“தலைவரை வடிவேலு காமெடியாக்கிய பாண்டே!”: தி.மு.க. தொண்டரின் குமுறல்!

“தலைவரை வடிவேலு காமெடியாக்கிய பாண்டே!”: தி.மு.க. தொண்டரின் குமுறல்!

டி.வி.சோமு பக்கம்:

சாப்பிடப்போன இடத்தில், அந்த திமுக தொண்டரின் அப்படியொரு குமுறலை எதிர்பார்க்கவே இல்லை.

காலையில் சாப்பிடாமலேயே கிளம்பிவிட்டேன்… வேலை முடிய மணி பன்னிரண்டு ஆகிவிட்டது…

வயிறு கபகபவென கொதிக்க… அசோக் நகரில் இருக்கும் பிரபல உணவகத்துக்குள் புகுந்தேன்.

நம்ம நேரம்.. காத்திருக்க வேண்டியதாகிவிட்டது. கூட்டம்.

அப்போது, “எப்படி இருக்கீங்க..” என்றபடியே வந்த நின்றார் தெரிந்தவர் ஒருவர்.

அதி தீவிர திமுக பற்றாளர். வயது மூத்தவர்.“கருணாநிதி, ஸ்டாலின்” என்று சொன்னால் கோபிப்பார். “கலைஞர், தளபதி” என்றுதான் சொல்ல வேண்டும்! அப்படியோர் ஈடுபாடு திமுக மீது!

“உங்கள் தளபதி, தலைவர் ஆகிவிட்டாரே..” என்றால், “நடைமுறைக்கு அவர் தலைவர்தான். மனதில் எப்போதும் தலைவர், கலைஞர்தான். இவர் தளபதிதான்” என்பார். அப்படி வித்தியாசமானதோர் பற்று அவருக்கு.

அவரிடம், “நல்லாருக்கேன்.. நீங்க எப்படி இருக்கீங்க..” என்றேன்.

“என்னத்த சொல்றது..” என்று அலுத்துக்கொண்டார்.

விசாரித்தேன்.

தி.மு.க. மேடையிலேயே, அக்கட்சியை ரங்கராஜ் பாண்டே கிண்டலடித்ததைச் சொன்னார்.

நான்கூட இப்படிப்பட்ட ஆதங்கப் பதிவுகளை முகநூலில் படித்தேன்.

விசயம் தெரியாதவர்களுக்காக ஒரு சுருக் பார்வை.

மு.க.ஸ்டாலினின் 72ம் பிறந்தநாள் விழா தமிழ்நாடு முழுதும் நடந்தொண்டு இருக்கிறது. இதன் ஒரு பகுதியாக, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், சென்னை சைதாப்பேட்டையில் “மாற்றாரும் போற்றும் மகத்துவ ஆட்சி” என்கிற தலைப்பில் கூட்டம் நடத்தினார்.

அதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், சைதை கிழக்குப் பகுதி திமுக செயலாளர் இரா.துரைராஜ் உள்ளிட்ட கட்சியினர் கலந்துகொண்டனர்.

மேலும் சிறப்பு அழைப்பாளர்களாக பத்திரிகையாளர்கள் என்.ராம், நக்கீரன் கோபால், ரெங்கராஜ் பாண்டே, காந்தாராஜ், கல்கி ப்ரியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அப்போது ரங்கராஜ் பாண்டே, “வஞ்சப்புகழ்ச்சியில்” திமுகவையும் அதன் தலைவரான மு.க.ஸ்டாலினையும் கிண்டலடித்து பேசியதுதான், சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இது குறித்து அதி தீவிர திமுக ஆதரவாளர்களே கடுமையாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இவர்களில் ஒருவரான பிலால் ஆலியார் என்பவர், “பாண்டே பேசியதன் சுருக்கத்தை விட, அவர் அந்த மேடையில் கக்கிய விசத்தை சுருக்கமாக சொல்கிறேன்!

