“சமூக பொறுப்பு இல்லையா?” : ‘இரண்டாம் குத்து’ ‘ராக்போர்ட்’ முருகானந்தம் பேட்டி
கடந்த 20 ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என 148க்கும் மேற்பட்ட திரைப்படங்களை வெளியிட்டிருப்பவர், பிரபல திரைப்பட விநியோகஸ்தர் ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் முருகானந்தம்.
இந்நிறுவனம் ஹிப் ஆப் தமிழா ஆதிநாயகனாக அறிமுகமான ” மீசையை முறுக்கு”, கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் வெளியான “மேயாத மான்”, அஜீத்குமார் நடித்த “வேகம், விவேகம்”, அமலாபால் ஆடையின்றி நடித்து பரபரப்பை ஏற்படுத்திய “ஆடை” ஆர்யா நடிப்பில் வெளியான மகாமுனி, விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான கொலைகாரன், ஜெயம் ரவி நடித்தகோமாளி, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியானசிந்துபாத்.. இப்படி இவர் வெளியிட்ட படங்களின் பட்டியல் மிகப்பெரிது.
இந்நிலையில்தான், கடந்த 2019ல் முதல் முறையாக “குருதி ஆட்டம்” படம் மூலம் தயாரிப்பாளராக அடியெடுத்து வைத்தார்.
இதைத்தொடர்ந்து, மோகன் இயக்கத்தில், குழந்தைகளை மையமாக கொண்ட, காமெடி கமர்ஷியல் படத்தை இரண்டவாது படைப்பாக தயாரித்து வருகிறார்.
மேலும், மிஷ்கின் இயக்கத்தில்ஆண்ட்ரியா ஜெர்மீயா நடிப்பில் மூன்றாவது தயாரிப்பாக “பிசாசு 2” படத்தின் அறிவிப்பை வெளியிட்டு கோடம்பாக்கத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளார்
தவிர, பல படங்களின் விநியோக உரிமையயும் பெற்றுள்ளார். அவற்றில் ஒன்று, சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும், ‘இரண்டாம் குத்து’ படம்.
இது குறித்தும் மேலும் பல கேள்விகளுக்கும் அவர் நமக்கு அளித்த பதில்கள்…
திரைப்படத் தயாரிப்பு மிகவும் ஆபத்தானது என்று சொல்லப்படும் நேரத்தில் நீங்கள் தயாரிப்பில் இறங்கத் துணிந்தது எப்படி?
நல்ல படங்களைச் சரியாக மார்க்கெட்டிங் செய்தால் வெற்றி நிச்சயம் என்பது நான் கற்றுக்கொண்ட பாடம். எனவே நம்பிக்கையுடன் படத் தயாரிப்பில் இறங்கியிருக்கிறேன்.
விநியோகஸ்தர்களின் ரீஃப்ண்ட், திரையரங்கு வசூலில் வெளிப்படைத்தன்மையின்மை ஆகியன குறித்து..?
ஒரு படம் நன்றாக ஓடும் என்று நம்பி வெளீயிடுகிறோம். அது தப்பாகிவிட்டால் ரீஃப்ண்ட் கொடுக்கவேண்டி வரும். நாம் தொடர்ந்து இந்த வியாபாரத்தில் இருப்பதால் அடுத்தடுத்த படங்களில் சரி செய்துவிடலாம்.
திரையரங்கு வசூலைப் பொறுத்தவரை எங்காவது ஒரு சில இடங்களில் வசூலில் வெளிப்படைத் தன்மை இல்லாமல் இருக்கலாம். பெரும்பாலும் எல்லாம் சரியாகவே இருக்கிறது.
திரையரங்குக்காரர்கள் வசூல் தொகையைப் பல மாதங்கள் தராமல் இழுத்தடிக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறதே?
முதல்நாள் வசூலை அடுத்த நாளே தருகிறவர்களும் இருக்கிறார்கள். மாதக்கணக்கில் இழுக்கிறவர்களும் இருக்கிறார்கள். இவற்றையெல்லாம் சமாளித்துத்தான் தொழில் செய்தாக வேண்டும்.
நடிகர்களின் சம்பளம் அதிகமாக இருப்பதால் திரைப்படத் தொழில் நசிவதாகச் சொல்லப்படுவது பற்றி..?
உண்மைதான், சில படங்களில் படத்தின் மொத்தச் செலவைக் காட்டிலும் நடிகரின் சம்பளம் அதிகம் என்றாகிறது. அங்கு தொடங்குகிற சிக்கல் திரையரங்கில் அதிக விலைக்கு டிக்கெட் விற்கச் சொல்வதுவரை வந்து நிற்கிறது.
தயாரிப்பாளர்களுக்குள் முழுஒற்றுமை ஏற்பட்டால்தான் இச்சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காணமுடியும்.
நீங்கள் வெளியிடும் இரண்டாம்குத்து சர்ச்சைக்கு ஆளாகியிருக்கிறதே?
இயக்குநரின் முந்தைய படங்கள் வெற்றி மற்றும் அதனுடைய பட்ஜெட் போன்ற விசயங்களைப் பார்த்துத்தான் படங்களை வாங்கி வெளியிடுகிறோம். நான் படம் பார்க்கவில்லை.
சர்ச்சை வந்துவிட்டபின் படத்தில் மாற்றம் செய்யப்போகிறீர்களா?
அது முழுக்க முழுக்க இயக்குநரின் உரிமை. அதில் நான் தலையிடமாட்டேன்.
உங்களுக்கு சமுதாயப் பொறுப்பு இல்லையா?
இருக்கிறது. எங்கள் வியாபாரத்தில் அத்திபூத்தாற்போல் இதுபோன்ற சிக்கல்கள் வருவதுண்டு.அவற்றைச் சரி செய்து வெளியிடுவோம்.
பூமி படத்தின் சென்னை செங்கல்பட்டு தவிர தமிழக விநியோக உரிமை பெற்றிருக்கிறீர்கள். அது நேரடியாக இணையத்தில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறதே?
அதுகுறித்து தயாரிப்பாளருடன் பேசியிருக்கிறோம். எல்லாம் நல்லபடியாக நடக்கும்.
-யாழினி சோமு