“ஒரு கிளாஸ்.. பாதி தண்ணீர்!”: “மூன்வாக்” விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் பர்த் டே மெஸேஜ் !
ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் பிரபுதேவா ரசிகர்கள், “மூன்வாக்” திரைப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களால் மிகுந்த மகிழ்ச்சியும் கொண்டாட்டத்துடனும் உள்ளனர்.
வரலாற்றில் முதல் முறையாக, இசை மாமேதை ஏ.ஆர்.ரஹ்மான், மூன்வாக் ஆல்பத்தில் உள்ள ஐந்து பாடல்களையும் தானே பாடியிருப்பதுடன், இந்த திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமாகிறார்.
நேற்று (ஜனவரி 4) நடைபெற்ற, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட “மூன்வாக்” திரைப்படத்தின் மாபெரும் ஆடியோ வெளியீட்டு விழா, மறக்க முடியாத இசை இரவாக மாறியது.
அந்த மாலையில், ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் பிரபுதேவா ஆகியோரின் அசத்தலான நிகழ்ச்சிகளுடன், பல நடன மற்றும் பாடல் நிகழ்ச்சிகள் இடம்பெற்றது, ரசிகர் கூட்டத்தை பெரிதும் உற்சாகப்படுத்தியது.
இயக்குநர் மனோஜ் NS, இத்திரைப்படத்தை உண்மையிலேயே நினைவில் நிற்கும் ஒன்றாக உருவாக்க உதவிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினருக்கும் நன்றி தெரிவித்தார். மேலும், மூன்வாக் திரையரங்குகளில் பார்வையாளர்களுக்கு பேரானந்தமும் மகிழ்ச்சியும் தரும் என தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
ஏ.ஆர்.ரஹ்மான் மேடையில் முதல் முறையாக தோன்றிய தருணத்தில் உற்சாகம் உச்சத்தை எட்டியது. உடனடியாக அவர், “மூன்வாக்” திரைப்படத்தின் ஐந்து பாடல்களையும் தொடர்ச்சியாக நேரடியாகப் பாடி, ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தி, அந்த மாலையை உண்மையான இசை கொண்டாட்டமாக மாற்றினார்.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என அழைக்கப்படும் பிரபுதேவா, எப்போதும் போல ஆற்றலுடனும் உற்சாகத்துடனும், மூன்வாக் திரைப்படத்தின் ஐந்து பாடல்களுக்கும் ஆடி, பிரமாண்டமான 10 நிமிட நடன அஞ்சலியை, ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அர்ப்பணித்து, வழங்கினார்.
அவரது ஆர்வம், துல்லியம் மற்றும் ஒப்பற்ற ஆற்றல், காலம் அவரது மேஜிக்கை குறைக்கவில்லை என்பதை நிரூபித்ததுடன், ரசிகர்களை மேலும் மேலும் அவரது நடனத்தைக் காணும் ஆவலைத் தூண்டியது.
அவர் தனது இணை நடிகர்களான யோகி பாபு, அஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன், சாட்ஸ் மற்றும் நடன இயக்குநர் சேகர் ஆகியோருடன் இணைந்து மேடையில் நடனமாடி, அந்த இரவை மேலும் கலகலப்பாகவும் உற்சாகமாகவும் மாற்றினார்.
நடிகர் யோகி பாபு, இந்த திரைப்படத்தில் 16 விதமான வேடங்களில் நடித்திருப்பதாக தெரிவித்து, இது கதையை முன்னெடுத்து செல்லும் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாகக் கூறினார். இதுவரை வெளியிடப்பட்ட மூன்று தோற்றங்களே ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ள நிலையில், வரும் நாட்களில் மேலும் பல வேடங்கள் வெளிவரும் என தெரிவித்தார்.
நடிகர்கள் அஜு வர்கீஸ் மற்றும் அர்ஜுன் அசோகன், தங்களின் சரளமான தமிழ் பேச்சுகளால் பார்வையாளர்களை கவர்ந்தனர். பிரபுதேவா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் உடன் இணைந்து நடித்த இந்த சிறப்பு திரைப்படத்தின் ஒரு பகுதியாக தாங்கள் இருப்பது மகிழ்ச்சி எனத் தெரிவித்தனர். அர்ஜுன் அசோகனின் ‘மூன்வாக் நடன’ அசைவிற்கு பார்வையாளர்களிடமிருந்து சிறப்பு கைதட்டல் கிடைத்தது.
நடிகர்கள் சாட்ஸ், நிஷ்மா, சுஷ்மிதா, தீபா அக்கா, டாக்டர் ஜேக்கப் மற்றும் ராம்குமார் ஆகியோரும், இந்த திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொண்டு, தங்களுக்குக் கிடைத்த கதாபாத்திரங்களுக்கு மகிழ்ச்சி தெரிவித்தனர்.
