‘டைரி’, ‘புல்லட்’ தொடர்ந்து அடுத்த அதிரடி: சொந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய இன்னாசி பாண்டியன்!
திரைவுலகில் தனது முதல் அடி வைக்கும்போதே ‘டைரி’ எனும் விறுவிறுப்பான திரில்லர் மூலம் ரசிகர்களைக் கட்டிப்போட்டவர் இயக்குநர் இன்னாசி பாண்டியன். அந்தப் படம் வெளியாகி நான்கு ஆண்டுகள் உருண்டோடிவிட்ட நிலையிலும், இன்றளவும் சமூக வலைதளங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. ரசிகர்களின் இந்தத் தீராத அன்பிற்குத் தன் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்கியுள்ளார் இயக்குநர்.
அடுத்ததாக, ராகவா லாரன்ஸ் மற்றும் எல்வின் இணைப்பில் உருவாகியுள்ள தனது இரண்டாவது படைப்பான ‘புல்லட்’ படத்தின் பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்து, திரையரங்கு வெளியீட்டிற்குத் தயார் செய்துவிட்ட வேளையில், திரைப் பயணத்தின் அடுத்த பாய்ச்சலுக்கு அடி எடுத்து வைத்துள்ளார்.
இயக்குநரிலிருந்து தயாரிப்பாளராக அவதாரமெடுத்து, ‘Western Ghats Pictures LLP’ எனும் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
மேற்கு தொடர்ச்சி மலைகளின் அழகுக்கும், தனது சொந்த வாழ்க்கையின் வேர்களுக்கும் இடையிலான ஆழமான பிணைப்பைப் பிரதிபலிக்கும் விதமாகவே இந்த அழகிய பெயரைத் தேர்வு செய்துள்ளதாக இன்னாசி பாண்டியன் பகிர்ந்துள்ளார்.
தன் சொந்தக் கொடியின் கீழ், முதல் தயாரிப்பை மிக விரைவில் வெள்ளித்திரைக்குக் கொண்டுவரும் துடிப்புடன் புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளார் இந்த இளம் இயக்குநர்.

