‘வருணன்’: ரூ.6000 கோடி டேர்ன் ஓவர் படம்!

‘வருணன்’: ரூ.6000 கோடி டேர்ன் ஓவர் படம்!

இந்தியாவில் வாட்டர் கேன் பிஸினஸ்,  வருடத்துக்கு  ஆறு ஆயிரம் கோடி ரூபாய் டேர்ன் ஓவர் ஆகிறது! இந்த வியாபாரத்தின் பின் உள்ள அரசியலை அலசுகிறது, வருணன் திரைப்படம்.

இயக்குனர் கே.பாலசந்தரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஜெயவேல் முருகன் இப்படத்தைஇயக்கி உள்ளார்.  இதில் நாயகனாக நடிகர் ஜெயப்பிரகாஷ் மகன் துஷ்யந்த், நாயகியாக கேப்ரியல்லா ஆகியோர் நடித்துள்ளனர். ராதாரவி, சரண்ராஜ், ஜீவா ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போபோ சசி இசை அமைத்துள்ளார், ஶ்ரீராம சந்தோஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். யாக்கை பிலிம்ஸ் வான் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.இந்த படம் வரும் 14ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை, முன்னோட்ட வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குநர் சத்ய சிவா, நடிகர் கிருஷ்ணா, ‘ஆஹா’ டிஜிட்டல் தளத்தின் தலைமை செயலாக்க அதிகாரி கவிதா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். தயாரிப்பாளர் அன்புச்செழியன் பாடல்களை வெளியிட்டார்.

படம் பற்றி இயக்குனர் ஜெயவேல் முருகன் கூறும்போது, ”இது கன்டென்ட் மூவி. தண்ணீரை பற்றிய ஒரு படம். வட சென்னை தான் கதைக்களம். ஆண்டவர் வாட்டர் சப்ளை என்ற பெயரில் மதுரையிலிருந்து இங்கு வந்து தண்ணீர் கேன் சப்ளை செய்பவராக ராதாரவி நடித்திருக்கிறார். ஜான் வாட்டர் சப்ளை என்று சென்னையிலே பிறந்து சென்னையில் வாட்டர் சப்ளை செய்பவர் சரண் ராஜ். இந்த இரண்டு பேருக்கும் இடையே நடைபெறும் மோதல் தான் படத்தின் கதை.தண்ணீரை வியாபாரம் ஆக்கி காசு பார்ப்பவர்கள் என்ன விளைவுகளை சந்திக்கிறார்கள்? என்பதை விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்லி உள்ளோம். இதில் வருண பகவானாக சத்யராஜ் முகம் தெரியாமலேயே குரல் கொடுத்து இருக்கிறார். கதையை படித்ததும் உடனே குரல் கொடுக்க சம்மதம் தெரிவித்தார். தண்ணீர் சேமிப்பின் அவசியத்தையும் படம் உணர்த்தும்” என்றார்.

Related Posts