கூலி: திரை விமர்சனம்
சென்னையில் மேன்ஷன் நடத்தி வருகிறார் ரஜினி. விசாகப்பட்டினத்தில் இருக்கும் தனது உயிர் நண்பன் சத்யராஜ் இறந்த செய்தி கிடைக்கிறது. அங்கு செல்கிறார். நண்பன் மரணம் இயற்கையானது அல்ல, கொலை என்று அவருக்குத் தெரியவருகிறது.
கொலைக்குக் காரணம் யார் என ஆராய ஆரம்பிக்கிறார். அது, விசாகப்பட்டினம் துரைமுகத்தில் பலவித சட்டவிரோத செயல்களைச் செய்யும் நாகார்ஜூன் வரை செல்கிறது. அங்கே அவரது விசுவாசியாக இருக்கும் சவுபின் ஷாகிர், போலீசுக்கு உளவு சொல்பவர்களை துறைமுகத்தில் மற்ற தொழிலாளர்கள் முன்னிலையிலேயே கொடூரமாக கொலை செய்கிறார்.
அதன் பிறகு நடந்தது என்ன… நண்பனை கொன்றவரை ரஜினி கண்டுபிடித்து பழிவாங்கினாரா என்பதே மீதிக்கதை.
நடுத்தர வயதைக் கடந்தவராக.. ஆனால் வழக்கம் போல கெத்ஆக வருகிறார் ரஜினி. “தெய்வம் நின்று கொல்லும்… குடி அன்னனைக்கு கொல்லும்” என்று அவர் சொல்லும் போது தியேட்டரில் அதிர்வலை. சண்டைக் காட்சிகளில் எப்போதும் போல அனல் பறத்துகிறார். குறிப்பாக,,,,,, விசாகப்பட்டினம் துறைமுகத்தில் அவர் காட்டும் அதிரடி, வில்லன் சவுபின் ஷாகிருக்கும் அவருக்குமான மோதல் இன்னும் ஸ்பெசல்.
அதே நேரம், மகளை நேரில் கண்டும் தன்னை வெளிப்படுத்த முடியாத தந்தையாக… ஆகா.. அந்த காட்சியில் நடிப்பு அற்புதம்.
இவருக்கு அடுத்து குறிப்பிடப்பட வேண்டியவர், சவுபின் ஷாகிர்தான். கொடூர வில்லனாக வந்து மிரட்டுகிறார் மனிதர். காட்சிகளுக்கு ஏற்ப அவரது முகபாவமும், கண்களும் கதகளி ஆடுகின்றன.
நடனக் காட்சியிலும் தூள் பறத்தி இருக்கிறார். பேச்சில் மலையாள வாடையை நீக்கி இருக்கலாம்.

இன்னொரு வில்லன் நாகார்ஜூனா, ஸ்டைலிஷாக வருகிறார். சிறப்பாக நடித்து உள்ளார். ஆனால் ஹீரோவாக பார்த்த அவரை வில்லனாக பார்க்க முடியவில்லை.
அவரது மகனை காதலிப்பவராக வரும் ரச்சிதாராம், நடிப்பில் அசத்தி இருக்கிறார். அவர் தன்னை வெளிப்படுத்தும்போது நாம் அதிர்கிறோம்.
சத்யராஜ் சில காட்சிகள் வந்தாலும், வழக்கம்போல் மனதைக் கவர்கிறார்.
ஸ்ருதிஹாசன் படம் முழுக்க வருகிறார். ஆனால் பெரிய வேலை இல்லை. கொடுத்த பணியை சிறப்பாக செய்திருக்கிறார்.
கிளைமாக்சில் ஒரு சண்டைக்காட்சியில் வருகிறார்கள் கன்னட ஹீரோ உபேந்திராவும், இந்தி ஹீரோ அமீர்கானும்.
அனிருத் இசை வழக்கம் போல் அதிரடி.
வழக்கமான ரஜினி படங்கள் போல காமெடி, பன்ச் டயலாக் இல்லாமல், வித்தியாசமான அதிரடி திரைப்படம் கூலி. வன்முறை அதிகம், லாஜிக் மீறல் என சில மைனஸ்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் காட்சிகளின் ஓட்டத்தில் அவை குறைகளாக தென்படவில்லை.
ரஜினி ரசிகர்கள் கொண்டாடுவார்கள்.
