“இது ஆபாசப்படமல்ல!”: ‘பஜனை ஆரம்பம் ‘ இயக்குநர்

“இது ஆபாசப்படமல்ல!”: ‘பஜனை ஆரம்பம் ‘ இயக்குநர்

ஸ்ரீரங்க நாச்சியார் மூவீஸ் நிறுவனம் சார்பில் எஸ். தோதாத்ரி சந்தானம் தயாரிப்பில் , கௌஷிக் யாதவி, நாஞ்சில் விஜயன், சோபியா நடிப்பில் உருவாகி வரும் படம் பஜனை ஆரம்பம். பல்வேறு இயக்குநர்களிடம் திரைப்படம், தொலைக்காட்சித் தொடர்கள் எனப் பணியாற்றிய ஆனந்த் தக்ஷிணாமூர்த்தி எழுதி இயக்குகிறார். பி. இளங்கோவன் ஒளிப்பதிவு செய்கிறார். விஜய் பிரபு இசையமைக்கிறார், வசனம் M.ஹரிஹரன். நந்தன் சூர்யா படத்தொகுப்பு செய்கிறார்.சென்னை, மற்றும் சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சென்னையில் வெளியிடப்பட்டது.
நிகழ்ச்சியில் படக் குழுவினர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கதாநாயகன் கௌசிக் பேசும்போது, ”இது ஒரு காமெடி எண்டர்டெய்னராக உருவாக்கி உள்ளது. படத்தின் தலைப்பைப் பார்த்து தவறாக அர்த்தம் கொள்ள வேண்டாம். இந்தப் படம் அனைவருக்கும் பிடித்த படமாக இருக்கும்” என்றார்.கதாநாயகி யாதவி பேசும் போது, “படத்தின் பெயரையும் போஸ்டர்களையும் பார்க்கும்போது இதில் நீங்கள் எப்படி நடிக்க ஒப்புக் கொண்டீர்கள் என்கிறார்கள் ஆனால் நான் படத்தின் கதையையும் எனது கதாபாத்திரத்தையும் கேட்டேன். எனக்குப் பிடித்திருந்தது.மற்றபடி எனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை” என்றார்.

இயக்குநர் ஆனந்த் தக்ஷிணாமூர்த்தி, “கோயில்களில், ‘இன்று ஆறு முப்பது மணிக்கு பஜனை ஆரம்பம்’ என்ற அறிவிப்பை  பார்த்திருக்கிறோம்.  அந்த வகையில் தான் படத்தின் தலைப்பை வைத்திருக்கிறோம். கவனம் பெற வேண்டும் என்றுதான் இந்தப் பெயரை வைத்துள்ளோம்.மற்றபடி படத்தில் பெண்களை எந்த வகையிலும் தவறாக நான் காட்டவில்லை.ஆனால் தலைப்பைப் பார்த்துவிட்டு, படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட திரையுலகினர் எவரும் சம்மதிக்கவில்லை” என்றார்.

Related Posts