“யு டியுப் பொய்கள்! என் குழந்தைகள் வேதனை!”: ஆர்த்தி ரவி வேதனை அறிக்கை!

நடிகர் ஜெயம்ரவி, இயல்பான நடிப்புக்கு பெயர் பெற்றவர். தவிர, எந்தவித காண்ட்ரவசியிலும் சிக்காதவர்.
பிரபல தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் – தொழிலதிபர் விஜயகுமார் ஆகியோரின் மகள் ஆர்த்தியை, பதினெட்டு வருடங்குக்கு முன் திருமணம் செய்துகொண்டார். காதல் திருமணமான இதை, இரு வீட்டாரும் ஏற்க… கோலோகலமாக திருமணம் நடைபெற்றது.
இதற்கிடையே கடந்த சில மாதங்களாக, தம்பதிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக யூகச் செய்திகள் பரவின. இந்நிலையில் இரு நாட்களுக்கு முன், ஜெயம் ரவி, மண வாழ்க்கையில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
மேலும், “மிகுந்த துன்பமளிக்கும் இந்த முடிவை, நீண்ட யோசனைக்குப் பிறகே எடுத்தேன். இது எனது மற்றும் நான் சார்ந்தோரின் தனிப்பட்ட விசயம். அதற்கான பிரைவசியை அளியுங்கள்” என்று அனைவரிடமும் கேட்டுக்கொண்டார்.
ஆனாலும் சில யு டியுப் சேனல்களில் ஆதாரமற்ற – தரக்குறைவான பேச்சுக்களை சிலர் பேசி வந்தனர்: வருகின்றனர்.இந்நிலையில் ஜெயம் ரவியின் கருத்து குறித்து ஆர்த்தி ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்.
அதில் அவர், “ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் எங்கள் திருமண வாழ்க்கை குறித்து வெளியான அறிக்கையை பார்த்து நான் கவலையும் மன வேதனையும் அடைந்தேன்.
இது முழுக்க முழுக்க என் கவனத்திற்கு வராமலும், என் ஒப்புதல் இல்லாமலும் வெளியான ஒன்று.
பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதையுடன் கடந்த 18 வருடங்களாக நான் வாழ்ந்த வாழ்க்கை இந்த ( அறிக்கையின் மூலம் அதற்குரிய கௌரவம், கண்ணியம் மற்றும் தனித்தன்மையை இழந்துவிட்டதாக நான் உணர்கிறேன்.
என் கணவரிடம் மனம் விட்டு பேச, என் கணவரை சந்திக்க வேண்டும் நான் சமீபகாலமாக பலவித முயற்சிகள் செய்தேன். ஆனால் அதற்கான வாய்ப்பு எனக்கு மறுக்கப்பட்டது. நானும் என் இரண்டு குழந்தைகளும் எதுவும் புரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம்.
திருமண பந்தத்தில் இருந்து விலக வேண்டும் என்ற இந்த முடிவு முழுக்க முழுக்க தனது சொந்த விருப்பத்தை சார்ந்து அவராகவே எடுத்த முடிவு. குடும்ப நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு அல்ல….!
ஆழ்ந்த மன வேதனையில் இருக்கின்ற நிலையிலும் நான் பொதுவெளியில் இது குறித்து கருத்து தெரிவிப்பதை தவிர்க்கவே இப்போதும் விரும்புகிறேன்.
ஆனால் என் மீது குற்றம் சாட்டியும் என் நடத்தையின் மீது களங்கம் கற்பிக்கும் வகையிலும் பொதுவெளியில் மறைமுகமாக நடத்தப்படும் தாக்குதல்களை மிகுந்த சிரமத்துடன் எதிர்கொள்ள வேண்டி உள்ளது. ஒரு தாயாக எனக்கு எப்பொழுதும் என் குழந்தைகளின் நலனும், எதிர்காலமுமே முதல் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என் குழந்தைகளை காயப்படுத்துவதை என்னால் அனுமதிக்க இயலாது.
மறுக்கப்படாத பொய்கள் காலப்போக்கில் உண்மையாக நம்பப்படும் என்பதால் இவற்றை மறுப்பதும் என் முதல் கடமையாகிறது. தற்போது இந்த கடினமான காலகட்டத்தில் என் குழந்தைகளுக்கு தேவைப்படும் தைரியத்தையும், மனோதிடத்தையும் அவர்களுடன் ஒருத்தியாக நின்று அவர்களுக்கு வழங்குவதே என் தலையாய கடமை.
இந்த கடின காலத்தை நானும் என் குழந்தைகளும் கடக்கும் வரை எங்கள் தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இத்தனை காலமாக எங்களுக்கு ஆதரவு மட்டுமன்றி நல்வழி காட்டி வரும் பத்திரிக்கை ஊடக மற்றும் ரசிகப் பெருமக்களுக்கு என் மனமார்ந்த நன்றி. உங்கள் அன்பும் ஆதரவும் மட்டுமே என்னையும் என் குழந்தைகளையும் இந்த காலகட்டத்தில் தூணாக காத்து நிற்கும். இந்த சோதனையில் இருந்து நாங்கள் மீண்டு வர உங்கள் பிரார்த்தனைகள் துணை நிற்க வேண்டும் என்று உங்களை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்” என்று ஆர்த்தி ரவி தெரிவித்து உள்ளார்.