“ஷாக் ஆனேன்!”: அர்ஜூன்! “மருமகள் அல்ல.. மகள்!”: தம்பி ராமையா!

நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் கடந்த ஜூன் பத்தாம் தேதி சிறப்பாக திருமணம் நடைபெற்றது.
அரசியல் மற்றும் திரைப் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இந்நிலையில் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் நடிகர்கள் அர்ஜுன், தம்பி ராமையா மற்றும் மணமக்கள் உமாபதி மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
இந்நிகழ்வில் நடிகர் அர்ஜுன் பேசும்போது, “நானும் தம்பி ராமையாவும் பல படங்களில் சேர்ந்து நடித்து உள்ளோம். ஆனால் அவர் எனக்கு சம்பந்தி ஆவார் என்று அப்போது தெரியாது.
அதேபோல நான் தென்னாப்பிரிக்கா சென்று தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றைத் தொகுத்து அளித்தேன். அந்த நிகழ்ச்சியில் உமாபதி போட்டியாளராக பங்கேற்றார். அவர் மிகுந்த திறமைசாலி, பண்பாணவர், நகைச்சுவை குணம் கொண்டவர். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் அப்போது உமாபதி தனக்கு மருமகனாக வருவார் என்பது தெரியாது.
ஒருநாள் என் இரண்டாவது மகள் ஐஸ்வர்யா உங்களிடம் தனியாக பேச வேண்டும் என்றார். அப்போதே இது காதல் விஷயமாக இருக்கும் என்று யூகித்தேன்..
அதேபோல தான் ஒருவரை காதலிப்பதாக தெரிவித்தார். அதற்கு நான், யார் அந்த பையன் என்று கேட்டேன். அதற்கு அவர், உமாபதி என்றார்.
கேட்டவுடன் ஷாக் ஆகிவிட்டேன். அதே நேரம் அவரைப் பற்றியும், அவரது தந்தை தம்பி ராமையா பற்றியும் எனக்கு முன்பே தெரியும். பண்பான குடும்பம். உடனே ஓகே சொல்லிவிட்டேன்” என்றார் அர்ஜூன்.
நிகழ்வில் தம்பி ராமையா பேசும்போது, “எங்கள் குடும்பத்திற்கு மருமகளாக வந்தாலும், ஐஸ்வர்யா எங்களுக்கு மகள்தான். அது மட்டும் இல்லாமல் அவரிடம், தாயாக இருந்து இந்த குடும்பத்தை வழிநடத்த வேண்டும் என்றுதான் வேண்டுகோள் வைத்தேன்” என்றார் தம்பி ராமையா.