குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’ திரைப்பட விமர்சனம்

குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’ திரைப்பட விமர்சனம்

ஒரு அரசியல்வாதி. அவருக்கு ஒரு மகன். இதற்கிடையே, தன் வீட்டில் வேலை செய்ய வந்த வடமாநில பெண்ணுடன் நெருக்கமாகிறார். . இதனால் அவருக்கும் ஒரு குழந்தை பிறக்கிறது. அதனால் அந்த பெண்ணை வீட்டை விட்டு வெளியேற்றி விடுகிறார்கள். அவரது மகன் தனது தந்தையைப் போல் தானும் அரசியல்வாதியாகி ஆட்சி அதிகாரத்தில் அமர வேண்டும் என்ற ஆசையோடு வளர்கிறார். மூத்த மனைவியின் மகனும் அரசியலில் தந்தையை விட பெரிய இடத்திற்கு செல்ல வேண்டும் என்று விரும்புகிறார்.

இவர்கள் இருவரும் ஒரே பள்ளியில் படிக்கிறார்கள். அப்போதில் இருந்தே, விளம்பரம், தேர்தல், சதி என்று அரசியல்வாதிகளுக்கான ‘தரத்துடன்’ வளர்கிறார்கள்.

அதன் பிறகு என்ன ஆனது என்பதை காமெடியாக சொல்வதுதான் ‘குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’.

யோகி பாபு வழக்கம் போல், உடல் கேலி செய்து சிரிக்க வைக்க முயற்சிக்கிறார். சில இடங்களில் ரசிக்க வைக்கிறார்.

அவர்தான்  கதையின் நாயகன் என்றாலும், திடீர் திடீரென்று தலைக்காட்டி  திடீர் திடீரென மறைகிறார்.

கதையின்  நிஜ நாயகர்கள்,  சிறுவர்களான இமய வர்மன் மற்றும் அத்வைத் ஜெய் மஸ்தான்.  இருவரும் அதிரவைக்கிறார்கள். வயதுக்கு மீறிய வசனங்கள்தான் குறை. மற்றபடி ரசிக்க வைக்கிறார்கள்.

சிறுமி ஹரிகா கதாபாத்திரம் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தை நினைவு கூர்வது போல் உள்ளது.

பெரும் இடைவேளைக்குப் பிறகு, திரையில் முகம் காட்டியிருக்கிறார் செந்தில்.  அரசியல் கட்சித் தலைவராக வந்து ரசிக்க வைக்கிறார்.  காமெடி இல்லை. ஆனாலும் ஈர்க்கிறார்.

”எத்தனை பேர் வந்து உடைத்தாலும் இறுதியில் காணாமல் போவது அவர்கள் தான், என் கட்சி இல்லை” என்கிற வசனம் ஒரு உதாரணம்.

சுப்பு பஞ்சு, சித்ரா லட்சுமணன், மயில்சாமி, வைகா ரோஸ், அஸ்மிதா சிங், லிஸி ஆண்டனி, சரவணன் என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் அனைவரும் பாத்திரம் உணர்ந்து நடித்து உள்ளனர்.

சாதகப் பறவைகள் சங்கரின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும்  ஈர்க்கிறது. ஜெ.லக்‌ஷ்மண் குமாரின் ஒளிப்பதிவு படத்துக்கு பலம். படத்தொகுப்பாளர் ரிச்சர்ட் கெவின்.ஏ,  எடிட்டிங் கச்சிதம்.

எழுதி இயக்கியிருக்கும் என்.சங்கர் தயாள், தமிழக அரசியல் மற்றும் குடும்ப அரசியலை, சிறுவர்கள் மூலம் நகைச்சுவையாக சொல்லி இருக்கிறார்.

சிறுவர்களிடம் நடிப்பை வாங்கிய விதம் மற்றும் பள்ளி மாணவர் தலைவர் தேர்தல் மூலம் அவர்களுக்கிடையே ஏற்படும் போட்டி, அதில் நடக்கும் சதிராட்டங்கள், அதை தொடர்ந்து இரண்டு சிறுவர்களின் அரசியல் எதிர்காலம் ஆகியவற்றை நகைச்சுவையாக சொல்லி ரசிக்க வைக்கிறார் இயக்குநர்.

மொத்தத்தில், ‘குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’ ரசித்து சிரிக்க வைக்கிறது.

Related Posts