விரைவில் திராவிட குடும்ப அரசியலுக்கு முடிவு கட்டப்படும்’ – அண்ணாமலை விமர்சனம்
‘தமிழ்நாட்டில் குடும்ப அரசியல் செய்து வரும் தி.மு.க.வை மக்கள் உணர்ந்துள்ளனர். விரைவில் இந்த குடும்ப அரசியல் முடிவுக்கு வரும்’ என்று பா.ஜ.க. தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநில தேர்தல் முடிவுகளில் 4 மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைக்கிறது. அதனைத் தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நிர்வாகிகளுடன் இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ‘ உ.பி-ல் போட்டியிட்ட இடங்களில் 60%-க்கும் மேல் வெற்றி பெற்று, 33ஆண்டுகளுக்குப் பிறகு ஆளும் கட்சி, மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. மணிப்பூரில் பாஜக கடுமையான உழைப்பால் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்துள்ளது. மோடியுடன் இணைந்து பயணிப்போம் என மக்கள் உறுதியாக உள்ளனர்” என்றார்.
மேலும் அவர் பேசுகையில், “இனி தற்பொழுது தான் மேயர் தேர்தல் முடிந்த நிலையில், கொலுசு போன்ற பரிசுப் பொருட்களுக்காக செய்த செலவினை எடுக்க வேண்டும். இதற்காக மாநில அரசு விலையேற்றத்தை அறிவிக்கும். குறிப்பாக 20%-க்கும் அதிகமாக மின் கட்டணம் உயரும் என்பது உறுதி.
தி.மு.க. அரசின் குடும்ப ஆட்சியை மக்கள் உணர்ந்துள்ளனர். விரைவில் அந்த குடும்ப ஆட்சியை அகற்றுவோம்” என்றார்.

