பணம் பறிக்க திட்டம்! விஜயலட்சுமி மீது நாம் தமிழர் போலீசில் புகார்

பணம் பறிக்க திட்டம்! விஜயலட்சுமி மீது நாம் தமிழர் போலீசில் புகார்

சென்னை: நடிகை விஜயலட்சுமி மிரட்டுவதாக நாம் தமிழர் கட்சியினர் போலீசில் புகார் அளித்து உள்ளனர்.

சீமான் 2011ம் ஆண்டு என்னைத் திருமணம் செய்து கொள்வதாக கூறி, ஏமாற்றிவிட்டார் என வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நடிகை விஜயலட்சுமி புகார் அளித்திருந்தார். பின்னர், அப்புகாரின்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மீண்டும் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து சீமான் மீது வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

இதற்கிடையே, கடந்த 15ம் தேதி புகாரை வாபஸ் பெற்றார் நடிகை விஜயலட்சுமி. ஆனாலும் போலீசாரின் சம்மனை ஏற்று, வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.

எனினும்,  சீமான் மற்றும் நடிகை விஜயலட்சுமிக்கு இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. சமீபத்தில் நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட வீடியோவில், ‘‘என் மீது நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவதூறு பரப்பி வருகிறார். இதனால் நான் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன். எனது தற்கொலைக்கு சீமான்தான் காரணம்,’’ என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், சீமான் மீது பொய் புகார் அளித்து நடிகை விஜயலட்சுமி அவதூறு பரப்பி வருவதாக, வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை நிலைய செயலாளர் செந்தில்குமார் புகார் அளித்துள்ளார்.

அப்புகாரில், ‘‘தமிழர் முன்னேற்ற படை கட்சி தலைவர் வீரலட்சுமியின் தூண்டுதல்பேரில், நடிகை விஜயலட்சுமி பணம் பறிக்கும் நோக்கில் சீமான் மீது பொய் புகார் அளித்துள்ளார். அவரது திட்டம் நிறைவேறாததை அறிந்து, புகாரை வாபஸ் பெற்று சென்றுவிட்டார். உயர்நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. இந்நிலையில், நடிகை விஜயலட்சுமி மீண்டும் பணம் பறிக்கும் நோக்கில், சீமான் மீது அவதூறு பரப்புவதுடன், தனது தற்கொலை முயற்சிக்கு அவர்தான் காரணம் என வீடியோ வெளியிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. சீமான் மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வரும் நடிகை விஜயலட்சுமி மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என குறிப்பிட்டுள்ளார்.

Related Posts