சப்தம்: திரைப்பட விமர்சனம்
ஈரம் திரைப்படத்தில், தண்ணீரை அமானுஷ்யமாக காண்பித்து மிரட்டிய, இயக்குநர் அறிவழகன், சப்தம் படத்தில் ஓசைகளை அமானுஷ்யமாக்கி மிரட்ட முயற்சித்து இருக்கிறார்.
கதை நாயகன் ரூபன், மும்பையில் வசிக்கிறார். சப்தங்கள் மூலம் ஆவிகளை கண்டறிந்து பலரது பிரச்சினைகளை தீர்த்து வருகிறார். இந்த நிலையில் மூணாறு பகுதயில் செயல்படும் மருத்துவக்கல்லூரியில் மாணவிகள் தொடர்ச்சியாக தற்கொலை செய்துகொள்கிறார்கள். இதன் பின்னணியில் ஆவிகள் உள்ளனவா என கண்டறிய அவரை அழைக்கிறது கல்லூரி நிர்வாகம். ரூபனும் இங்கு வந்து தனது ஆராய்ச்சியை துவக்குகிறார்.
மாணவிகளின் மரணத்துக்கான பின்னணியை அவர் கண்டறிந்தாரா என்பதே மீதிக்கதை.
நாயகன் ரூபனாக, ஆதி நடித்து உள்ளார். வழக்கம்போலவே, பாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை அளித்துள்ளார். சிம்ரன், லட்சுமி மேனன், லைலா உள்ளிட்டோரும் சிறப்பாக நடித்து உள்ளனர்.
எம்.எஸ்.பாஸ்கர் சிறு வேடத்தில் வருகிறார். அவரது நடிப்பைப் பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை. அதே நேரம், அவரது கதாபாத்திரத்துக்கு இன்னும் முக்கியத்துவம் கொடுத்து அவருக்கான காட்சிகளை அதிகப்படுத்தி இருக்கலாம்.
தமனின் பின்னணி இசை அசத்தல். சப்தத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைக்கதை என்பதை உணர்ந்து மிகச் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். அதே போல ஒலி அமைப்பும் சிறப்பு. சிறு துளிகளாக விழும் நீர்த்திவலைகளின் சப்தத்தையும் சிறப்பாக ஒலிப்படுத்தி மிரட்டி இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் அருண்பத்மநாபனம் கவர்கிறார். அமானுஷ்யங்களை ஆராயும் ஆராய்ச்சிக்கூடம், கல்லூரி வளாகம் என ஒவ்வொரு காட்சியிலும் முத்திரை பதிக்கிறார்.
சபு ஜோசபின் எடிட்டிங் கச்சிதம்.
கலை இயக்குநர் மனோஜ் குமாரும் கவனம் ஈர்க்கிறார்.
தொழில் நுட்ப ரீதியில், மிரட்டி இருப்பதற்கு அடிநாதமான இயக்குநர் அறிவழகனை, உரத்து பாராட்டலாம். சிறப்பு.
ஒலிகளைக் கொண்டு, திரைக்கதையை நகர்த்தும் அவரது நேர்த்தி ரசிக்கவைக்கிறது.
கதாபாத்திரங்கள் வாயிலாகவும் காட்சிகளில் மிரட்டி இருக்கிறார். உதாரணம், லட்சுமிமேனன், தூக்கத்தில் கைகளை அசைக்கும் காட்சி.
மொத்தத்தில் பயந்து ரசிக்கலாம்.