நடிகர் ராகவா லாரன்ஸ், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, தயாரிப்பாளர் ஐசரி.K.கணேஷ் மற்றும் இயக்குநர் மிஷ்கின் உள்ளிட்ட பல முக்கிய திரை பிரபலங்கள் விழாவில் கலந்துகொண்டு, திரைப்படத்திற்கு தங்களின் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
சிவமணி, பாபா பாஸ்கர், சான்வீ மேக்னா, உத்தரா உன்னிகிருஷ்ணன், பார்வதி மீனாட்சி, வி அன்பீடபிள்ஸ், KTV சேத்ரி, பாபா ஜாக்சன், KMJ சிம்சன், J.R. பிரபுதேவா சக்ரி, நோபல் மாஸ்டர், ஜானி மாஸ்டர், அசோக் ராஜா மாஸ்டர் மற்றும் ஸ்ரீதர் மாஸ்டர் ஆகியோரின் பாடல் மற்றும் நடன நிகழ்ச்சிகள் விழாவிற்கு பெரும் கலைச்சுவையையும் மகிழ்ச்சியையும் சேர்த்தன.
இறுதியாக, பிரபுதேவா, ஏ.ஆர்.ரஹ்மானை மீண்டும் மேடைக்கு அழைத்து, புகழ்பெற்ற “முக்காலா” பாடலுக்கு அவரை நடனமாட வைத்தார். அதன் பின்னர், மூன்வாக் திரைப்படத்தின் முழு குழுவினரும், 10,000-க்கும் மேற்பட்ட ரசிகர்களும் இணைந்து, ஏ.ஆர்.ரஹ்மானின் பிறந்தநாளை கொண்டாடும் பிரம்மாண்ட கேக் வெட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பிறகு கேள்விகளுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதில் அளித்தார்.
இப்படத்தில் முதன் முறையாக நடிகராக களம் இறங்கியுள்ளது பற்றி கேட்கப்பட “நான் 97ல் `வந்தே மாதரம்’ சமயத்தில் இருந்து நடித்துக் கொண்டிருக்கிறேன். இந்தப் படத்தில் ஒரு சின்ன சீன் அவ்வளவு தான். ஹீரோயினெல்லாம் கிடையாது. அந்தக் காட்சியை இரண்டு வருடங்களாக சொல்லிக் கொண்டே இருந்தார். இதில் நீங்கள் தான் நடிக்க வேண்டும் என. 10 நிமிடத்தில் எடுத்து முடித்துவிட்டோம். பிரபுதேவா இந்த உலகத்தின் ஐகான். இந்தியாவின் பெருமை. அவருடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது” என்றார்.
இப்படத்தின் பணியாற்றியது பற்றி கேட்கப்பட “இயக்குநர் மனோஜ் முதலில் கூறிய போது பிரபுதேவாவும் நீங்களும் சேர்ந்து பல ஹிட் பாடல்களை கொடுத்திருக்கிறீர்கள். அந்த மேஜிக்கை நான் திரும்ப கொண்டு வரப்போகிறேன். அப்படி யாரும் இதுவரை யோசித்ததில்லை. முதல் முறை அவர் அப்படி நம்பிக்கையுடன் சொன்னார். அந்த நம்பிக்கையை மதித்து நான் இந்தப் படத்தை செய்தேன்.
கூடவே இந்தப் படத்தில் உள்ள ஐந்து பாடல்களையும் நானே பாடி இருக்கிறேன், அதற்கு காரணமும் அவருடைய வற்புறுத்தல்தான். ஒவ்வொரு பாடலையும் வேறு யாரையாவது பாட வைப்பேன். ஆனால் அவர் வந்து நீங்களே பாடுங்கள் என்பார். சிலபேர் சொல்வார்கள், செய்வது கம்மியாக இருக்கும். ஆனால் இவர் எப்படி ஒவ்வொரு விஷயத்தையும் மேம்படுத்துவது என உழைப்பார்” என்றார்.
எப்போதாவது புதிய யோசனைகளை வரவில்லை என்றால் எப்படி கையாளுவீர்கள் என்றதும் “எனக்கு அது படம் செய்ய வருவதற்கு முன்பிருந்தே தோன்றக்கூடிய விஷயம் அது. அது ஒரு மகிழ்ச்சியான உணர்வு தான். உங்கள் கற்பனை ஆற்றல் வற்றிவிட்டதாக தோன்றும் போதுதான், வேறு என்ன செய்யலாம் என்பதை நோக்கி நகர்வீர்கள். ஒரு க்ளாஸ் பாதி காலியாக இருப்பதாக பார்க்காமல், பாதி தண்ணீர் இருக்கிறது எனப் பார்க்க வேண்டும். எப்போதும் நம்பிக்கையை கைவிடக்கூடாது” என்றார் ஏ ஆர் ரஹ்மான்.
மூன்வாக் திரைப்படத்தின் ஐந்து பாடல்களையும் நேரடியாக அனுபவித்த ரசிகர்கள் பேரானந்தத்தில் திளைத்தனர். அதிகாரப்பூர்வ பாடல்கள் வரும் நாட்களில் ஒவ்வொன்றாக இணையத்தில் வெளியிடப்பட உள்ளன. விளம்பர பணிகள் முழு வேகத்தில் தொடங்கவுள்ள நிலையில், மூன்வாக் திரைப்படம் 2026 மே மாதத்தில் பிரம்மாண்ட திரையரங்க வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

