30,000 கோடியில் 40% 20,000 கோடி, இந்திய மக்கள்தொகை 8,000 கோடி என்று ‘கொரோனா ஊரடங்கு’ காலத்தில் சாவகாசமாக அமர்ந்து வடை சுட்டுக் கொண்டிருக்காமல் கணக்கு வாய்ப்பாட்டையாவது படித்துவிட்டு வீடியோ வெளியிடுங்கள்” என்று பலரும் கிண்டலடிக்கிறார்கள்.
இது குறித்து மதுவந்தியை தொடர்புகொண்டு கேட்டோம்.
அவர், “அந்த வீடியோவில் ஆங்கிலத்தில் பேசும்போது சரியாகப் பேசிவிட்டேன். தமிழில் பேசும்போது தவறு ஏற்பட்டுவிட்டது. இது ஹூயூமன் எரர். அதாவது மனிதத் தவறு. மற்றபடி நான் சொன்னதெல்லாம் உண்மைதான். இந்தியாவின் மக்கள் தொகைகூட தெரியாதவளா நான்? அடுத்ததாக விரிவான வீடியோ ஒன்று வெளியிடுவேன்!” என்றார்.
ஆக, அடுத்த பரபரப்பு தயாராக இருக்கிறது!