“சக மனிதனுக்காகவே எப்போதும் வாழ்வேன்!”: மகன் இறுதிச் சடங்கில் சைதையார் சூளுரை! கதறி அழுத மக்கள்!

சென்னை: சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகனும், திரைப்பட இயக்குநருமான வெற்றி துரைசாமி, விபத்தில் பலியானார். அவரது உடல் கண்ணம்மாபேட்டை மயானத்தில் நேற்று தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில், தனது மகனை தகனம் செய்த பிறகு மயானத்தில் சைதை துரைசாமி உருக்கமாக பேசினார். “இந்தியா முழுக்க, தமிழகம் முழுக்க ஆயிரக்கணக்கான மாணவர்கள் அரசுப் பணியில், அரசின் உயர் பதவியில் ஐஏஎஸ், ஐஆர்எஸ் பணிபுரியும் வாய்ப்பை பெற்ற அனைத்து மகன்களும், மகள்களும் இங்கு வந்துள்ளனர். இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து பல்வேறு பணிகளை எல்லாம் விட்டுவிட்டு இந்த நிகழ்வில் கலந்துகொண்டு எனக்கு ஆறுதல் சொல்ல வந்த அவர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனது ஒரு மகன் போனாலும் எனக்கு பக்கபலமாக என்னுடைய இத்தனை மகன்கள், மகள்கள் இருக்கின்றார்கள் என்ற மனவலிமை கொள்கிறேன்” என்றார்.
அப்போது அவரது குரல் தழுதழுத்தது. மயானத்தில் கூடியிருந்த மக்கள் பலர் கதறி அழுதனர்.
தொடர்ந்து பேசிய சைதை துரைசாமி, “சக மனிதனுக்காக வாழ வேண்டும். சமூக நீதி என்பது பொருளாதாரத்தால் தடைபட்டு விடக் கூடாது. அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களையும் அரசுப் பணியில் அமர வைப்பது எனது லட்சியம். இதனை எனது மகன் மரணத்தில் நான் உறுதி ஏற்கிறேன். அதை நோக்கி தொடர்ந்து பயணித்து, சக மனிதனுக்காக வாழ்ந்து, என மகனின் ஆன்மா சாந்தியடையும் வகையில் அந்த சேவையை அபிவிருத்தி செய்வேன் என தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு ஆறுதல் சொன்ன அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
நான் மனம் கலங்க மாட்டேன். காரணம், இத்தனை மகன்களை, மகள்களை நான் பெற்றுள்ளேன். அவர்கள் எல்லோரும் இருக்கிறார்கள். அதனால் இன்னும் வலிமையோடு பயணிப்பேன். அதை நான் உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். அந்த பாதையில் நான் பயணிப்பேன் என சூளுரைக்கிறேன்” என அவர் தெரிவித்தார்.
அவரது உரை அனைவரையும் நெகிழ வைத்தது.