திரௌபதி: திரைப்பட விமர்சனம்
இப்படத்தின் டீசர் வெளியானபோதே, “சாதிக்கலவரத்தைத் தூண்டும் படம்!” என்றும், “இல்லை.. நாடகக்காதலை அம்பலப்படுத்தும் படம்!” என்றும் இருவேறு கருத்துக்கள் சமூகவலைதளங்களில் பரவின. படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் சிலர் கோரினர்.
இந்நிலையில், மிகுந்த பரபரப்புக்கிடையே வெளியாகும் திரவுபதி படம் எப்படி இருக்கிறது.
கதை:
கிராமத்தில் வாழும் தம்பதி பிரபாகரன் – திரவுபதி. வெளியூர்கார அரசியல்வாதி, அந்த கிராமத்தில் குறிப்பிட்ட நபரின் நிலத்தை வாங்கி, போரில் தண்ணீர் எடுத்து விற்பனை செய்கிறார். இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது. இதற்கு பிரபாகரன் – திரவுபதி தம்பதியும், திரவுபதியின் சித்தப்பாவும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
இதனால் ஆத்திரமான அரசியல்வாதி, திரவுபதியின் தங்கைக்கே தெரியாமல் அவரது பெயரில் போலியாக சான்றிதழ்கள் தயாரித்து, அவருக்கு, (வேற்று சாதி) இளைஞர் ஒருவருடன் திருமணம் நடந்ததாக பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து சான்றிதழும் வாங்கிவிடுகிறார். இதற்கு வழக்கறிஞர், பதிவாளர் உள்ளிட்டோர் உடந்தை. இதனால் பெண்ணின் தந்தை தற்கொலை செய்துகொள்கிறார்.
அதை அந்த பெண்ணின் தந்தைக்கு அனுப்ப, அவர் விரக்தியில் தற்கொலை செய்துகொள்கிறார்.
தவிர, அந்த கல்லூரி மாணவி, அவரது அக்கா திரவுபதி ஆகியோரைக் கொல்கின்றனர் வில்லன்கள். மேலும், “மனைவியின் தங்கை வேற்று சாதியைச் சேர்ந்தவரை காதலித்து பதிவுத் திருமணம் செய்ததால், அக்காள் கணவரான பிரபாகரனே ஆணவக்கொலை செய்துவிட்டார்…” என அதே ஊர் காவல் ஆய்வாளர் மூலம், வழக்கு பதிய வைக்கிறார்கள். பிரபாகரன் சிறைக்குச் செல்கிறார்.
சிறையில் இருந்த வந்த அவர், வில்லன்களை கொல்வதோடு, போலியான பதிவுத்திருமணங்கள் நடந்ததை அம்பலப்படுத்துகிறார்.
நடிப்பு:
பிரபாகரனாக வரும் ரிச்சர்ட் ரிஷி, இயல்பான சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கிராமத்து மனிதர்களுக்கே உண்டான கனிவு, கம்பீரம் என அசத்தியிருக்கிறார். மனைவி கர்ப்பமாக இருக்கிறார் என்பதை அறிந்தவுடன் வெளிப்படுத்தும் மகிழ்ச்சி, அவர் உயிருக்குப் போராடுவதைப் பார்த்து கதறுவது. வில்லனை கொல்லும்போது கண்களில் வெளிப்படும் அனல்… அசத்தலாக நடித்திருக்கிறார் ரிச்சர்ட் ரிஷி.
திரவுபதியாக வரும் ஷீலாவின் முகபாவம், கிராமத்துப் பெண் கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்துகிறது. ஆனால், மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் பள்ளி மாணவி போன்ற அவரது பேச்சு, அந்நியமாக தோன்றுகிறது.
மற்றபடி வில்லன்கள், ரிச்சர்ட் நண்பராக வருபர், சார்பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றும் முதியவர்.. என பல கதாபாத்திரங்கள்.
மற்றவை:
பின்னணி இசை படத்துக்கு பெரிய பலம். இரு பாடல்களும் ரசிக்க வைக்கின்றன. ஒளிப்பதிவும் அப்படியே.
இயக்கம்:
கதாநாயன் டீ கிளாசை கையாலேயே அமுக்கி நொறுக்குவது, இட்லி கடை பெண்ணின் கவர்ச்சி நடனம், என மசாலா ஐயிட்டங்கள் சில இருந்தாலும் இயன்றவரை இயல்பாக, நம்பும்படியாக திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர் மோகன்.
தனக்கென ஒரு கருத்தை வைத்திருந்தாலும், அதை சுவாரஸ்யமான திரைக்கதை மூலம் சொல்லி ரசிக்கவைக்கிறார்.
படத்தில் வரும், “சரக்கு முறுக்கு..” அவனுங்க ஒரே கூட்டம்..”, “அவனுங்களுக்கு ஆதரவாத்தானே சட்டம் இருக்கு..”,
“அப்பாவிப் பெண்களை மயக்கி நாடகக்காதல் செய்து ஏமாற்றுவதற்கு மாவட்டத்துக்கு நூறு பேரை வைத்திருக்கிறோம்..” போன்ற வசனங்கள் குறிப்பிட்ட சாதியினரையும், , “நம்ம வம்சம் எப்படிப்பட்டது..”, “ “நம்ம பின்னால பெரிய சமுதாயமே இருக்கு..” “– போன்ற வசனங்கள் வேறு சாதியினரையும் குறிப்பதை வெளிப்படையாகவே அறிய முடிகிறது.
.
மிக முக்கியமாக பாராட்ட வேண்டிய விசயம்..
பைனல் கமெண்ட்:
படத்தின் கருத்தில் மாறுபாடு உள்ளவர்கள் இருக்கலாம். ஆனால், தான் எடுத்துக்கொண்ட விசயத்தை திரைமொழிக்கு உட்பட்டு சுவாரஸ்யமாக உருவாக்கும் வித்தையில் சிறந்தவராக இருக்கிறார் இயக்குனர் மோகன்.