விமர்சனம்: மறக்குமா நெஞ்சம்!
பள்ளி, கல்லூரி முடித்து சொந்தத் தொழில் செய்து வருகிறார் நாயகன். பள்ளி இறுதித் தேர்வு எழுதி பத்தாண்டுகள் கழிந்த பிறகு பிரச்சினை ஒன்று வருகிறது. அதாதவது, அவர் இறுதித் தேர்வு எழுதிய ஆண்டில், இவரது பள்ளியில் தேர்வின் போது தில்லு முல்லு நடந்திருக்கிறது.. ஆகவே அப்போது படித்த மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு வந்து மூன்று மாதங்கள் படித்து மறுபடி இறுதித் தேர்வு எழுத வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.
இதை அடுத்து, அந்த பேட்ச்சை சேர்ந்த மாணவர்கள் மீண்டும் படிக்கிறார்கள்.
இந்த நிலையில், பள்ளி நாளில் சொல்லாத காதலை இப்போது தோழியிடம் சொல்லிவிட எத்தனிக்கிறார் நாயன்.
அந்த தோழிக்கோ, அப்போதுதான் திருமணம் நிச்சயம் ஆகி இருக்கிறது.
இறுதியில் என்ன ஆனது… தோழியிடம் காதலை சொன்னாரா.. அவள் ஏற்றுக்கொண்டாளா என்பதுதான் கதை.
தொலைக்காட்சி தொடர்களில் நடித்த ரக்ஷன், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பெரிய திரைக்கு வந்தார். இந்த படத்தில் நாயகனாக ப்ரமோஷன் ஆகி இருக்கிறார்.
காதலை நினைத்து உருகுவது, அதை வெளிப்படுத்தத் தயங்குவது என 90களின் நாயகர்களை நினைவு படுத்துகிறார். பாத்திரம் அறிந்து நடித்து உள்ளார்.
அவரது நண்பராக வரும் தீனா, நகைச்சுவை காட்சிகளில் ஜொலிக்கிறார். அதுவும், காதல் விவகாரத்தில் நண்பனை சீண்டும் காட்சிகளில் கூடுதலாகவே ரசிக்க வைக்கிறார்.
நாயகி மலீனா, அழகில் மட்டுமல்ல.. நடிப்பிலும் ஜொலிக்கிறார். இறுதிவரை தனது மனதை வெளிப்படுத்தாமல் முகத்தை சீரியஸாக வைத்திருக்கிறார்.
ப்ராங் ஸ்டார் ராகுலுக்கு சிறிய வேடம்தான். ஆனால் மனதில் பதியும்படி நடித்து உள்ளார்.
ஆச்சரியமான விசயம்.. முனீஸ்காந்த் அமைதியான கதாபாத்திரத்தில் வருகிறார். ஆசிரியராக வரும் அவர், தனது மனைவி இறந்த பிறகு வெளிப்படுத்தும் சோகம்.. நெகிழ வைக்கிறது. அவரது மனைவியாக வரும் அகிலாவும் இயல்பாக நடித்து இருக்கிறார்.
மொத்தத்தில் அனைவருமே பாத்திரம் அறிந்து நடித்து உள்ளனர்.
சச்சின் வாரியர் இசையில், பாடல்களும் பின்னணி இசையும் சிறப்பு.
பின்னணி இசையும் ஒகே தான்..
கோபி துரைசாமியின் ஒளிப்பதிவு படத்துக்கு பலம்.
பத்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் படிக்க வேண்டிய நிலை என்கிற கான்செப்ட் சிறப்பு. அதை ரசிக்கும்படியும் சொல்லி இருக்கிறார் இயக்குநர் இரா கோ யோகேந்திரன்.
ரசிகர்களை தங்கள் பள்ளிக்கனவு காலத்துக்கு இழுத்துச் செல்லும் படம்.