திமுக மேடையிலேயே திமுக அமைச்சர் முன்னிலையிலேயே, ‘எம்ஜிஆரால் திமுக மூன்று முறை தொடர்ச்சியாக வீழ்த்தப்பட்டிருக்கிறது’ என்கிறார்.

சுப.வீ. உள்ளிட்ட தி.மு.க.வினர், என் தந்தையின் இறப்பிற்கெல்லாம் போக வேண்டுமா என கேட்டனர். ஆனால் ஆச்சரியத்தக்க நாகரீத்துடன் மு.க.ஸ்டாலின் வந்தார்.

இதன் மூலம் சுபவீகளை பார்த்து நீங்க என்ன சொன்னாலும், எங்களை அழைக்கத்தான் செய்வார்கள் என நக்கல் செய்கிறார் பாண்டே.

2021ல் திமுக வென்றது திமுகவால் அல்ல, அந்த வெற்றி பிரசாந்த் கிசோர், கூட்டணி பலத்தால் மட்டுமே! 2026லும் திமுகவால் வெற்றி சாத்தியமில்லை, எதிர்கட்சிகளின் ஒற்றுமையின்மையே திமுகவை கரை சேர்க்கும்!

எங்களை போன்றோர் சொல்வதை பாஜக, அதிமுக கேட்பதில்லை, இல்லையெனில் திமுக அதிகாரத்திற்கு வந்திருக்காது” என்று பாண்டே பேசி இருக்கிறார்.

இப்படி வந்து பேசிவிட்டு செல்பவனுக்காக திமுக மேடையை அமைத்து கொடுத்த அண்ணன் மா.சு போன்றோரின் செயல் வருத்தத்தை தருகிறது!

பார்ப்பன லாபிக்காக ஒரு தலைநகரத்தின் சக்திவாய்ந்த அமைச்சர் இப்படி செய்தால், மற்ற அமைச்சர்களும் இதே பாணியை கடைபிடிக்க ஆரம்பித்தால் என்ன ஆகும்! கடந்த இரண்டு மாதமாக பாஜகவை எதிர்த்து அரசியல் களத்திலும், கருத்தியல் தளத்திலும் மூர்க்கமாக களமாடும் திமுகவின் செயல்பாடுகளுக்கு இம்மாதிரியான விழாக்களின் மூலம் ஒரு பின்னடைவே ஏற்படும் என்பதே ஆணித்தரமாக கூற விரும்புகிறேன்!” என்று பிலால் ஆலியார் என்கிற திமுக அனுதாபி கருத்திட்டு இருக்கிறார்.

என்னிடம் பேசிய நண்பரிடமும் இதைச் சொன்னேன்.

அவர், “பாண்டே பேசியதில் இன்னும் சில உள்ளர்த்தங்கள் வெளிப்படையாகவே தெரிகின்றன” என்றார்.

அவரே தொடர்ந்தார்..

“தனது தந்தை மறைவுக்கு தளபதி வந்ததை சுப.வீ உள்ளிட்டோர் எதிர்த்தனர்.
ஆச்சரியமான நாகரீகத்தை கடைபிடித்தவர் தளபதி” என்கிறார். அதாவது சுபவீ உள்ளிட்டோரை நாகரீகமற்றவர் என்கிறார்.

“யு டியுபர் காந்தராஜ் பேசினால் ஹெட் போன் போட்டுத்தான் கேட்கணும்.
கருத்து சுதந்திரம் அவருக்குத்தான்.. கம்ப்ளெய்ண்ட் கொடுத்தும் அரெஸ்ட் இல்ல.. நம்ம ஆளு அப்படிங்கிறாங்க..” என்கிறார் பாண்டே. அதாவது, ஒரு சார்பாக செயல்பட்டு காந்தராஜை கைது செய்யவில்லையாம் தமிழ்நாடு காவல்துறை.

