படத்தைப் பார்த்து இசையமைக்க ஒப்புக் கொண்ட இளையராஜா!
புகழ் பெற்ற ஈரானிய இயக்குனர் மஜித் மஜிதி இயக்கி 1997-ம் ஆண்டு ஆஸ்கர் விருதுக்கு போட்டி போட்ட படம் ‘சில்ரன் ஆஃப் ஹெவன்’. இப்படம் உலகெங்கிலும் உள்ள குழந்தைகளை வெகுவாக கவர்ந்தது. மேலும், பல உயரிய விருதுகளை வாங்கி குவித்தது.
இப்படத்தின் மறு உருவாக்கத்தின் உரிமையை ‘உயிர்’, ‘மிருகம்’ மற்றும் ‘சிந்து சமவெளி’ படத்தின் இயக்குனர் சாமி வாங்கியுள்ளார்.நான் இதுவரை இயக்கிய மூன்று படங்களும் என்னுடைய அடையாளம் அல்ல. என்னை அடையாளப்படுத்தும் சினிமாவை இனிமேல் தான் நான் இயக்கப் போகிறேன் என்றார். ஒருமுறை என் அக்கா என் வீட்டிற்கு வந்தபோது ‘சில்ட்ரன் ஆஃப் ஹெவன்’ திரைப்படத்தை குழந்தைகளுக்கு போட்டுக் காண்பித்தேன். உலகில் உள்ள அனைத்து தரப்பு குழந்தைகளிடம் எப்படி கலந்துள்ளது என்பதை குழந்தைகளின் மூலம் நான் அறிந்தேன். இதுபோன்ற படங்கள் ஏன் தமிழில் வருவதில்லை? என்ற என் அக்காவின் கேள்விக்கு பதிலாக, இப்படத்தை தமிழில் மறு உருவாக்கம் செய்யும் உரிமையைப் பெற்றேன்.
இந்தப் படம் 80 களில் நடக்கும் கதை என்பதால் அதன் அடிப்படை உணர்வுகளை சிதைக்காமல் கொடுக்க முடிவு செய்தேன். அதற்காக பொருத்தமான இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என்று பல இடங்களில் தேடி இறுதியாக, கொடைக்கானலுக்கு அருகிலுள்ள பூம்பாறை என்று உரை தேர்ந்தெடுத்தேன். இவ்வூரில் உள்ள வீடுகள் 500 வருடங்கள் பழமையானவை. ஆகையால், நான் நினைத்தது போல் படத்தின் உணர்வை சிதையாமல் கொடுக்க இந்த இடம் தான் சரியானது என்று படப்பிடிப்பு நடத்தி முடித்திருக்கிறோம் என்றார்.
இப்படத்திற்கு இசையமைக்க இளையராஜாவை அணுகினேன். அவர் படத்தை எடுத்துட்டு வாருங்கள் என்று கூறிவிட்டார். படம் முடிந்ததும் அவரிடம் போட்டுக் காண்பித்தேன். உடனே இசையமைக்க ஒப்புக் கொண்டார். தற்போது, பின்னணி இசையமைக்கும் பணியைத் தொடங்கி விட்டார்.
இப்படத்திற்கு ‘அக்கா குருவி’என்று பெயரிடப்பட்டுள்ளது.