“நீட் முறைகேடு வழக்கு சிபிஐக்கு மாற்றப்படாதது ஏன்?” : ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு திமுக எம்பி வில்சன் கேள்வி !

“நீட் முறைகேடு வழக்கு சிபிஐக்கு மாற்றப்படாதது ஏன்?” : ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு திமுக எம்பி வில்சன் கேள்வி !

சமீபத்தில் நடத்தி முடிக்கப்பட்ட நீட் தேர்வில் மதிப்பெண் குளறுபடி, கருணை மதிப்பெண் விவகாரம், ஆள் மாறாட்டம், வினாத்தாள் கசிவு, என பல முறைகேடுகள் நடந்துள்ளன. இந்த பிரச்சினைகள்,  பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களான ராஜஸ்தான், மகாராஷ்டிரா, பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில் நடந்தது அம்பலமாகி உள்ளது.

இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது; கருணை மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு மறு தேர்வுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

எம்.பி.வில்சன் கேள்வி:

இந்நிலையில், மூத்த வழக்கறிஞரும், மாநிலங்களவை திமுக உறுப்பினருமான வில்சன் இது குறித்து கேள்வி எழுப்பி இருக்கிறார்.

அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில்,  “NEETUG2024 – தேர்வுகளில் வினாத்தாள் கசிவு மற்றும் கிரிமினல் குற்றச்செயல்கள் என பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகள் நடந்துள்ளன. இது குறித்த  ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. இப்படிஇருந்தும்,  ஒன்றிய பாஜக அரசு,  இதுவரை சிபிஐ விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கவில்லை.

பீகார் மற்றும் குஜராத் ஆகிய இரண்டு மாநிலங்கள் ஏற்கனவே எஃப்ஐஆர் பதிவு செய்து மோசடிகள் குறித்து விசாரணையை ஆரம்பித்து இருக்கின்றன. ஆனால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதன்  காரணமாக, எஃப்ஐஆர் பதிவு செய்யப்படாத அல்லது விசாரணை தொடங்கப்படாத பிற மாநிலங்களில் குற்றவாளிகள் ஆதாரங்களை அழித்திடும் சூழல் ஏற்பட்டு உள்ளது. இந்த நீட் மோசடிகளில் ஈடுபட்ட அதிகாரிகள் எவர் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவே இல்லை. இது மிகவும் என்பது கவலைக்குரியதாகும்.

பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டாவும், ஒன்றிய கல்வி அமைச்சரான தர்மேந்திர பிரதானும் ஏன் இந்த குற்றச் செயல்களுக்கு உறுதுணையாக இருந்த அதிகாரிகளைக் காப்பாற்ற முயற்சிக்கிறார்கள்? வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடர்களில் “தேசிய மருத்துவ ஆணைய சட்டம் 2019″-ல் திருத்தம் செய்வதன் மூலம் NEET மற்றும் EXIT தேர்வுகளை நீக்குவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி பரிசீலிக்க வேண்டும்.

இந்த திருத்தமானது, ஒவ்வொரு மாநிலங்களும் தனிப்பட்ட முறையில் அதன் மருத்துவ சேர்க்கை நடைமுறைகளை நிர்வகிக்க அனுமதிக்கும். மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் 2021 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டுள்ள நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குவது குறித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பரிசீலிக்க வேண்டும்” –  இவ்வாறு மாநிலங்களவை திமுக உறுப்பினர் வில்சன் குறிப்பிட்டு இருக்கிறார்.வில்சனுக்கு பாராட்டு:

மக்கள் பிரச்சினைகள் பலவற்றின் மீதான கவன  ஈர்ப்பை மாநிலங்கள் அவையில் வில்சன் எம்.பி. தொடர்ந்து ஏற்படுத்திக்கொண்டு வருகிறார். விவாதங்களில் ஈடுபடுவது,  கவன ஈர்ப்பு தீர்மானங்களை கொண்டு வருவது,  கேள்விகளை எழுப்புவது என சிறப்பாக செயல்பட்டு வரும் வில்சனை, தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பாராட்டியதும் நடந்தது.

குறிப்பாக, நீட் தேர்வை ரத்து செய்யக் கோரும் தனிநபர் மசோதாவை மாநிலங்களவையில் திமுக எம்.பி. வில்சன் அறிமுகம் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts