“புத்தக வாசிப்பு மனசுக்கு நெருக்கமானது!”: சீனு ராமசாமி
*’சினிமா டுடே’ வின் சர்வதேச டிஜிட்டல் கண்காட்சியை துவக்கி வைத்த, தேசிய விருது இயக்குனர் சீனு ராமசாமி, “டிஜிட்டலுக்கு உலகம் மாறினாலும் புத்தக வாசிப்பு என்றும் தொடரும்” என தெரிவித்தார்.

சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் ‘சினிமா டுடே’ எனும் பெயரில் உள்ள சினிமா ஆர்வலர்களின் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் 3 நாட்களுக்கு ன் கண்காட்சி மற்றும் விற்பனையை நடத்தி வருகிறது.
இந்த ஆண்டு கண்காட்சி இன்று ( ஜூலை 21) முதல் 23 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறும்
இதில், தமிழ் சினிமா முதல் உலக சினிமா வரை சினிமா தொடர்பான புத்தகங்கள், திரையுலக பிரபலங்கள் எழுதிய கவிதை மற்றும் சிறுகதை புத்தகங்கள், பிரபல சினிமா பத்திரிகையாளர்கள் சினிமா பற்றியும், திரையுலக பிரபலங்கள் பற்றியும் எழுதிய புத்தகங்கள், திரையுலக தொழில்நுட்ப கலைஞர்கள் எழுதிய திரைப்பட தொழில்நுட்பம் சார்ந்த புத்தகங்கள், திரைப்பட வியாபாரம் சார்ந்த புத்தகங்கள் … என சினிமாத்துறையின் அனைத்து தகவல்களையும் கொண்ட பல புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இங்கு நடை பெறுவது டிஜிட்டல் தொழில்நுட்பம் சார்ந்த கண்காட்சி என்றாலும், புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாகவும், சினிமா சம்மந்தமான பல அறிய தகவல்களைக் கொண்ட புத்தகங்களை சினிமா விரும்பிகளிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியாகவும் ‘சினிமா பத்திரிகையாளர் சங்கம் ‘ இந்த புத்தக விற்பனை மையத்தை திட்டமிட்டு அமைத்துள்ளது.
பிரபல திரைப்பட இயக்குநரும் எழுத்தாளருமான சீனு ராமசாமி , கண்காட்சியின் முதல் நாளான ஜூலை 21 ஆம் தேதி சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு சினிமா டுடே கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் புத்தக விற்பனை மையத்தை தொடங்கி வைத்தார்.

மேலும், பிரபல நடிகரும், நடிப்பு பயிற்சி ஆசிரியருமான ‘மெட்ராஸ்’ ஜெயராவ் சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் புத்தக விற்பனை மையத்தை பார்வையிட்டு வாழ்த்து தெரிவித்ததோடு, இயக்குநர் சீனு ராமசாமியின் கவிதை தொகுப்பான ‘புகார் பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை’ என்ற புத்தகத்தை சீனு ராமசாமியின் ஆட்டோகிராஃபுடன் வாங்கி சென்றார்.
வாழ்த்து தெரிவித்த இயக்குநர் சீனு ராமசாமி, “நான் எழுத்துலக ஊடகத்தின் மூலம் வளர்ந்தவன் என்பதால் ‘சினிமா பத்திரிகையாளர் சங்கத்’ தின் இந்த முயற்சியை ஊக்குவிக்க இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டேன். உலகமே டிஜிட்டலுக்கு மாறினாலும் புத்தக வாசிப்பு என்பது எப்போதும் நம் மனதுக்கு நெருக்கமானது . அது, எந்த நிலையிலும் மாறாது.

இளைய தலைமுறையினருக்கு புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாகவும், சினிமா தொடர்பான பல தகவல்களை கொண்ட புத்தகங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாகவும் அமைக்கப்பட்டுள்ள ‘சினிமா பத்திரிகையாளர் சங்கத்’தின் இந்த முயற்சியை பாராட்டி வரவேற்கிறேன். இந்த புத்தக விற்பனை மையத்தில் சினிமா பற்றிய பல தகவல்கள் கொண்ட ஏராளமான புத்தகங்கள் இருக்கின்றன. திரைப்படத்துறையை சார்ந்தவர்களுக்கு இந்த புத்தகங்கள் மிக அவசியமானதாக இருக்கும், குறிப்பாக உதவி இயக்குநர்கள் இதுபோன்ற புத்தகங்களை படித்தால், அவர்களுக்கு சினிமா என்றால் என்ன? என்பது எளிதில் புரிந்துவிடும்” என்றார்.

