விமர்சனம் : மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்

விமர்சனம் : மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்

சின்ன பட்ஜெட்டில் ஒரு பிரம்மாண்டமான திரைப்படம். ஆம்…  பெரிய ஹீரோ –  ஹீரோயின்கள் இல்லை… கிராபிக்ஸ் இல்லை.. உலக லெவல் லொகஷன்கள் இல்லை…

ஆனால் அற்புதமான திரைக்கதையால் நம்மை கட்டிப்போட்டு, பிரமிக்க வைக்கிறது, மாருதி நகர் போலீஸ் ஸ்டேசன்.

இதற்கு முதல் பூச்செண்டு பெறுபவர் –  இயக்குநர் தயாள் பத்மனாபன்.இரவில் பணி முடிந்து வரும் ஜெய்குமார், ஒரு பள்ளி மாணவி கடத்தப்படுவதைப் பார்க்கிறான். அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் சென்று புகார் அளிக்கிறான். அடுத்த நாள் ஜெய்குமார் இறந்து கிடக்கிறான்.

அவனுடன் ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்த நண்பர்கள், இந்த மரணத்திற்குப் பழிவாங்க நினைக்கின்றனர். ஆனால், அவர்கள் திட்டமிடுவதோடு சரி, அந்தத் திட்டம் தானாக நடக்கிறது. எப்படி எவரால் எனும் சுவாரசியத்தைக் கடைசி வரை தக்க வைத்துள்ளார் தயாள் பத்மனாபன்.

ஜெய்குமாராக மஹத் ராகவேந்திரா நடித்துள்ளார். அவரது மரணத்தில் இருந்து கதை துவங்கிறது. மஹத்தின் உற்ற நண்பர்களாக வரலக்ஷ்மி சரத்குமார், சந்தோஷ் பிரதாப், விவேக் ராஜகோபால், யாசர் ஆகியோர் நடித்துள்ளனர். மற்ற மூவரையும் இயக்கும் சக்தியாக அர்ச்சனா எனும் பாத்திரத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார் வரலக்ஷ்மி. சிறப்பான நடிப்பு. ஆனால் ஓய்வு பெற்ற காவல் அதிகாரியாக அவரைக் காட்டி இருக்கலாமோ என தோன்றுகிறது. ஏன் இத்தனை முதிர்ச்சி… தெரியவில்லை!இடைவேளை நேரத்தில்தான்  ஏசிபி நெடுஞ்செழியனாக கதைக்குள் வருகிறார்  ஆரவ். ஆகா… சிறப்பான நடிப்பு.

மிடுக்கான தோற்றம், எடுப்பான குரல், கூர் வாள் பார்வை என அசத்துகிறார் ஆரவ்.

இன்ஸ்பெக்டராக வரும் அமித் பார்கவ் மென்மையான(!) வில்லன். ரசிக்கவைக்கிறார்.

அதே போல இதுவரை இல்லாதபடி, அதிரடி வில்லனாக களம் இறங்கி இருக்கிறார், இயக்குநர் சுப்ரமணிய சிவா.  பல படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர்தான். ஆனால் இந்த படத்தில் எதிர்மறை கேரக்டரில் கலங்க வைத்துவிடுகிறார்.  பூட்டியிருக்கும் வீட்டினுள் அமர்ந்து அசால்ட்டாக சாப்பிடிக்கொண்டே, வீட்டு ஓனர்களை மிரட்டும் காட்சி.. அதி பயங்கரம்!

காமெடி போலீசாக வரும் அந்த குண்டு மனிதர், ரசிக்கவைப்பதோடு, இறுதியில் மிரள வைக்கிறார்.

கச்சிதமான எடிட்டிங்குக் சொந்தக்காரர்கள்,  ப்ரீத்தி – பாபு. இவர்களைப்போல அசத்தி இருப்பவர், ஒளிப்பதிவாளர் சேகர் சந்திரா.
பெரும்பாலான காட்சிகள் காவல் நிலையத்தையே சுற்றி வந்தாலும், கொஞ்சமும் அலுப்பு தட்டாமல், சுவாரஸ்யம் குறையாமல் இருப்பதற்கு இவரது பங்கு முக்கியமானது.

 மணிகாந்த் கத்ரியின் இசை, படத்துக்கு பலம்.

கன்னடத்தில் 21 படங்களை உருவாக்கி உள்ள, தயாள் பத்மனாபன்,  தமிழில் கொன்றால் பாவம் படத்தை இயக்கி கவனத்தை ஈர்த்தார்.

ஒரு த்ரில்லர் என்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் இரு விசயங்களைச்சொல்லி இருப்பது கூடுதலாக பாராட்டப்பட வேண்டியது.

மனித நேயத்தை போற்றிய.. அதற்கு எதிரான பார்ப்பனீயத்தை எதிர்த்த பசவண்ணர் பெயரிலான ஆதரவற்றோர் இல்லம் என காண்பிப்பது மன நிறைவை அளிக்கிறது… ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்தவ ஒருவர் தனது குடும்பத்துடன் சேர வாய்ப்பு கிடைக்கும்போது எடுக்கும் முடிவு… நெகிழ வைக்கிறது. இதை தனி படமாகவே எடுக்கலாம்.

மொத்தத்தில் மாருதி நகர் போலீஸ் ஸ்டேசன்  பார்த்து ரசிக்க வேண்டிய படம்!

ஆஹா ஓ.டி.டி.யில் வெளியாகிறது.

  • டி.வி.சோமு

 

 

Related Posts