“கெட்டவன் எல்லாம் ஹீரோவா இருக்கான்!”: ‘கூரன்’ விழாவில் யாரைச் சொன்னார்எஸ்.ஏ.சி.?
“கெட்டவன் எல்லாம் ஹீரோவா இருக்கான்!”என ‘கூரன்’ திரைப்பட விழாவில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் சொன்னது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விலங்குகளை மையமாக வைத்து தமிழ் சினிமாவில் அவ்வப்போது திரைப்படங்கள் வருவதுண்டு. அவை பிரம்மாண்ட வெற்றியும் பெற்றிருக்கின்றன. அந்த வகையில் நாயை மையமாக வைத்து சமீபத்தில் கூட ’அலங்கு’ எனும் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. மீண்டும் நாய் ஒன்றை மையக்கதாபாத்திரமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் தான் ’கூரன்’.
செல்லப்பிராணியாக இல்லாமல், நாய் ஒன்று தனக்கு நியாயம் கிடைக்க நீதிமன்றம் சென்று போராடுவது போல ஒரு வித்தியாசமான கதைக்களத்தில் இப்படம் அமைந்துள்ளது. இப்படத்தில் மிக சிறப்பாக பயிற்சி பெற்ற பைரவா எனும் நாயை நடிக்க வைத்துள்ளனர்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. அதில் முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா சஞ்சய் காந்தி சிறப்பு விருந்திநராக கலந்துகொண்டார். பிப்ரவரி 28ஆம் தேதி வெளியாக உள்ள ’கூரன் ’திரைபடத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேபிள் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் எஸ்.ஏ. சந்திரசேகர், கவிதா பாரதி, ஜார்ஜ், இந்திரஜா, இசையமைப்பாளர் சித்தார்த் விபின், பாடலாசிரியர் முத்தமிழ், தயாரிப்பாளர் விக்கி, இயக்குநர் நிதின் வெம்பட்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் தோன்றி உள்ள, பைரவா என்கிற நாயும் மேடையேற்றப்பட்டது.
விழா மேடையில் பைரவா நாய் குலைப்பதற்கு இசையமைப்பாளர் சித்தார்த் விபின் மொழிபெயர்த்து பேசினார். மிக வித்தியசாமான இந்த நிகழ்வை அனைவரும் ரசித்தனர்.
நிகழ்வில் பேசிய எஸ்.ஏ சந்திரசேகர், ”என்னுடைய 45 வருட சினிமா வாழ்க்கையில் முதன்முதலாக வித்தியாசம் என்பதை உணமியாக உணர்ந்த ஒரு படம் கூரன் தான். படத்தை பார்க்கும்போது நீங்களும் இதை சொல்வீர்கள். இந்த படத்தில் நாய் தான் கதாநாயகன். ஒரு ஈ, பாம்பு, யானை என இவையெல்லாம் பழி வாங்குவதையெல்லாம் பார்த்து அதனை ஹிட் படங்களாக மாற்றினோம்.
இந்த படத்தில் பழிவாங்க நாய் நீதிமன்ற வாசலுக்கு வருகிறது. படத்தில் ஹீரோயின், டான்ஸ் இது போன்ற எதுவும் கிடையாது. இதனால் இது ஒரு வித்தியாசமான படம். படத்தில் நடித்துள்ள பெரும்பாலன நடிகர்கள் வயதானவர்கள். இதுவும் ஒரு வித்தியாசம். நான் மனதை எப்பொழுதும் சந்தோசமாக வைத்திருக்கிறேன்.
எனது மனதை பாரமாக வைத்திருக்க விரும்புவதில்லை. நான் வீட்டில் உட்கார நினைப்பதில்லை. காலையிலேயே அலுவலகத்திற்கு வந்து விடுவேன். எப்போதும் வேலை செய்துகொண்டே இருக்க வேண்டும். ஜனவரி மாத குளிரில் படப்பிடிப்பு ஆரம்பித்தோம். கொடைக்கானலில் பயங்கரமாக குளிராக இருக்கும். நடுங்கிக் கொண்டே படப்பிடிப்பிற்கு போவோம்.
அங்கு வேலை செய்ய ஆரம்பித்தவுடன் நடுக்கமும் குளிரும் போய்விட்டது. எனக்கு இப்போது வரை பெரிதாக காய்ச்சல் வந்ததே இல்லை. ஆனால் அங்கு எதிர்பாராமல் வந்துவிட்டது. பின்னர் வேலை செய்ய ஆரம்பித்ததும் அதுவும் சரியாகிவிட்டது. இந்த படத்தின் கதையை சொல்லும் போது அதில் இருக்கும் content எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
எனது 70 படங்களில் 50 படங்கள் மனிதன் தான் நீதிமன்றத்துக்கு செல்வது போன்று எடுத்திருக்கிறேன். ஆனால் இதில் நாய் நீதிமன்றம் செல்கிறது. அது என் செல்கிறது என்பதுதான் எமோஷன். முன்பெல்லாம் இயக்குநர் வேற, எழுத்தாளர் வேற அனைத்திற்கும் தனித்தனி ஆட்கள் இருந்தனர். இப்போது அவ்வாறு இல்லை.
