“மலையாள சினிமாவில் அறிவுத் திறன் அதிகம்!”: IDENTITY விழாவில் த்ரிஷா!

“மலையாள சினிமாவில் அறிவுத் திறன் அதிகம்!”: IDENTITY விழாவில் த்ரிஷா!

ராகம் மூவீஸ் பேனரின் கீழ் ராஜு மல்லையாத் மற்றும் கான்ஃபிடன்ட் குரூப் சி.ஜே.ராய் தயாரிப்பில், டோவினோ தாமஸ், திரிஷா, வினய் ராய் நடிப்பில், கடந்த வாரம் வெளியான திரில்லர் திரைப்படம் “ஐடென்டிட்டி” IDENTITY. இப்படம், மலையாளத்தில் மட்டுமல்லாது, தமிழிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.  படத்திற்கு கிடைத்த நல்ல வரவேற்பால் தற்போது திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

படத்திற்கு, அகில் ஜார்ஜ் ஒளிப்பதிவு மற்றும் சமன் சாக்கோவின் படத்தொகுப்பு, ஜேக்ஸ் பிஜாய் இசை மற்றும் பின்னணி இசை அமைத்துள்ளனர். பாலிவுட் நடிகை மந்திரா பேடி, அஜு வர்கீஸ், ஷம்மி திலகன், அர்ஜுன் ராதாகிருஷ்ணன், விஷக் நாயர் ஆகியோரும் முக்கிய வேடங்களில் இந்த படத்தில் நடித்துள்ளனர். இப்படம் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் இன்று தமிழ் பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்காக, இப்படம் சிறப்புத் திரையிடல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இப்படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து, படம் குறித்த அனுபவங்களை படக்குழுவினர் பகிர்ந்து கொண்டனர்.

இயக்குநர் அகில், “தமிழ்நாட்டில், ஐடென்டிட்டி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. ஒவ்வொரு நாளும் கலெக்சன் உயர்ந்து வருகிறது. ஒன்றரை வருடம் கஷ்டப்பட்டு உருவாக்கியது. படத்தை அனைவரும் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி’ என்றார்.

நடிகர் வினய், “அகில் 2020ல் இந்தப்படத்தின் கதை சொன்னார். யார் வந்தாலும், யார் வராவிட்டாலும், இந்தப்படம் நான் செய்வேன் என்றேன். பின் திரிஷா கமிட்டானதாகச் சொன்னார்கள். அப்போதே இந்தப்படம் வெற்றி என்பது புரிந்து விட்டது. என்னுடைய கேரியரில் இந்தப்படம் மாதிரி கதை வந்ததில்லை, டொவினோ தேர்ந்தெடுத்து படங்கள் செய்பவர். டொவினோ, அகில் இருவருக்கும் இந்தப்படத்தில் என்னைத் தேர்ந்தெடுத்தற்கு நன்றிக் கூறிக்கொள்கிறேன். இந்தப்படம் என் வாழ்வில் மிக முக்கியமான கட்டத்தில் வந்தது. மிக மிக என்ஜாய் செய்தேன்” என்றார்.

நடிகர் டொவினோ தாமஸ், ” என்னுடைய எந்தப்படம் தமிழில் வெளியானாலும், தமிழ் ரசிகர்கள் உற்சாகமான வரவேற்பு தருகிறார்கள். இன்னும் நல்ல தமிழ்ப்படங்களைத் தொடர்ந்து தருவேன். உங்களோடு என் படங்கள் பற்றி உரையாட எனக்கு அவ்வளவு பிடிக்கும். இந்த அன்பிற்கு நன்றி’ என்றார்.

நடிகை திரிஷா, “நான் உங்களை நிறைய தமிழ்ப் படங்களுக்காகச் சந்தித்துள்ளேன், முதல் முறையாக, ஒரு மலையாளப்படத்திற்காக சந்திக்கிறேன். பொதுவாகவே மலையாளப்படங்கள் நல்ல கதையம்சம் கொண்டதாக உள்ளது. நான் நிறைய முறை சொல்லியுள்ளேன், எனக்கு மலையாளப்படங்கள் ரொம்பப் பிடிக்கும். மலையாள சினிமாவில் அறிவுத்திறன் அதிகம் இருக்கும்.வருடத்திற்கு ஒரு மலையாளப்படம் செய்ய வேண்டும் என நினைத்தேன். அந்த நேரத்தில் இந்த வாய்ப்பு வந்தது. ஐடென்டிட்டி டீமிற்கு மிகப்பெரிய நன்றி.

இந்தப்படத்தின் மிக புத்திசாலித்தனமான திரைக்கதை. எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அகில் கதை சொன்ன விதமே பிரமாதமாக இருந்தது. டோவினோ மலையாளத்தில் மிகப்பெரிய ஹீரோ. அவர் தேர்ந்தெடுக்கும் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடன் நடித்தது மிக நல்ல அனுபவம். அகில் சிரித்துக் கொண்டே இருந்தாலும் மிக சீரியஸாக வேலை செய்வார். வினய் ரொம்ப காலமாகத் தெரியும். இந்தப்படம் மிக மிக நல்ல அனுபவமாக இருந்தது. நாங்கள் ஷூட் செய்யும் போதே வெற்றி பெறும் எனும் நம்பிக்கை இருந்தது. மலையாளத்தில் எப்போதும் பெண்களுக்கு நல்ல கேரக்டர்கள் எழுதுவார்கள். இங்கு ரிலீஸ் நாளிலிருந்து நல்ல ரெஸ்பான்ஸ் இருந்து வருகிறது. இப்போது தமிழில் கிடைத்து வரும் வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார்.