இந்து பத்திரிகையை, “மவுண்ட் ரோடு மகாவிஸ்ணு” என்று, கலைஞர் விமர்சித்ததை நினைவுபடுத்துகிறார் பாண்டே. அதே மேடையில் இந்து பத்திரிகையின் என்.ராம் இருக்கும்போது! கல்யாண வீட்டில், வீண் சண்டையை மூட்டுவானேன்!

அதே போல, நக்கீரன் கோபாலை மேடையில் வைத்துக்கொண்டே, “நீங்கள் கலைஞருடன் நெருக்கமாக இருந்ததால் உங்களை, “மாற்றார்” என சொல்லிவிட்டார்களா..” என்கிறார்.இதற்கு உச்சம் வைத்த மாதிரி, “அவனவன் எடுக்கிற முடிவு நமக்கு சாதகமாத்தான் இருக்கு.. வடிவேலு காமெடி மாதிரி.. எதிர்க்கட்சி எடுக்கும் முடிவு தனக்கு சாதகமாக இருக்கும் என தளபதி நம்புகிறார்” என்று தளபதியை வடிவேலுவுடன் ஒப்பிடுகிறார்.

இதற்கெல்லாம் அர்த்தம் புரியாமல் அமைச்சர் உட்பட அனைவரும் சிரிக்கிறார்கள்.

வார்த்தைக்கு வார்த்தை, “திமுக கூட்டணி பலமா இருக்கு.. இது உடையாமல் யாருக்கும் வெற்றி இல்லை.. கூட்டணி தொடர்ந்தால் தொடர்ந்தால் வெற்றி” என ஆதங்கத்துடனே பேசுகிறார்.

தமிழ்நாட்டின் ஆதார பிரச்சினையான இந்தித் திணிப்பை, திமுகவின் வெற்று அரசியலாகச் சொல்கிறார்.

“இந்தி எதிர்ப்பு என்பது அமுத சுரபி..எப்ப எடுத்தாலும் தாங்கும்..! டிஎம்கே டிபென்ஸ் மோடுல வச்சிருக்கு..! “நீ காச எடுத்தேல்ல உண்மையை சொல்லு.” என்று திமுக கேக்குது..பாஜவோ, “நான் திருடல திருடல, திருடலை” கதறுது” என்கிறார்.

அதாவது பாஜக அரசு இந்தித்திணிப்பு செய்யவே இல்லையாம்… திமுக பொய் சொல்கிறதாம்!

எல்லாவற்றையும்விட, “இந்த திமுக ஆட்சி குறித்த சிறப்பான விசயங்களை அண்ணன்கள் பேசுவார்கள்” என்று சொல்லிவிட்டார். ஆக திமுகவின் சிறப்புகளைப் பேச தனக்கு விருப்பமில்லை என்பதை பட்டவர்த்தனமாக சொல்லிவிட்டார்.

இப்படிப்பட்டவரை எதற்காக தளபதியின் பிறந்தநாள் விழாவுக்கு அழைக்க வேண்டும்.

தளபதி நல்ல மனதுடன் அனைவரையும் அரவணைத்துச் செல்ல நினைக்கிறார். ஆனால் இதையே வாய்ப்பாக வைத்துக்கொண்டு, நமது மேடைக்கே வந்து விசத்தைக் கொட்டுகிறார்களே….

இதை இனியாவது திமுக தவிர்க்க வேண்டும். இதையல்லாம் நான் வெளிப்படையாகச் சொல்ல முடியாது.. அதான் ஆதங்கத்தைக் கொட்டுகிறேன்” என்று குமுறியவர், கிளம்பிச் சென்றார்.

அங்கேயே இந்த கட்டுரையை தட்டச்ச ஆரம்பித்தேன்.

இடையில் உணவக சர்வர் அழைத்தும் செல்லவில்லை.  இதோ கட்டுரையை முடிக்கப்போகிறேன்.

அந்த திமுக தொண்டரின் ஆதங்கத்தை நாம் சொல்லிவிட்டோம் என்ற திருப்தியுடன் சாப்பிடப்போகிறேன்…!

– டி.வி.சோமு

Related Posts