ஒரு எழுத்தாளர் என்று சொன்னாலே அவருக்கென்று ஒரு பொறுப்புணர்வு வேண்டும். ஏனென்றால் நாம் நடிகர்களை தாண்டி இயக்குநர்களையும் கொண்டாடுகிறோம். இப்போது இயக்குநர் தான் எழுத்தாளர். மனிதர்களை பார்த்து உத்வேகம் அடைவது போல படங்களைப் பார்த்தும் உத்வேகம் அடைகிறார்கள்.
சில படங்களை பார்க்கும் போது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. ஏனென்றால் எழுத்தாளன் என்பவன் படம் பார்ப்பவர்களுக்கு முன்னோடியாக இருக்க வேண்டும். கத்தியை எடுத்து கையை வெட்டுவது காலை வெட்டுவது என்பது போல படங்கள் வெளியாகின்றன. இந்த மாதிரியான படங்களை பார்க்கும் இளைய சமுதாயத்தை என்னவாகும். அவர்கள் பொறுப்புணர்வோடு இருக்க வேண்டும். ஒவ்வொரு படமும் நல்ல விஷயத்தை ஒரு பாடத்தை எடுக்க வேண்டும்.
அந்த காலத்து படங்கள் அனைத்தும் அவ்வாறுதான் இருந்தது. இப்போதும் நல்ல படங்கள் வருகின்றன. இந்த படத்தில் சண்டை காட்சிகளே இல்லை. ஆனால் சண்டை காட்சி இல்லை என்றால் படம் சொத சொத என்று சாம்பார் போல இருக்கிறது என்பார்கள். ஆனால் நாம் இந்திய சுதந்திரமே அகிம்சை வழியில் தான் பெற்றோம்.
காந்தியடிகளின் அகிம்சை தான் வெள்ளையர்களை துரத்தி அடித்தது. இதுவும் அகிம்சையான படம்தான். ஆனால் பவர்புல்லான படம். ஒரு காலத்தில் வில்லன்கள் ஒரு பெண்ணை கற்பழிப்பவன் சண்டை போடுபவன் கொலை செய்பவன் என்றெல்லாம் இருந்தார்கள். ஆனால் இந்த காலத்தில் அதையெல்லாம் கதாநாயகன் தற்போது செய்கிறார். யார் கதாநாயகன், வில்லன் என்றே தெரியவில்லை.
சினிமா மாதிரியான பயங்கரமான ஆயுதம் வேறெதுவும் இல்லை. அந்த ஆயுதத்தை சரியாக பயன்படுத்தினால் இளைய சமுதாயத்தை திருத்த முடியும். இப்போதிருக்கும் இயக்குநர்களுக்கு அந்த பொறுப்புணர்வும் சமூக உணர்வும் வேண்டும். பத்து வருடங்களாக நடிகராக இருக்கிறேன். நான் நடித்ததில் மிக திருப்தியான படம் இதுதான்.
எனக்கு புரொமோஷன் செய்வது பிடிக்காது. அதனால் தான் எனது மகன் விஜய்க்கு கூட புரொமோஷன் செய்யவில்லை. விஜய்காந்துடன் நான் இணைந்த படங்களில் எல்லாம் புதுமுக தொழில்நுட்ப கலைஞர்களை தான் பயன்படுத்தினேன். அதற்கு காரணம் படத்தின் வெற்றி எல்லாம் பெரிய கலைஞர்களின் கைகளில் போய்விடும்.
அது அந்த படத்தின் கதாநாயகனின் வெற்றியாக இருக்காது. அதனால்தான் புதுக கலைஞர்களை பயன்படுத்தினேன். இப்படிதான் கதாநாயகனை உருவாக்க முடியும். விஜய்யின் முதல் பத்து படங்களிலும் இதைதான் செய்தேன். அதனால்தான் விஜய் கதாநாயகனாக மக்களிடையே சென்றடைந்தார். ’கூரன்’ படம் ஒரு சிறந்த படம். படம் நன்றாக இல்லை என்றால் இப்படத்தை புரொமோஷன் செய்ய வேண்டாம்” என பேசினார்.
நிகழ்ச்சி மேடையில் பேசிய இயக்குனர் நிதின் வெம்பட்டி, “நான் கதை எழுதிவிட்டு நாய் மாதிரி தான் அலைந்தேன். ஆனால் கனா புரொடக்ஷன் எனக்கு வாய்ப்பு கொடுத்தது. ஒரு கம்பனியில் கதை சொன்னேன். நாய் ஒரு மனிதன் மீது வழக்கு பதிவு செய்கிறது என்று கதையை சொல்லி ஆரம்பிக்கும்போது வெளியே போடா இன்று என்னை அனுப்பி விட்டார்கள்.
இராமாயணம் காலத்தில் ஒரு சபையில் நாய் ஒரு வழக்கு கொடுத்து ராமன் அதற்கு நியாயம் வாங்கி கொடுத்தார். இது ஒரு வரலாறு, இதுதான் என்னுடைய எண்ணம். இந்த படத்தில் நாயும், எஸ் ஏ சந்திரசேகர் சாரும் நடிக்கவில்லை. கதையில் வாழ்ந்துள்ளனர்” என பேசினார்.

