பட்டாசு வெடிங்க.. ஆனா இது நம்ம கலாச்சாரம் இல்லே!

பட்டாசு வெடிங்க.. ஆனா இது நம்ம கலாச்சாரம் இல்லே!
தீபாவளி என்றாலே, முதலில் நினைவுக்கு வருவது பட்டாசுதான்.  த்ரில்லான அனுபவம் என்பதால் அனைவரையும் கவர்கிறது.
அதே நேரம், ‘இந்த பட்டாசு புகை மாசு, ஒலி மாசு காரணமாக நம்மைச் சுற்றி இருக்கும் தாவரங்களும், விலங்குகளும் பாதிக்கப்படுகின்றன.. ஏன், மனிதர்களுக்கே ஆபத்துதன். ஆகவே பட்டாசு, மத்தாப்பூக்களைத் தவிர்ப்போம். என சுற்றுப்பூற சூழலியலாளர்களும் சமூக ஆர்வலர்களும் பல வருடங்ளாகச் சொல்லி வருகிறார்கள்.
ஆனால் பட்டாசு விற்பனை வருடா வருடம் அதிகரிக்கத்தான் செய்கிறது.
இந்த நிலையில் Surya Xavier  என்கிற முகநூல் பதிவர், “பட்டாசு வெடிப்பது தமிழ்க் கலாச்சாரமே இல்லை..” என்று வரலாற்று தரவுகளுடன் பதிவிட்டு உள்ளார்.
அவரது பதிவு:
வெடிப் போடுவது தமிழ்ப் பண்பாட்டில் எப்போதும் இருந்தது அல்ல. அது சீனப் பண்பாடு. உப்பை அள்ளி நெருப்பில் போட்டால் அது சடசடவென வெடிக்கும். இதுதான் பட்டாசு கண்டுபிடிக்க காரணமாய் அமைந்தது. உப்புக்கு பயன்படும் பொட்டாசியம் நைட்ரேட் நெருப்பில் விழ அது பெரும் தீயாய் எழுந்தது.
பொட்டாசியம் நைட்ரேட்டின் கரியும் கந்தகமும் இணைத்து சீனாவில் சாங் பேரரசு காலத்தில் லிடியான் எனும் பௌத்த துறவியால் கண்டறியப்பட்டதே பட்டாசு. இந்த துறவி லியுயாங் நகரில் வாழ்ந்தவர். சீனாவின் லியுயாங் நகரமே இன்று உலக பட்டாசு உற்பத்தியின் தாயகம்.
பட்டாசு வெடிக்கும் சத்தத்தில் தீய சக்திகள் அஞ்சி ஓடும் என்பது சீனர்களின் பழைய மூட நம்பிக்கை. சீன நாட்டின் பட்டாசு நாள் ஏப்ரல் 18. அந்நாள் வெடி வெடிக்கும் விழாவாக இன்றும் கொண்டாடப்படுகிறது.
1922 ல் கல்கத்தாவில் ஜப்பானைச் சேர்ந்தவர்கள் முதன்முதலில் தீப்பெட்டி தொழில் செய்யத் தொடங்கினர். இந்தியாவில் தீப்பெட்டி தொழில் முதன்முதலில் கல்கத்தாவில் தான் தொடங்கப்பட்டது. ஜப்பானின் ஹனாபி என்ற சொல்லுக்கு நெருப்புமலர் என்று பொருள்.அதுவே பயர் ஒர்க் என்று ஆங்கிலேயர்கள் அழைத்தனர்.
1899 சிவகாசி கலவரமும் அதையொட்டிய மக்களின் வாழ்க்கை நெருக்கடியும் உருவானது. சிவகாசியில் செயல்பட்ட கிறிஸ்தவ மிசினரிகள் மூலமாக சிலர் தீப்பெட்டி தொழிலைக் கற்க கல்கத்தா அனுப்பி வைக்கப்பட்டனர்.
1928 ல் சிவகாசியில் முதல் தீப்பெட்டி தொழிற்சாலை உருவாக்கப்பட்டது. அதன் பிறகு 1963 ல் முதல் பட்டாசு தொழிற்சாலை உருவாக்கப்பட்டது. சிவகாசியில் முதலில் ஒற்றை வெடி தான் தயாரிக்கப்பட்டது. இதை பிஜிலி என்பார்கள். பிஜிலிக்கு தான் சீன வெடி என்ற பெயர். தற்போது அது சீனி வெடியாக மாறிவிட்டது. 1899 ல் நடைபெற்ற சிவகாசி கலவரம் குறித்த ஆய்வுகளை கற்றால் இந்த தொழில் இங்கு அமைந்த காரணத்தையும் நீங்கள் அறியலாம்.
சீனர்கள்,  ஜப்பானியர்கள்,  ஐரோப்பியர்கள், அரேபியர்கள்.. என்ற வகையில் வரிசையாக வெடித்து முடித்த பிறகு இங்கு வந்ததே சிவகாசி வெடி. தீபாவளி என்பது பார்ப்பனிய்யத்தின் பரம எதிரியான சமணத்தின் மகாவீரர் இறந்த நாள் தான். அதை பார்ப்பனியம் புராண புரட்டுகளை உருவாக்கி தனதாக்கியது.
