அழகி படத்தில் இருக்கும் தவறு!: உடைத்தார்  நாயகன் பார்த்திபன்!   

அழகி படத்தில் இருக்கும் தவறு!: உடைத்தார்  நாயகன் பார்த்திபன்!   

கடந்த 2022ல் வெளியாகி அனைவரின் மனதையும் கரைய வைத்த ‘அழகி’ இப்போது டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு இன்று (மார்ச்-29) திரையரங்குகளில் ரீ ரிலீஸ் ஆகியுள்ளது..

இதற்கான புரமோஷன் நிகழ்ச்சி நேற்று மாலை சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அழகி படத்தின் தயாரிப்பாளர் டி.உதயகுமார், நாயகன் பார்த்திபன், நாயகி தேவயானி உள்ளிட்ட நடிகர்கள், படத்தை ரீ ரிலீஸ் செய்யும் விநியோகஸ்தர் கே.எம்.சுந்தரம் பிக்சர்ஸ் மீனாட்சி சுந்தரம்,  அழகி படத்தின் இணை இயக்குநரும், சின்னத்திரை இயக்குநர்கள் சங்க தலைவர் தளபதிராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இயக்குநர் தங்கர் பச்சான் பாராளுமன்ற தேர்தலில் கடலூர் தொகுதி வேட்பாளராக போட்டியிடுவதாலும், நந்திதா தாஸ் மும்பையில் இருப்பதாலும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள இயலயவில்லை.

இதில் பங்கேற்று பேசிய நடிகர் பார்த்திபன், “தங்கர் பச்சான் ஓர் அற்புதமான கதாசிரியர். அவரைத்தவிர இந்த படத்தை வேறு யாராலும் இந்த அளவிற்கு வெற்றி அடைய வைத்திருக்க முடியாது.

என்னிடம் வந்து, ‘ஒரு நல்ல படம் எடுப்பதற்கு என்னை விட்டால் வேறு இயக்குநர் யார் இருக்கிறார்’ என்று என்னிடமே கேட்பார். நானே ஒரு டைரக்டர்.. என்னிடமே அப்படி கேட்பார்.

இப்போது அவர் தேர்தல் பிரச்சாரத்திலும்.. என்னை விட்டால் உங்களுக்கு நல்லது செய்ய வேறு யாராவது இருக்கிறார்கள் என்று அதையேதான் பேசிக் கொண்டிருப்பார். அதனால் நிச்சயம் அவர்தான் அந்த தொகுதியின் நாளைய எம்.பி. அவருக்கு முன்கூட்டிய வாழ்த்துக்கள்.

நாம் காதலிக்கும் பெண்களுக்கெல்லாம் வெவ்வேறு பெயர் இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு எல்லாம் பொதுவான ஒரு பெயர் ‘அழகி’ தான்.. அவரவர் மனதில் இருந்து காதலியைப் பார்ப்பதால்..!

22 வருடம் கழித்து கூட காதலர்கள், காதல் மீது எந்த அளவிற்கு ஈர்ப்புடன் இருக்கிறார்கள் என்பதற்கான சான்று தான் இந்த படத்தின் ரீ ரிலீஸ். காதலர்கள் தோற்றுப் போகலாம். ஆனால் காதல் தோற்றுப் போகாது. அதனால் தான் இந்த அழகியும் தோற்கவில்லை.

சண்முகத்திற்கு ஒரு காதல் இருந்தது போல வளர்மதிக்கும் அப்படி ஒரு காதல் இருந்து அதை சொல்லியிருந்தால் சண்முகம் நொறுங்கி போயிருப்பார்.

பொதுவாக பெண்கள் குடும்பத்தை கவனித்து கொண்டு, கணவனை எல்லாவிதமாகவும் அரவணைத்து செல்வதால் காதலியை விட மனைவியை பலருக்கும் பிடிக்கும்.

இந்த போஸ்டரில் கூட நந்திதா தாஸின் படத்தை விட தேவயானியின் படத்தை பெரிதாக வைத்திருக்க வேண்டும்.

காரணம் நமக்கு கிடைக்காத ஒரு விஷயத்தின் மீது மிகப்பெரிய பூரிப்பு இருக்கிறது. ஆனால் கிடைத்த விஷயத்தின் மகிமை பற்றி நாம் புரிந்து கொள்வதே கிடையாது. அப்படி ஒரு மகிமையான கதாபாத்திரம் தான் வளர்மதி என நான் எப்போதுமே சொல்வேன்.

இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கிய இரண்டு நாட்களிலேயே நந்திதா தாஸ் என்னிடம், ‘எனக்கு இது செட் ஆகாது போல தெரிகிறது, நான் கிளம்புகிறேன்’  என்று கூறினார். ஆனால் படப்பிடிப்பில் நான் அவருக்கு வசனங்கள் சொல்லித்தந்து அந்த படத்தின் நடிக்க உதவினேன். இதை சமீபத்தில் கூட ஒரு பேட்டியில் அவர் கூறியுள்ளார்.

இந்த படத்தை பார்த்த பலரும், ‘பார்த்திபனின் காட்சிகளை அதிகப்படுத்துங்கள், அவருடைய குழந்தை பருவக் காட்சிகளை குறையுங்கள்’ என்று சொன்னார்கள். ஆனால் அந்த குழந்தைகளின் போர்ஷன் தான் படத்தின் வெற்றிக்கு மிகமிக முக்கிய காரணம்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “அழகி படத்தின் நாயகன்  சண்முகம் போன்ற ஒரு கால்நடை மருத்துவர். வசதியானவர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தனது காதலியை பார்த்தால் தனது வீட்டில் ஒரு வேலைக்காரியாக கொண்டு போய் சேர்த்து விட்டிருக்க மாட்டார். ஒரு குடிசை எடுத்து ஒரு தையல் மெஷின் வாங்கி கொடுத்து அங்கே அவளை கவுரவமாக வைத்திருக்க முடியும்.

இந்த சந்தேகத்தை முதல் நாள் படப்பிடிப்பிலேயே தங்கர் பச்சானிடம் கேட்டேன். ஆனால் இது காதலியை பற்றிய கதை இல்லை, ஒவ்வொருவரின் மனதிற்குள் இருக்கும் காதலைப் பற்றிய கதை என்று கூறி கேள்விகள் கேட்காமல் நடிக்கும்படி கூறிவிட்டார்.

அதே நேரம், இந்த குறை தெரியாத அளவுக்கு படத்தை இயக்கி இருந்தார். தங்கர் பச்சான் போன்ற இயக்குநரால்தான் இது முடியும். அவரைத் தேவிர வேறு யார் இயக்கி இருந்தாலும் இந்த மாஜிக் நடந்திருக்காது” என்றார் பார்த்திபன்.

Related Posts