“தொடர்ந்து பான் இண்டியா படங்கள் தயாரிப்போம்!” : ‘கேம் சேஞ்சர்’ தயாரிப்பாளர் தில் ராஜூ அறிவிப்பு!

“தொடர்ந்து பான் இண்டியா படங்கள் தயாரிப்போம்!” : ‘கேம் சேஞ்சர்’ தயாரிப்பாளர் தில் ராஜூ அறிவிப்பு!

‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தைத் தொடர்ந்து பான் இண்டியா படங்களை தயாரிக்க திட்டமிட்டு இருப்பதாக தயாரிப்பாளர் தில் ராஜூ தெரிவித்துள்ளார்.

இயக்குநர் ஷங்கர் நடிகர் ராம் சரணை வைத்து கேம் சேஞ்சர் என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்தில் ராம் சரண் இரட்டை கதாபாத்திரங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும், நடிகை கியாரா அத்வானி நாயகி, அஞ்சலி, எஸ்ஜே சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாரத்தில் நடித்துள்ளனர்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார். சாய் மாதவ் புர்ரா வசனங்களையும், இசையமைப்பாளர் தமன் இசையமைக்கும் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தை தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தை தில் ராஜூ உடன் இணைந்து ஆதித்யா குரூப் தமிழில் வெளியிடுகிறது. இதற்கான அறிவிப்பு நிகழ்ச்சி இன்று(நவ 5) சென்னையில் நடைபெற்றது. இதில், தயாரிப்பாளர் தில் ராஜூ, ஆதித்யா ராம் ஆகிய இருவரும் கலந்து கொண்டனர்.

அப்போது தயாரிப்பாளர் தில் ராஜூ பேசியதாவது, “கேம் சேஞ்சர் திரைப்படம் எனது 21 வருட தயாரிப்பு பயணத்தில் 50வது படம். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இயக்குநர் ஷங்கர் இந்த கதையை சொன்னபோது மிகவும் உற்சாகமாக இருந்தது. படம் முடிந்துவிட்டது. ஆதித்யா ராம் எனது நண்பர். கடந்த 2002ல் நான்கு தெலுங்கு படங்கள் தயாரித்தார். அதன்பிறகு சென்னையில் ரியல் எஸ்டேட் தொழிலில் பிஸியானார்.

ஒருநாள் இவருக்கு போன் செய்து கேம் சேஞ்சர் படம் எடுத்துள்ளேன்.‌ நாம் இருவரும் இணைந்து தமிழில் வெளியிடலாம் என்றேன். அவரும் ஆர்வமாக இருந்தார். நானும் ஆதித்யா ராமும் இணைந்து கேம் சேஞ்சர் படத்தை தமிழில் வெளியிடுகிறோம்.

இந்த படம் மட்டுமல்ல மேலும் தமிழ் படங்கள் தயாரிக்க திட்டமிட்டுள்ளோம். நானும் ஆதித்ய ராமும் இணைந்து தமிழ் மற்றும் பான் இந்தியா படங்கள் எடுக்க உள்ளோம். கேம் சேஞ்சர் படத்தின் டீசர் வருகிற 9ம் தேதி லக்னோவில் வெளியிடப்பட உள்ளது.

அதன்பிறகு அமெரிக்கா மற்றும் சென்னை உள்ளிட்ட இடங்களில் புரொமோஷன் நிகழ்ச்சி நடத்த உள்ளோம். இப்படம் அனைத்து இடங்களிலும் கலக்கும். ஷங்கர் படங்களில் எப்போதும் ஸ்பெஷல் இருக்கும். கமர்சியலான பாடல்கள், சமூக கருத்தும் இப்படத்தில் இருக்கும். ஆர்ஆர்ஆர் படத்துக்கு பிறகு ராம் சரண் உலகளாவிய நடிகராக மாறிவிட்டார்” என தெரிவித்தார்.