சிறைத் தண்டனையை விரைவாக கடப்பது எப்படி? :  விளக்கம் அளித்த சத்குரு

சிறையிலிருந்து விடுதலை ஆகும் கைதிகளுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க தொழில்துறையினருடன் பேசி முயற்சி எடுக்கலாம் என்று சிறைத்துறை டிஜிபியிடம் ஆன்லைனில் கலந்துரையாடியபோது சத்குரு தெரிவித்தார்.

தமிழக சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை தலைமை இயக்குநர் திரு. சுனில் குமார் சிங், ஷா யோக மைய சத்குரு அவர்களுடன் நேற்று (நவம்பர் 9) ஆன்லைன் வாயிலாக கலந்துரையாடினார்.

சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த கலந்துரையாடல் தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் டி.ஜி.பி.யுடன், சிறைத்துறை உயர் அதிகாரிகள், சிறை காவலர்கள் மற்றும் சிறைவாசிகள் கலந்துகொண்டனர். அவர்களது பல்வேறு கேள்விகளுக்கு சத்குரு பதில் அளித்தார்.

கலந்துரையாடலின் போது டி.ஜி.பி., “தண்டனை காலம் முடிந்து வெளி வரும் சிறை கைதிகள் விடுதலைக்கு பிறகு சமூகத்துடன் மீண்டும் ஒன்றிணைவதில் நிறைய சிரமங்களை சந்திக்கின்றனர்.  அவர்களுக்கு வேலை கொடுக்க பலரும் தயங்குகின்றனர்.  இதற்கு என்ன தீர்வு?” என சத்குருவிடம் டிஜிபி கேட்டார்.

அதற்கு சத்குரு, “நீங்கள் விரும்பினால் தொழில் துறையினருடன் பேசி, விடுதலையாகும் சிறைவாசிகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்க முயற்சி எடுக்க முடியும்” என கூறினார்.

கோபத்தை எப்படி கட்டுப்படுத்துவது, எதிர்மறை எண்ணங்களை எப்படி தவிர்ப்பது, மன வேதனையில் இருந்து எப்படி வெளி வருவது, இறந்த காலத்தில் நடந்த சம்பவத்தின் குற்ற உணர்ச்சியில் இருந்து எப்படி மீள்வது என்பது போன்ற பல்வேறு கேள்விகளை சிறைவாசிகள் சத்குருவிடம் கேட்டனர்.

அனைத்து கேள்விகளுக்கும் மிக எளிமையாகவும், சிறு சிறு கதைகளுடன் சுவாரஸ்யமான பதில்களை அளித்தார்  சத்குரு.

அவர் அளித்த பதில்களின் சுருக்கம்:

“சிறைவாசிகளாக இருக்கும் அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் என்னுடைய வணக்கங்கள். தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

நீங்கள் ஏதோ ஒரு காரணத்தினால் சிறைக்குள் வந்துவிட்டீர்கள். இனி சில வருடங்களுக்கு சிறைசாலை தான் உங்களுடைய வீடு. நீங்கள் நடந்ததை எண்ணி வருந்துவதால் உங்களுக்கான தண்டனை காலம் குறையாது.

நீங்கள் ஆனந்தமாக இருந்தாலும், துன்பமாக இருந்தாலும் ஒரே தண்டனை காலம் தான்.

ஒரு விசயத்தை  நீங்கள் இதை கவனித்து பார்த்து இருக்கலாம். ஏதோ, ஒரு நாள் நீங்கள் ஆனந்தமாக இருந்திருந்தால், அந்த நாள் மிக வேகமாக கடந்திருக்கும். இன்னொரு நாள் நீங்கள்  வருத்தமான மனநிலையில்  இருந்திருந்தால் 24 மணி நேரம் என்பது வருடக்கணக்கு போல் ஆகிவிடுவதை உணர்ந்து இருக்கலாம்.

ஆகவே, நீங்கள் உங்கள் உள்ளத்தை ஆனந்தமாக வைத்து கொண்டால், உங்கள் தண்டனை காலம் வேகமாக ஓடிவிடும்.

நீங்கள் எதை வேண்டாம் என்று ஒதுக்க நினைக்கிறீர்களோ.. அதுவே மனதில் ஓடிக்கொண்டு இருக்கும்.  மனதின் அடிப்படை இதுதான்.

இதைப் புரிந்து கொள்ளாமல் செயல்பட்டால் ஒன்றும் பயனில்லை.  குரங்கை நினைக்க வேண்டாம் என முடிவு செய்தால் மனம் குரங்கையே நினைக்கும்.

எனவே, எது வேண்டாம் என முடிவு செய்யாதீர்கள், எது வேண்டும் என முடிவு செய்யுங்கள். ஈஷா க்ரியா போன்ற பயற்சிகளை நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால் மனரீதியான பாதிப்பில் இருந்து விரைவில் முழுமையாக வெளி வர முடியும்.

நெல்சன் மண்டேலா, மகாத்மா காந்தி போன்றவர்கள் சிறையில் இருக்கும் போது தான் அவர்களின் வளர்ச்சியே நடந்தது என சொல்கிறார்கள். அவர்கள் சிறையில் இருந்த காலத்தை சரியாக பயன்படுத்தி கொண்டார்கள்.

சிறைவாசியாக இருக்கும் உங்களுக்கு என் நெஞ்சில் எப்போதும் ஒரு இடம் இருக்கிறது. உங்களுக்கு எங்களால் முடிந்த உதவிகளை செய்வதற்கு தயாராக இருக்கிறோம்.

நீங்கள் சிறையில் இருக்கும் நேரத்தை நல்லப்படியாக உபயோகப்படுத்தி கொள்ளுங்கள். நடந்தவற்றை எண்ணி வருந்தாதீர்கள். நேற்று நடந்ததை யாரும் சரிப்படுத்த முடியாது. நாளை நடக்க வேண்டியதை நாம் உருவாக்கி கொள்ள முடியும்.

இன்னும் சில தினங்களில் தீபாவளி வருகிறது. நீங்கள் குடும்பத்துடன் இல்லை. ஆனால், நான் உங்களுடன் இருக்கிறேன். நீங்கள் இந்த தீபாவளியை கட்டாயம் நல்லப்படியாக உணர வேண்டும் என்பது என் விருப்பம்.

அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்!” – இவ்வாறு சத்குரு பேசினார்.

கொரோனா பாதிப்பு மிகுந்த இக்கட்டான சூழலில் தமிழகத்தில் 8,165 ஆண் சிறைவாசிகள், 3,453 பெண் சிறைவாசிகள் மற்றும் 3,971 சிறை ஊழியர்களுக்கு ஈஷா யோகா ஆசிரியர்கள் மூலம் ஆன்லைன் வாயிலாக யோகா கற்றுக்கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Posts