‘வாட்ஸ் அப் வதந்திகளை நம்பாதீங்க!:  மோடிக்கு மு.க.ஸ்டாலின் அட்வைஸ்!  

‘வாட்ஸ் அப் வதந்திகளை நம்பாதீங்க!:  மோடிக்கு மு.க.ஸ்டாலின் அட்வைஸ்!  

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார். அந்த வகையில், மண்டபத்தில் மீனவர் நல மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர், “2015 ஆம் ஆண்டு ஒன்றிய நிதி அமைச்சராக இருந்த அருண்ஜெட்லி இருந்த பொழுது ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் சொல்லப்பட்ட திட்டம் தான் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை. ஆனால் இன்று வரைக்கும் எய்ம்ஸ் செங்கல் தான் இருக்கிறது. மருத்துவமனை வரவில்லை. இதுவும் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான நாடகமா என்று தெரியவில்லை.

தமிழ்நாட்டில் இருந்து ஜிஎஸ்டி பல்லாயிரம் கோடி ரூபாயை வசூல் செய்கின்ற பாஜக அரசுக்கு, ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை கட்டித்தர மனது இல்லை. இதையெல்லாம் நாம் கேட்பதால், திமுகவை கடுமையாக தாக்குகிறார்கள், பிரிவினையை தூண்டுவதாக திசை திருப்புகிறார்கள், பொய் சொல்கிறார்கள்.

பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு என்ன பேசினார் ‘ஒரு காலத்தில் நாம் திராவிட நாடு கேட்டவர்களாக இருந்தாலும், இன்றைக்கு இந்தியாவை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நம்மிடம் தான் இருக்கிறது’ என்று சொல்லி இருக்கிறார். அது இந்திய ஒருமைப்பாட்டை காப்பாற்றுவதற்கான பேச்சே தவிர பிரிவினை எங்கே இருக்கிறது?

இதை வெட்டி ஒட்டி வாட்ஸ் அப்பில் ஒரு குரூப் அனுப்ப, நாடாளுமன்றத்தில் பிரதமர் தொடங்கி அமைச்சர்கள் அனைவரும் பிரிவினைவாதமா என்று கேட்கிறார்கள்.

நான் அடக்கத்துடன் சொல்கிறேன்.. திராவிட நாடு கேட்டுக் கொண்டிருந்த காலத்தில் திமுகவில் இருந்தவர் தான் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். ‘அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடைமையடா’ என வாய் அசைத்து பாடிக்கொண்டிருந்தவர்தான். இதைப் பிரதமர் தெரிந்து கொள்ள வேண்டும்.

வகுப்பு வாதத்தை துளியும் ஏற்காதவர் காமராஜர். டெல்லியில் அவர் தங்கியிருந்த வீட்டை கொளுத்த முயன்றது யார் என்பதை தெரிந்து கொண்டு பிரதமர் காமராஜர் பெயரை உச்சரிக்க வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்.

சொந்தக் கட்சியில் உள்ள தலைவர்கள் பற்றி பேசுவதற்கு, அங்கு தலைவர்கள் இல்லாத காரணத்தினால் மாற்றுக் கட்சி தலைவர்களை கடன் வாங்கி திமுகவை விமர்சிக்கிறார் பிரதமர் மோடி.

தங்கள் கட்சிக்காரர்கள் நடத்தக்கூடிய வாட்ஸ் அப்பில் வருவதை வரலாறு என நம்புவது பிரதமர் பதவிக்கு அழகு அல்ல” என்றார்.

Related Posts