மதத்தை வைத்து பிரச்சனை உருவாக்க வேண்டாம் சத்குரு வேண்டுகோள்..!
கோவை; இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வரும் இக்கட்டான சூழலில் மதத்தை வைத்து சமூகத்தில் தேவையற்ற பிரச்சினையை உருவாக்க வேண்டாம் என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:
கொரோனா வைரஸானது நம் தலைமுறையில் நாம் சந்திக்கும் மிகப்பெரிய சவாலாக உள்ளது. இந்த இக்கட்டான சூழலில் ஜாதி, மதம் மற்றும் இனத்தின் பெயரில் ஒரு பிரிவினையை உருவாக்க கூடாது. ஏதோ, ஒரு குறிப்பிட்ட மதத்தினரால் தான் இந்த நோய் தொற்று பரவுகிறது என்ற தவறான செய்தியை நாம் பரப்ப கூடாது.
உலகமே ஒரு மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டு இருக்கும் போது, நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்புரிய வேண்டியது அவசியம். அதைவிடுத்து, மதத்தை வைத்து சமூகத்தில் தேவையற்ற பிரச்சினையை உருவாக்க கூடாது.
இந்த விஷயத்தில் நாம் அனைவரும் மிகுந்த பொறுப்புணர்வோடும் விழிப்புணர்வோடும் நடந்து கொள்ள வேண்டும். கொரோனா வைரஸால் மிகப்பெரிய பேரழிவு ஏற்படாமல், சிறிய அளவிலேயே இந்த பிரச்சினையை நாம் முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு சத்குரு கூறியுள்ளார்.