கூடிக் களிப்பதும், கூடிக் கொண்டாடுவதும் மானுட இயற்கை. மதமும் கடவுளும் உருவாக்கப்படும் முன்பே பல்வேறு கொண்டாட்டங்களைப் பல்வேறு இனக் குழுக்கள் தங்களின் தனித்தப் பண்பாடாய் வரித்துக் கொண்டன.
புவியியல் சார்ந்து , பருவமாற்றம் சார்ந்து , வேளாண்மை சார்ந்து , இதர உழைப்பு சார்ந்து கொண்டாடிய அப்பண்டிகைகளுக்கு ஒரு பொருள் இருந்தது . தேவையும் இருந்தது.
மதங்கள் தலையெடுத்தபோது இக்கொண்டாட்டங்களை மெல்ல மெல்ல தன் வசமாக்கி சடங்குகளை, கட்டுக்கதைகளை , புராணப் புளுகுகளைச் சேர்த்து குழைத்து குழப்பி பண்டிகைகளாக்கிவிட்டன .
“கொண்டாட்டம்,” என்பது “கும்பிடுவது.” என்றாகிவிட்டது. ஆடிப்பாடி உண்டு களித்து மகிழ்ந்திருப்பது என்பதற்கு பதிலாக, வழிபாடாகவும் , தன் கவுரவத்தை ,பெருமையைக் காட்டுவதாகவும் கொண்டாட்டங்கள் சிதைந்து பண்டிகைகளாகிவிட்டன. பெரும் சுமையாகிவிட்டன.
பண்டமாற்றிலிருந்து பணப்பரிவர்த்தனை தொடங்கிய போது,சந்தைகள் பொருள் விற்பனையின் மையமானபோது, பண்டிகைகள் சந்தையோடு பிணைக்கப்பட்டன. எதை எதை சந்தைப் படுத்தவேண்டுமோ அதற்கு ஏற்ப பண்டிகைகள், திருவிழாக்கள் வடிவம் பெறலாயின. அதற்கேற்ப கதைகள் ,மூடநம்பிக்கைகள் சேர்க்கப்பட்டு அது வேர்விட்டது.
ஆட்சியாளர் தங்களுக்கு எதிராக மக்கள் கொதித்தெழாமல் இருக்க மத நம்பிக்கைகளைக் கெட்டிப் படுத்த, மக்களை மேலும் மேலும் மூடச்சகதியில் புதைய வைக்க பண்டிகைகளை ஆயுதங்களாய் கூர்மைப்படுத்தின.
மத பீடமும், தத்துவ ஆசான்களும் விதவிதமாய் வியாக்கியானங்கள் செய்யலாயினர் .
உலகெங்கும் எல்லா மதம் சார்ந்த எல்லா பண்டிகைகளுக்கும் இது பொருந்தும் ; ஒன்றுக்கொன்று சற்று ஏற்ற இறக்கமாக இருக்கலாம். அவ்வளவுதான்.
மூலத்தை தேடிப்போனால் அது அவர்களால் உருவாக்கப்பட்ட கொண்டாட்டமல்ல ; எங்கோ ஒரு இனக்குழு கொண்டாடிய ஒன்றுக்கு இவர்கள் மதமுலாம் பூசி பண்டிகைகளாய் வரித்துக் கொண்டது விளங்கும். இப்போது புராணப் புனைவு இல்லாத பழைய கொண்டாட்டத்தை மீட்டெடுப்பது இயலாத ஒன்று. அதே நேரம் மன இறுக்கத்திலிருந்து சற்று விடுபட கொண்டாட்டங்களை நாடும் சமூக உளவியலை நிராகரிக்கவும் முடியாது. மாற்றுக் கொண்டாட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
வெடி வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறதா? சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதில் ஏகாதிபத்தியமும் பெருமுதலாளித்துவமும் தனது லாபவெறிக்காக செய்வதே அதிகம்.
உலக சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதில்
ஐரோப்பிய நாடுகள் 43%
அமெரிக்கா 37%
இந்தியா 3%
இதுவே ஐநா அறிக்கை.
வெடி வெடிப்பதாலும் இயற்கை மாசுபடும். ஆனால் அது அளவீட்டில் குறைவே. பெரு முதலாளித்துவம் தான் செய்யும் தவறுகளில் இருந்து மறைக்கவே மக்களின் சாதாரண வெடி விசயத்தில் பழி போட்டு தப்பிக்க முயற்சிக்கிறது.
மாசுபடுதல் மக்களால் தான் என்ற பொது ஏற்பை உருவாக்கும் நரித்தந்திரமே இப்பிரச்சாரம்.
வெடி போடலாம்.
இந்த கோமாளி சொல்வதற்காக அல்ல.
சூர்யா சேவியர்
29-10-24″ –  இவ்வாறு தனது பதிவில் குறிப்பிட்டு உள்ளார்.

Related Posts