தொடரும் பாலியல் புகார்களும், திரும்பப் பெறுவதும்! என்ன நடக்கிறது?

கடந்த பிப்ரவரி மாதம், சென்னை காவல்துறை உயர் அதிகாரி மீது பாலியல் புகார் கொடுத்தார் பெண் காவலர் ஒருவர். விசாகா குழு விசாரணை நடத்தி, குற்றச்சாட்டில் முகாந்திரம் இருக்கிறது என்றது. இதையடுத்து அந்த அதிகாரி தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.
அப்போது, அந்த அதிகாரியின் மனைவி செய்தியாளர்களிடம், “பாலியல் புகார் அளித்த பெண்ணுக்கும், என் கணவருக்கும் தொடர்பு இருக்கிறது. நான் அந்தப் பெண்ணை பல முறை கண்டித்தேன்.
அந்த பெண் காவலர் என் கணவரிடம் பெரிய தொகை கேட்டார். புதிதாக வீடு கட்டி வரும் நிலையில், அதற்கு என் கணவர் மகேஷ் குமாரிடம் 25 லட்சம் ரூபாய் பணம் கேட்டு வந்தார். என் கணவர் தர மறுத்த நிலையில், பாலியல் புகார் அளித்துள்ளார்.
பெண் காவலர் தரப்பில் மட்டுமே விசாரணை செய்துஅதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். எங்களிடமும் விசாரணை நடத்தி இருக்க வேண்டும்” என்றார்.
மேலும், ஒரு விடுதி அறையிலிருந்து அந்த அதிகாரியும், புகார் அளித்த பெண் காவலரும் ஒன்றாக வெளியே வரும் சிசி டிவி காட்சிகளையும் காண்பித்தார்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன், அதிகாரி மீதான, தற்காலிக நீக்க உத்தரவை மாநில உள்துறை ரத்து செய்துள்ளது.
“புகார் அளித்த பெண் காவலரே, ‘பிரச்சினையை பேசித் தீர்த்து சமரசம் ஆகிவிட்டதாகவும் புகாரை திரும்பப் பெறுவதாகவும் வேண்டிக்கொண்டார்” என்கிறது மாநில உள்துறை. .
தன்னை பாலியல் ரீதியாக ஏமாற்றியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி புகார் அளித்தார். இது குறித்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சீமான் மனுத்தாக்கல் செய்தார். அதில், “ஏற்கெனவே என் மீதான வழக்கை விஜயலட்சுமி திரும்பப் பெற்ற சம்பவங்களும் நடந்துள்ளன” என்று குறிப்பிட்டு இருந்தார்.
ஆனால் நீதிமன்றம்,வழக்கை ரத்து செய்ய முடியாது என தெரிவித்தது.
அதே நேரம் உச்ச நீதிமன்ற மேல் முறையீட்டின்போது, “விஜயலட்சுமியுடன் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்தி உரிய இழப்பீடு வழங்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம்,” என்று சீமான் தரப்பு தெரிவித்தது.
இதையடுத்து சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி அளித்த புகார் மீதான பாலியல் வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது உச்ச நீதி மன்றம்.
மேலும், எதிர்மனுதாரர்கள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து விசாரணையை வரும் மே மாதத்துக்கு தள்ளி வைத்தது. அதற்குள் காலத்தில் உரிய இழப்பீடு வழங்குவது தொடர்பாக இருதரப்பிலும் சமரசமாக பேசி முடிவெடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இது குறித்து பலர் கேள்வி எழுப்பினர்.
“சீமான் மீது விஜயலட்சுமி புகார் அளித்தார்.. தமிழ்நாடு காவல்துறை புகாரை பதிந்து விசாரணை நடத்தியது. இது குறித்த வழக்கில் உயர் நீதி மன்றத்தில் தமிழ்நாடு காவல்துறை தனது பதிலை பதிந்தது. ஆனால் உச்ச நீதி மன்றத்துக்கு சீமான் சென்றபோது தமிழ்நாடு காவல்துறை அமைதியாக இருந்துவிட்டது. ஆகவே வேறு வழியின்றி உச்ச நீதி மன்றம் – சீமான் தரப்பினர் சொன்னபடி – சமரச முயற்சிக்கு ஒப்புக்கொண்டது. இது சரிதானா” என்றனர் பலர்.
ஏனென்றால், “புகார் அளித்தவரே நினைத்தாலும், பாலியல் வழக்கை திரும்பப் பெற முடியாது” என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்து உள்ளது.
தூத்துக்குடியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தன்னை திருமணம் செய்வதாகக்கூறி உறவு கொண்டு ஏமாற்றிவிட்டதாக ஒரு இளைஞர் மீது வழக்கு தொடுத்தார். பிறகு தாங்கள் சமாதானமாக போய்விட்டதாகக்கூறி வழக்கை திரும்பப்பெற மனுத்தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், “புகார் அளித்தவரே விரும்பினாலும் பாலியல் வழக்கில், புகாரை திரும்பப் பெற முடியாது” என்றார்.
இதே கருத்தை ஒரு வழக்கில் கேரள உயர் நீதிமன்றமும் தெரிவித்து உள்ளது.
இந்த நிலையல், பாலியல் வழக்கில் புகார் அளிக்கப்படுவதும், பிறகு திரும்பப் பெறுவதும் எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்வி எழுகிறது.
ஆண்கள் குற்றம் இழைத்துவிட்டு தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி புகாரை திரும்பப்பெற வைக்கிறார்களா…
அல்லது…
புகார் தெரிவித்து பிறகு பேரம் பேசி.. அதாவது சமரசம் ஆகி… புகாரை பெண்கள் திரும்பப் பெறுகிறார்களா… என்ற கேள்வி எழுகிறது.
இது போன்று பல வழக்குகளைப் பார்க்க முடிகிறது. எப்படியானாலும் இந்த வழக்குகளில் இரண்டில் ஒரு தரப்பு பாதிக்கப்படுகிறது என்பது மட்டும் உண்மை.
தவிர உண்மையை கண்டறிய முடியாத நிலையில், காவல்துறை, நீதித்துறை ஆகியவற்றின் நேரம், மனித உழைப்பு வீணாவதையும் பார்க்க முடிகிறது.
இதற்கு ஓர் நல்ல தீர்வு அவசியம்.
– டி.வி.சோமு
பின் குறிப்பு: சம்பவத்தின் தன்மை கருதியும், பிரச்சினைக்கு தீர்வே அவசியம் என்பதாலும் எவரது பெயரும் குறிப்பிடப்படவில்லை.