ரிப்பப்பரி : விமர்சனம்
![ரிப்பப்பரி : விமர்சனம்](https://tamilankural.com/wp-content/uploads/2023/04/Untitled-2.png)
கதை:
நாய் பொம்மை ஒன்றுக்குள் இருக்கும் பேய் ஒரு காதல் ஜோடிகளில் காதலன்களை கொன்றுவருகிறது. இவர்கள் எல்லோருமே வேறு வேறு சாதியைச் சேர்ந்த காதலர்கள். ஆகவே, சாதி மாறி காதலிப்பவர்களை கொல்லும், சாதி வெறி பேய் என்று ஊருக்குள் தகவல் பரவுகிறது.
கதையின் நாயகன் ராஜூவுக்கும் வேறு சாதிப் பெண் காதலியாகிறாள்.
இதற்கிடையே, ராஜின் உதவியை நாடி அவரின் நண்பன் ஒருவர் காதலியுடன் வருகிறார். எதிர்பாராத விதமாக அந்த நண்பரும் பேயால் கொல்லப்பட்டு இறந்துவிடுகிறார்.
இந்த நிலையில் ராஜூ மற்றும் அவரது இரு நண்பர்களிடம் போலீஸ் அதிகாரி பேய் விசயத்தைக் கூறி, கண்டுபிடிக்கச் சொல்கிறார்.
பிறகு என்ன ஆனது என்பதுதான் கதை.
கதாநாயகன் ‘மாஸ்டர்’ மகேந்திரன்.
மாஸ்டராக இருந்தபோது, பெரியமனுசத்தனமாக பேசி டார்ச்சர் செய்தார்.. மிஸ்டர் ஆனவுடன் சிறுபிள்ளைத்தனமாக நடித்து டார்ச்சர் செய்கிறார்.
அவரது நண்பர்களாக வரும் மாரி, நோபிள் ஜேம்ஸ் ஆகியோரும் சிரிப்பே வராத காமெடி செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.
கதாநாயகியாக ஆரத்தி பொடி. வேறொன்றும் சொல்வதற்கில்லை.
பேயாக வரும் ஶ்ரீனி, இன்ஸ்பெக்டர் கலியமூர்த்தியாக வரும் செல்லா, ‘உண்மை காதலன்’ கதாபாத்திரத்தில் நடிப்பவர் ஆகியோர் மட்டும் இயல்பாக நடித்து பாராட்டுக்களைப் பெறுகிறார்கள்.
படத்துக்கு ப்ளஸ் என்றால், இசைதான். இசையமைப்பாளர் திவாகர தியாகராஜனுக்கு பாராட்டுகள். பின்னணி இசையும் சிறப்பு.
அடுத்தபடியாக கவர்பவர் ஒளிப்பதிவாளர் தளபதி ரத்தினம். பசேலென்ற கிராமம், பேய் வரும் காட்சி என அசத்தி இருக்கிறார்.
குரங்கு பொம்மை, நாய், கால் இல்லாமல் அந்தரத்தில் தொங்கும் பேய் என அரதப்பழசான கான்செப்டுகளை எடுத்து பயமுறுத்த முயல்வது..
காதல், குடும்ப பாசம், ஆன்மிகம், நட்பு, சாதி பிரச்னை.. இப்படி ஏகத்துக்கு விசயங்களை எடுத்துக்கொண்டு எதையும் உருப்படியாக சொல்லாமல் விட்டிருப்பது..
இறுதிக்காட்சியில், தேவையில்லாமல் ‘பூவே உனக்காக’ விஜய் ரெஃபரன்ஸ் காட்சியை இணைத்தது.. முடியலை.
சிரிப்பே வராத காமெடி டிராக்குகள், ரசிக்கவைக்காத திரைக்கதை.. இயக்குநர் அருண் கார்த்திக் அடுத்த படத்தில் ஜொலிக்க வாழ்த்துகள்.